search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன பேரணி"

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக பா.ஜனதா இன்று கண்டன பேரணி நடத்துகிறது. #SabarimalaTemple #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

    10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டனர். 210 பேரின் புகைப்படங்களையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.

    அந்த படங்களை எல்லா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட பக்தர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி, 210 பக்தர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 71 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 40 பேர், பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா 30 பேர் ஆகியோர் அடங்குவர்.

    இதுபோல், மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறந்து இருந்தபோது, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதன்மூலம், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்தது. எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இத்தகவல்களை போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா தெரிவித்தார். வாகனங்களை சேதப்படுத்திய மேலும் 2 ஆயிரம் பேரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.



    போலீசாரின் இந்த செயலுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:-

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நடத்தப்படும் இந்த அரசு, ஐயப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க பார்க்கிறது. இவ்வளவு பேரை மொத்தமாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் 2-வது மிகப்பெரிய ஆன்மிக தலத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. கோவிலை காக்க மாபெரும் இயக்கத்தை தொடங்குவோம்.

    மாநிலம் முழுவதும் 26-ந் தேதி (இன்று) கண்டன பேரணி நடத்தப்படும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். கோர்ட்டையும் அணுகுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண்களை தடுத்த பக்தர்கள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டபோது, பக்தர்களுக்கு இடையே இப்ராகிம் குட்டி என்ற போலீஸ் டிரைவர் சாதாரண சீருடையில் நிற்கும் புகைப்படமும் இருந்தது.

    இதன்மூலம், பக்தர்கள் போர்வையில் போலீசாரே வன்முறையை தூண்டி விட்டதாக பா.ஜனதா பொதுச்செயலாளர் ரமேஷும், பக்தர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த புகைப்படத்தை மட்டும் போலீசார் வாபஸ் பெற்றனர்.

    இதற்கிடையே, மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக நவம்பர் 17-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 3 மாத காலம் நடை திறந்து இருக்கும். அப்போது, போராட்டத்தை ஒடுக்க 5 ஆயிரம் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட உள்ளனர். அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. #SabarimalaTemple #BJP
    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணியில் ராகுல் காந்தி , தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றார். #RahulGandhi #Muzaffarpurshelterhome #Delhiprotest
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அவமானத்துக்குரியது, பீகாரை தலைகுனிய வைத்துள்ளது என பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் குறிப்பிட்டார். இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த கொடூரத்தை கண்டித்தும் முசாபர்பூர் சிறுமியர் காப்பகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பீகார் அரசிடம் நீதி கேட்டு ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி சார்பில் இன்றிரவு தலைநகர் டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது.

    பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மா. கம்யூ தலைவர் பிரகாஷ் கரத், இ கம்யூ தலைவர் டி.ராஜா, லோக்தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ்  உள்பட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    அவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் இங்கு திரண்டிருக்கிறோம். முசாபர்பூர் காப்பக சம்பவத்துக்காக முதல்- மந்திரி நிதிஷ் குமார் அவமானப்பட்டால் மட்டும் போதாது.  உடனடியாக கடுமையான நடவடிக்கையும் எடுத்தாக வேண்டும் என குறிப்பிட்டார். #RahulGandhi #Muzaffarpurshelterhome  #Delhiprotest
    வால்மார்ட் நிறுவனத்தை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி விக்கிரமராஜா அறிவிப்பு
    சங்கரன்கோவில்:

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது.

    கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் தனது கிளையை திறக்க முயற்சி செய்தது. அப்போது வணிகர் சங்கங்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அன்றைய முதல்அமைச்சர் ஜெயலலிதா வால்மார்ட் நிறுவனத்திற்கு தடை விதித்து, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.

    தற்போது வேறு பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் (ஜூலை) 24ந்தேதி பெரிய அளவில் கண்டன பேரணி நடத்த உள்ளோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில் நகரில் பாரம்பரிய திருவிழா ஆடித்தவசு திருவிழாவாகும். திருவிழா காலங்களில் இரவில் கூடுதல் நேரம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கடைகளை அடைக்க வியாபாரிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. தொடர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×