search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி"

    • மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது.
    • எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி 154' என்ற பெயரில் மூக்கு வழியே செலுத்துகிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.

    இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து, 'இன்கோவாக்' என்ற வணிகப்பெயருடன் சந்தைக்கு வருகிறது. இந்த தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை கடந்த நவம்பர் மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக (முன்எச்சரிக்கை டோஸ்) வழங்குவதற்கு கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இந்த தடுப்பு மருந்து 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது.

    இந்த தடுப்பு மருந்து கோ-வின் தளத்தில் இப்போது கிடைக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான இந்த தடுப்பு மருந்து ஒரு 'டோஸ்' விலை ரூ.800 ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த தடுப்பு மருந்து ரூ.325 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பு மருந்து, பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுந்தது. இது தொடர்பாக கொரோனா தடுப்புக்குழு தலைவர் டாக்டர் அரோரா விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை பூஸ்டராக பயன்படுத்தலாம் என்று சொல்லி உள்ளனர். ஆனால் ஏற்கனவே கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இதுவரை கொரோனாவுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பு மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    ஆனால் 4-வது முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே 2 தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசியும் பெற்று உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே உள்ளது.

    எனவே 4-வது பூஸ்டர் தடுப்பூசிக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மிக எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

    மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
    • சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

    இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

    ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

    முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது.

    சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சீனாவில் கொரோனா மேலாண்மையை 'ஏ' வகுப்பில் இருந்து 'பி' வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர். அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச பயணிகள், சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது. அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, "உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல" என கூறுகின்றனர்.

    சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர்.

    சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    ஆனால் அங்கே தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடு வீடாக செல்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தடுப்பூசியா, வேண்டவே வேண்டாம் என்று முதியோர் ஓடுகிற நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதால் ஏற்படுகிற கடும் காய்ச்சல், ரத்தக்கட்டிகள் மற்றும் பிற பக்கவிளைவுகளால்தான் தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓடுகிறார்கள்.

    இதுபற்றி 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசியினால் ஏற்படுகிற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.

    என் நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. ரத்தக்கட்டிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எனது நண்பர் இன்னொரு டோஸ் தடுப்பூசி போட விரும்பவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசிகள் எந்த அளவு பலன் அளிக்கும் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் ஷாங்காய் புடன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஜியாங் ஷிபோ கூறுகையில், "முதியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களுக்கு தொற்று என்பது ஆபத்தானது, அதனால் மரணமும் நேரிடக்கூடும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

    • சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
    • அனைத்து சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஜப்பான் அரசு கூறியது.

    டோக்கியோ:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. அதன் பரிசோதனை தரவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்டது.

    இந்த தரவுகளை மத்திய அரசு ஆய்வு செய்து மூக்கு வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23-ந்தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதன்படி ஒரு டோசின் விலை ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் உண்டு. இதனால் அனைத்தையும் சேர்த்து ரூ.1000 ஒரு டோசுக்கு செலவாகும்.

    ஒரு டோசில் 4 சொட்டுகள் கிடைக்கும். ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும். இந்த தடுப்பு மருந்தை கோவேக்சின், கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்துக்கொள்ளலாம்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26-ந்தேதிக்குள் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.

    • சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • 2021, அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது.
    • கடந்த ஜூலை 17-ம் தேதி 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியது.

    புதுடெல்லி:

    உலக அளவில் கொரோனா வைரஸ் 65 கோடிக்கும் கூடுதலானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

    அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் மத்திய அரசு செலுத்தி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. கடந்த ஜூலை 17-ம் தேதி 200 கோடி டோஸ் செலுத்தி புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    இந்நிலையில், தொடர்ந்து நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
    • குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

    உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது என்றும் கூறினார்.

    உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பனா ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் என்றார்.

    • பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை.
    • பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் இல்லை.

    இந்நிலையில் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதர் பூனவல்ல பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது.

    பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை. இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.

    நாங்கள் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10-15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய சார்ஸ் கோவிட்-2 தோற்றம் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய வயதினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என்றார்.

    • இந்தியாவில் தயாரான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
    • கொரோனா தடுப்பூசிகள் 9 முதல் 12 மாதம் வரை மட்டுமே காலஅவகாசம் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தியது.

    தொற்று பரவலால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நோயாளி ஆனதோடு, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டினர். அதன் பயனாக தயாரான தடுப்பூசிகள் மக்களுக்கு விரைவாக செலுத்தப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

    இந்தியாவில் தயாரான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 218 கோடி டோஸ்களுக்கும் மேல் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கு 2-வது தவணையும், இரு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு முன் எச்சரிக்கை (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இந்தியாவில் தயாரான தடுப்பூசிகளில் கடந்த மாதம் இறுதி வரை சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 என்று வைத்துக்கொண்டால் வீணான தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.2,250 கோடி ஆகும்.

    பொதுவாக கொரோனா அல்லாத தடுப்பூசிகள் 3 ஆண்டு கால ஆயுளை கொண்டிருக்கும். ஆனால் கொரோனா தடுப்பூசிகள் 9 முதல் 12 மாதம் வரை மட்டுமே காலஅவகாசம் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தன. இதுவும் தடுப்பூசிகள் வீணாவதற்கு ஒரு காரணியாக உள்ளது.

    இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அறிவித்தது. அதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாக மட்டுமே இருந்தது.

    ஆனால் தற்போது இந்த சதவீதம் 27-ஐ தாண்டி உள்ளது. கடந்த 2-ந் தேதி நிலவரப்படி, மாநிலங்களில் சுமார் 21.9 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாக நாள்தோறும் 2 முதல் 3 லட்சம் டோஸ் வரையிலான தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்படுகிறது.

    தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடி யூட் ஆப் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன்-ஜூலையில் சுமார் 200 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருப்பதாக கூறி இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், "நாங்கள் 2021-ம் ஆண்டு இறுதியில் ஒரு மாதத்திற்கு 250 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தோம். ஏற்றுமதி சந்தைகளில் கூட தேவையில்லாததால் திடீரென்று உற்பத்தியை நிறுத்த வேண்டி இருந்தது.

    இதனால் ஏற்கனவே மொத்தமாக தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம். இல்லை என்றால் அவை காலாவதி ஆகிவிடும்.

    ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் காலாவதி ஆகும் டோஸ்களை பெற்று உள்ளோம். இனி ஒவ்வொரு மாதமும் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் டோஸ்கள் வரை காலாவதி ஆகிவிடும் என்றார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டோஸ்கள் காலாவதி ஆகிவிடும்" என்று பூனவல்லா கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மெகா தடுப்பூசி முகாமில் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 515 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 350 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 813 பேரும் என மொத்தம் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    இந்த மாதம் இறுதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

    கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் காலை துவங்கிய தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பலர் உடன் இருந்தனர். பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொண்டு பயனடையலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

    ×