என் மலர்
இந்தியா

10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியானது- சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் தகவல்
- பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை.
- பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் இல்லை.
இந்நிலையில் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதர் பூனவல்ல பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது.
பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை. இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.
நாங்கள் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10-15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய சார்ஸ் கோவிட்-2 தோற்றம் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய வயதினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என்றார்.






