search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணீர் புகை குண்டு"

    • சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்
    • வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்

    2001ல் இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22-வது வருட நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்திய பாராளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்தது. சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்.

    இதனால் அவையில் இருந்த உறுப்பினரகள் அச்சத்துடன் ஓடினர்.


    கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

    வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

    • மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இம்பாலில் பா.ஜ.க. அலுவலகம் கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பா.ஜ.க.வின் பிராந்திய அலுவலகம் அருகே இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும்
    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இந்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்டார்

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர், டிரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிறுபவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த ட்ரோன்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும். ஓடிச் செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும். தமிழகத்தில் போலீஸ் துறையில் டிரோன்கள் பயன்படுத்தவது கோவையில் தான் முதல் முறை இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம்.
    • நேற்று மாலை முதல் இம்ரான்கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 2 வழக்குகளில் பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலகத்தில் கொடுக்காமல் அதை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    அதே போல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பேரணியில் நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானை நாளை வரை கைது செய்ய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் ஜமான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு இஸ்லாமாபாத் போலீசார் சென்றனர். அவர்கள் இம்ரான்கான் வீட்டுக்கு முன்பு குவிந்து இருந்தனர்.

    இதற்கிடையே இம்ரான் கான் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம். பாகிஸ்தான் மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போரிட வேண்டும்.

    என்னை கைது செய்துவிட்டால் நாடு தூங்கிவிடும் என்று அவர்கள் (அரசு) நினைக்கிறார்கள். அதை நீங்கள் தவறு என்று நிரூபிக்க வேண்டும். நான் இல்லாமல் கூட உங்களால் போராட முடியும் என்று நிரூபியுங்கள். கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார். நான் உங்களுக்காக (மக்கள்) வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்று தெரிவித்தார்.

    இம்ரான்கானை போலீசார் கைது செய்வதை தடுக்க அவரது தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டுக்கு முன்பு திரண்டிருந்தனர். அவர்கள் இம்ரான் கான் வீட்டை சுற்றி நின்றனர்.

    அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்லாமல் அங் கேயே இருந்தனர். திடீரென்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. டயர் உள்ளிட்ட பொருட்களை சாலையில் போட்டு எரித்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் கான் கட்சியினர் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடியும் நடத்தி னர்.

    இதனால் அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில் கட்சி தொண்டர்கள் பலர் காயம் அடந்தனர். அதே போல் டி.ஐ.ஜி. உள்பட போலீசாரும் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர். சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு வன்முறை கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் தொண்டர்கள் பலர் அப்பகுதியிலேயே சுற்றி வருகிறார்கள்.

    இதையடுத்து இம்ரான் கான் வீடு உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. போலீசார் 8 மணி நேரம் போராடியும் இம்ரான்கானை கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா, பைசலாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலை முதல் இம்ரான்கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளை மறித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.
    • மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் டிரோன் காமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

    அதன்படி டிரோன் கேமிரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் டிரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்று செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் கலவரம் ஏற்படுவது போன்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். அப்போது கலவர இடத்தில் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதே மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த பயிற்சி விழா கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து போலீஸ் கமிஷனரின் அறிவுரையின்படி, கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.

    இந்த இசைக்குழுவினை பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டண அடிப்படையில் பயன்படுத்தலாம். 2 மணி நேரத்திற்கு ரூ. 10 ஆயிரமும், 3 மணி நேரத்திற்கு ரூ,12,500-ம், 4 மணி நேரத்திற்கு ரூ. 15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×