search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எம் வீரப்பன்"

    • அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.
    • பொது மக்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98). இவர் முதுமை காரணமாக நேற்று மரணம் அடைந்தார். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் சினிமா பட நிர்வாகியாக இருந்த இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1983-87 கால கட்டங்களில் பவர்புல் அமைச்சராக இருந்தார்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அம்மாள் அமைச்சரவையிலும் அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார். அதன் பிறகு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். ஆனாலும் அவரது அரசியல் பயணம் அந்தளவுக்கு எடுபடவில்லை.

    வயதான காரணத்தால் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திருமலை பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஆர்.எம்.வீரப்பன் நடுவில் சில ஆண்டுகள் கோபாலபுரத்தில் புது வீடு கட்டி அங்கு வசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள வீட்டுக்கு வந்து விட்டார்.

    சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் நிலை நேற்று மோசம் அடைந்தது. இதனால் மதியம் அவரது உயிர் பிரிந்தது.

    ஆர்.எம். வீரப்பன் மரணம் அடைந்த தகவலறிந்ததும் அனைத்து கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார் மற்றும் சைதை துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வந்து ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆர்.எம். வீரப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் மின் மயானம் சென்றடைந்ததும், நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் எரியூட்டப்பட்டது.

    • எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
    • முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    அண்ணன் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் 'பொன்மனச் செம்மல்" பாட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், மாண்புமிகு அம்மா அவர்கள் காலத்தில் கழக இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    • எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
    • முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னால் போனதே இல்லை. அவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர்.
    • அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

    தமிழக முன்னாள் அமைச்சரான ஆர்.எம். வீரப்பன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவிதுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகளில் கூறியிருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

    அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

    ஆர்.எம்.வீ. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர்.

    எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

    பின்னாளில் எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், முத்தமிழறிஞர் கலைஞருடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

    எம்.ஜி.ஆர்-ன் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்திற்கும் தலைவராகப் பொறுப்பேற்று இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார்.

    அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

    ஆர்.எம்.வீரப்பனின் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம். வீரப்பன் புகழும் நிலைத்திருக்கும்!

    இவ்வாறு இரங்கல் செய்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
    • ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    சென்னை:

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் காலமானார்.

    அரசியல் வாழ்க்கையில் ஆர்.எம்.வீரப்பன் குறித்த தகவல்கள் பின்வருமாறு:-

    * அ.தி.மு.க. உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

    * ஆர்.எம்.வீரப்பன் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.

    * 1986 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    * 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.


    * எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    * எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

    * ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    * 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்ட போதுதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஓட்டு போட்டால் இந்த தமிழகத்தை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த காரணத்திற்காகவே அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனை கட்சியிலிருந்து நீக்கினார்.

    * இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

    வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த திராவிட அரசியல் தலைவரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் இன்று தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்.எம். வீரப்பனை சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் இன்று தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இந்தநிலையில், சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு, சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.எம். வீரப்பனை சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., வர்த்தக அணி செயலாளர் கவிஞர்.காசிமுத்து மாணிக்கம், ஆர்.எம்.வீரப்பன் மகன்கள் தங்கராஜ், செல்வம், எம்.ஜி.ஆர்.கழக மாநில பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம், மருமகன் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் தலைவர் ஆர். அருண்குமரன், மாநில மகளிர் அணிசெயலாளர் ஆர்.அபிராமி, மாநில அமைப்புச் செயலாளர் சுப.தமிழ்வேலன், வடசென்னை மாவட்ட செயலாளர் என்.துரைராஜ், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் டி.ஸ்ரீனிவாசன், தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சிவராமன், தென் சென்னை மகளிர் அணி செயலாளர் ஜி.அமுதா, கரூர் மாவட்ட செயலாளர் இரா.பெரிய சாமி, துாத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.அழகிரிசாமி, திருச்சி மாவட்டச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன்,

    திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கே.குமார், நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.வெள்ளையன், தென்காசி மாவட்ட செயலாளர் டேனியல், ஜி.மீனாட்சி சுந்தரம், அ.அனந்தன், சேலம் மாவட்ட செயலாளர் கே.எம், ஆறுமுகம், அரியலூர் மாவட்ட செயலாளர் ஜி.மணிவேல், ஈரோடு மாவட்ட செயலாளர் வி.எல்.தங்கராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எம்.சக்திவேல், ஆர்.எம்.வீரப்பன் மக்கள் நற்பணி மன்ற பொருளாளர் அண்ணாதுரை, தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகிகள் மகேந்திரன், சரவணன், பூங்கொடி ஆர். கோவிந்தராஜன், சத்யா, ஜெகதீசன், தியாகராஜன், தர்மராஜ் மற்றும் சங்கர் உட்பட பலர் ஆர்.எம்.வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தொற்று முழுமையாக குணம் அடைந்ததும் இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆர்.எம்.வீரப்பன் விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் விரைவில் குணமடைய வேண்டும்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என விழைகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×