search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.

    16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கை இல்லை.

    ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கையோ வெளியாகவில்லை.

    யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும்.

    தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

    அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகி உள்ளது.

    • மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன.

    இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கடந்த 22-ந்தேதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் இறந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    • ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக உள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி (33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

    • ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
    • மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.

    ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்தது, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.


    ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.

    ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

    • மங்கா காமிக்ஸ் வகைகள் பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன
    • ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, திசுக்களுக்கு அழுத்தம் தருவதால் சப்டியூரல் ஹீமடோமா ஏற்படுகிறது

    "காமிக்ஸ்" (comics) எனப்படும் படக்கதை புத்தகங்களில் 19-வது நூற்றாண்டில் ஜப்பானில் உருவான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள் "மங்கா" (manga) எனப்படும்.

    மங்கா காமிக்ஸ் வகைகளில் நகைச்சுவை, குடும்ப உறவுகள், மர்மம், துப்பறிதல், அறிவியல் உள்ளிட்ட பல வகையான கதைகள் தற்போது வரை வெளிவந்திருக்கின்றன.

    மங்கா காமிக்ஸ் வகைகள், ஜப்பானிய மொழிகளில் இருந்து பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.


    பிரபலமான ஜப்பானிய மங்கா கதைகளில் "டிராகன் பால்" (Dragon Ball) எனும் படக்கதைகள் முன்னணியில் உள்ளன.

    அகிரா டொரியாமா (Akira Toriyama) என்பவர் எழுதி உருவாக்கிய "டிராகன் பால்" கதைகள், பல மங்கா எழுத்தாளர்களுக்கு படைப்பாற்றலில் ஆர்வம் தந்து, அவரைப் போலவே எழுத்தாளர்களாக உருவெடுக்க வழிவகுத்தது.

    இதுவரை, உலகெங்கும் 260 மில்லியனுக்கும் மேல் "டிராகன் பால்" கதைகள் விற்பனை ஆகி உள்ளன.

    1984ல் "டிராகன் பால்", தொலைக்காட்சி தொடர் வடிவில் உருவானது. இதை தொடர்ந்து பல "டிராகன் பால்", திரைப்படங்களும், வீடியோ விளையாட்டுகளும் உருவாகின.

    "சோன் கோகு" (Son Goku) எனும் சிறுவன், டிராகன்கள் உள்ள பல மந்திர பந்துகளை ஒவ்வொன்றாக சேகரித்து, பூமியை அழிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பூமியை காப்பாற்ற போராடுவதே இக்கதைகளின் மையக்கரு.

    இந்நிலையில், "சப்டியூரல் ஹீமடோமா" (subdural hematoma) எனும் மூளையில் உண்டாகும் ஒரு ஆபத்தான நிலையினால், மார்ச் 1 அன்று, தனது 68-வது வயதில் அகிரா டொரியாமா காலமானார்.

    குறுகிய நேரத்தில் மூளையில் ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, மூளைத்திசுக்களுக்கு அழுத்தம் தரும் நிலையை சப்டியூரல் ஹீமடோமா என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

    80களில் தங்களின் குழந்தைப் பருவ காலத்தில், டொரியாமாவின் மங்கா படக்கதைகளை விரும்பி படித்து, அவற்றை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கருதும் டொரியாமாவின் ரசிகர்களுக்கு அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ராணுவத்தில் தற்போது தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வீரர்கள் உள்ளனர்
    • பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாதவாறு வைத்து கொள்ளலாம்

    கிழக்காசிய நாடான ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல துறைகளில் பணியாற்றுவதற்கு போதிய இளைஞர்கள் இல்லாமல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையிலிருந்து 4-வது நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டது. மேலும், ராணுவத்தில் சேர்வதற்கும் போதுமான அளவு இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் ஆர்வம் காட்டுவதில்லை.

    ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, நாட்டின் தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே உள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவித்தது.

    குறைந்த ஊதியத்தினால் இளம் வயது ஆண்களும், பாலியல் துன்புறுத்தல் அச்சங்களால் பெண்களும் ராணுவத்தில் சேர தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியது.

    இந்நிலையில், ராணுவத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை நீக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

    அதில் ஒன்றாக, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, இனி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சற்று நீளமான முடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    இனி புதிய வீரர்கள், தலையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் குறைவாகவும், மத்தியில் நீளமாகவும் வைத்து கொள்ளலாம்.

    பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாத அளவிற்கும், ஹெல்மெட் அணியும் போது தடையாக இல்லாதவாறும், நீளமாக வைத்து கொள்ளலாம்.

    சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து வழிமுறைகளையும் ஜப்பான் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    "அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் தனியார் துறையுடன் போட்டியிட்டு இளைஞர்களை ஈர்க்கும் நிலையில் உள்ளோம்" என பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா (மினொரு Kihara) தெரிவித்தார்.

    • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
    • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

    கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

    உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

    தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

    அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

    ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


    மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

    "சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பான் நாட்டில் குடி புகுந்தார் கரோலினா
    • உண்மையை மறைத்தது தவறு என கரோலினா கூறியதாக "மிஸ் ஜப்பான் சங்கம்" அறிவித்தது

    கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற "மிஸ் ஜப்பான்" போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.

    உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.

    உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஷுகன் பன்ஷுன் (Shukan Bunshun) எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பை கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது.

    இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய "மிஸ் ஜப்பான் சங்கம்", பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது "மிஸ் ஜப்பான்" பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்தது.

    இது குறித்து கரோலினா, "என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.

    • விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
    • விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

    ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.

    ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.

    ×