search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் டிரோன் கேமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒத்திகை- போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்

    • கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.
    • மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் டிரோன் காமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

    அதன்படி டிரோன் கேமிரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் டிரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்று செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் கலவரம் ஏற்படுவது போன்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். அப்போது கலவர இடத்தில் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதே மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த பயிற்சி விழா கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து போலீஸ் கமிஷனரின் அறிவுரையின்படி, கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.

    இந்த இசைக்குழுவினை பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டண அடிப்படையில் பயன்படுத்தலாம். 2 மணி நேரத்திற்கு ரூ. 10 ஆயிரமும், 3 மணி நேரத்திற்கு ரூ,12,500-ம், 4 மணி நேரத்திற்கு ரூ. 15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×