search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாஷ் தீப்"

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • இங்கிலாந்தின் 9-வது பேட்ஸ்மேன் ராபின்சன் அரைசதம் அடித்தார்.
    • ஜடேஜா கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து 57 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அதன்பின் ஜோ ரூட்- போர்ஸ்டோவ் ஜோடி தாக்குப்பிடித்து 57 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஜோ ரூட் உடன் பென் போக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டது.

    ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் நிதானமாக விளையாட ராபின்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராபின்சன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. ராபின்சனை ஜடேஜா வீழ்த்தினார்.

    இதே ஓவரில் பஷீரையும் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் ஆண்டர்சனை வீழ்த்த இங்கிலாந்து 104.5 ஓவரில் 353 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் ஆகாஷ் தீப் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஒவ்வொரு போட்டியையும் என்னுடைய கடைசி போட்டியாக நினைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.

    ராஞ்சி:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடியது.

    இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42, டக்கட் 11, போப் 0 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிந்த பின் இந்திய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அளித்த பேட்டியில் கூறியதாவது,

    என்னுடைய பயிற்சியாளர்களிடம் நான் பேசினேன். எனவே அறிமுகப் போட்டியை நினைத்து நான் பதற்றமடையவில்லை. ஒவ்வொரு போட்டியையும் என்னுடைய கடைசி போட்டியாக நினைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் லென்த்தை இழுத்து வீச வேண்டும் என பும்ரா ஆலோசனை கொடுத்தார். அதைத்தான் இப்போட்டியில் நான் அப்படியே செய்தேன்.

    நோ பால் வீசியதற்காக நான் மோசமாக உணர்ந்தேன். குறிப்பாக ஜாக் கிராவ்லி சிறப்பாக பேட்டிங் செய்ததால் அது அணியை பாதித்து விடக்கூடாது என்று நினைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 ரன்னில் இருந்து தப்பிய கிராலி 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    • பேர்ஸ்டோ 35 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இடம் பிடித்தார்.

    ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்தின் ஸ்கோர் 8 ரன்னாக இருக்கும்போது ஆகாஷ் தீப் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிராலி க்ளீன் போல்டானார். ஆனால் நோ-பால் என நடுவர் அறிவிக்க கிராலி அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அதன்பின் கிராலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிராஜ் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் கிராலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் சிராஜ் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இங்கிலாந்து அணி 47 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆகாஷ் தீப் பந்தில் டக்கெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்னில் க்ளீன் போல்டானார். 4 ரன்னில் தப்பிய கிராலியை 42 ரன்னில் வீழ்த்தினார்.

    அப்போது இங்கிலாந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்தஜோ ஓரவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. பேர்ஸ்டாவ் விரைவாக ரன் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    பென் ஸ்டோக்ஸ்

    22-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 24.1 ஓவரில் விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜோ ரூட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால், நோ-பால் என்பதால் தப்பினார்.
    • பின்னர் கிராலியை இன்-ஸ்விங் மூலம் மீண்டும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பும்ராவிற்குப் பதிலாக முகேஷ் குமார் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் 27 வயதான ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரரா? என கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் வியப்படைந்தனர்.

    ஆனால், பும்ரா அணிக்கு எவ்வாறு பங்களிப்பாரோ, அதேபோல் தானும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன் ஆகாஷ் தீப் களம் இறங்கினார்.

    முதல் ஓவரை சிராஜ் வீச, 2-வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். சுமார் 135 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார். இதனால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

    தனது 2-வது ஓவரிலேயே கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால், அது நோ-பாலாக அமைந்தது.

    இருந்தாலும் மனம் தளராமல் உத்வேகத்துடன் பந்து வீசினார். இதற்கு அவரின் 5-வது ஓவரில் பலன் கிடைத்தது. இந்த ஓவரின் 2-வது பந்தில் டக்கெட்டை (11) வெளியேற்றினார்.

    இதே ஓவரின் 3-வது பந்தில் ஒல்லி போப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு உத்வேகம் அளித்தார். அதோடு நிற்காமல் நோ-பால் மூலம் தப்பிய கிராலியை (42) அடுத்த ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீ்ன் போல்டு மூலம் வெளியேற்றினார். 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    27 வயதாகும் ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 30 முதல்தர போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 423 ரன்கள் எடுத்துள்ளார்.

    • போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
    • காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2-வது ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. உடல் நல பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை கவனிக்கும் பொருட்டு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

     மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது. ஸ்டேடியமும் பெரும்பாலும் 'பிங்க்' நிறத்தில் காட்சியளிக்கும். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் வலுசேர்க்கிறார்கள்.

    அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். ஒருநாள் போட்டி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சாவில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    மொத்தம் 40 விளை யாட்டுகள் 481 பிரிவுகளில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டியும் ஆசிய விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

    இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீரர் ஷிவம்மவி விலகியுள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ்தீப் இடம் பெற்றுள்ளார்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, பிரப் சிம்ரன்சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஆகாஷ்தீப்.

    ×