search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாசலேஸ்வரர் கோவில்"

    • 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
    • அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

    குறிப்பாக, அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    கோவில் வெளி பிரகாரம் முதல் பொது தரிசன வரிசை, முலவர் சன்னதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனா. சுமார் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.

    மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    • திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.

    வேங்கிகால்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்தார்.

    அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்த கவர்னர் ரவி, கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்து பேசி அன்னதானம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளுடனான ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் தமிழக கவா்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூட்டரங்கில் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டு இருந்த விளைபொருட்களை பார்வையிட்டார்.

    பின்னர் கவர்னர் அவரது குடும்பத்துடன் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்த பின்பு நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், நவகிரக சன்னதி தொடர்ந்து பாதாள லிங்கத்தை தரிசனம் செய்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையிலான உறுப்பினர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

    கிரிவலப் பாதைக்கு சென்று நிருதி லிங்கத்தில் சாமி தரிசனம் செய்த கவர்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கிரிவலம் சென்றார். திருநேர் அண்ணாமலையார் சன்னதி வரை சென்று நிறைவு செய்தார்

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். கிரிவலத்தை முடித்த பின்பு ஜவ்வாது மலைக்கு புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை காவலுார் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுவிட்டு செஞ்சிக்கோட்டை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ஜெயிலர், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டுதல்
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    திருவண்ணாமலை:

    ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் ரஜினி நடித்த லால் சலாம் சினிமா எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக படமாக்கப்பட்டது.

    ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் 7 நாட்கள் தங்கி படத்தின் காட்சிகளில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டி ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா நேற்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார்.

    ஜெயிலர், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டி மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், நடந்து முடிந்த பவுர்ணமி நாளில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் நேற்று கோவிலுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பகலில் கொளுத்திய கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்றனர்.

    • இன்று மாலைபராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதனை முன்னிட்டு பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    இன்று மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இன்று முதல் 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்

    10-வது நாள் கோவிலில் புனித தீர்த்தவாரி நடைபெறும்.

    ஆடிப்பூர கொடியேற்று விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் குவிந்திருந்தனர்.

    • பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடக்கிறது .
    • 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் வீதி உலா நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும்.

    அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

    விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திரு வீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடை பெறுகிறது.

    அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோவில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத்தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    • சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அய்யங்குளத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதால் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது குளத்தின் கரையில் பாத்திரத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு அதன் மூலம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதி உலா நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுகிறது.

    சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னத்தில் இன்று காலை 6 மணிக்கு ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் ராஜாராம், கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணா மலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் சாமி வீதி உலா நடைபெறும் என தெரிவித்தனர்.

    • திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுகின்றனர்.
    • பவுர்ணமி இன்று மாலை 5.49 மணி வரை உள்ளது.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுகின்றனர். அண்ணாமலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.42 மணிக்கு தொடங்கியது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானது.

    சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த காட்சி.

    சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த காட்சி.


    பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது.

    நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    பவுர்ணமி இன்று (திங்கள்கிழமை) மாலை 5.49 மணி வரை உள்ளது. இதனால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் :-

    தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். வரிசையில் வரும் பக்தர்களுக்கு கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே கோவிலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்றனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. நேற்று இரவு 7.42 மணியளவில் பவுர்ணமி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் கிரிவலம் செல்ல காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் சில பக்தர்கள் பகலில் கிரிவலம் சென்றனர். காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் பகலில் கிரிவலம் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மாலைக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை உள்ளது. இதனால் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை வரை நடைபெறுகிறது.

    போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    குரு பவுர்ணமி கிரிவலத்தால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

    • பவுர்ணமி இரவில் தான் தொடங்குகிறது.
    • கோவில் அலுவலர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    அதனால் பக்தர்கள் சிரமமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

    இருப்பினும் நேற்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் மற்றும் ராஜ கோபுரம் பகுதியில் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணத்தொகை தலா ஒருவருக்கு வழக்கம் போல் ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதை கண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அலுவலர்கள் தங்களுக்கு பவுர்ணமியின் போது தான் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பவுர்ணமி இரவில் தான் தொடங்குகிறது. அதுவரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர்.

    அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டு ஒரு நாளே ஆகும் நிலையில் கோவில் அலுவலர்கள் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாதது அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதியம் 12 மணி முதல் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணம் வசூலிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்திலும் வைக்கப்பட்டு இருந்த கட்டண தரிசன வழிக்கான பேனர்கள், வரிசையில் தொங்கவிடப்பட்டு இருந்த பலகையும் அகற்றப்பட்டது.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், அமைச்சர் உத்தரவிட்டும் கோவிலில் கட்டண தரிசனத்திற்காக ரூ.50 வசூலிக்கப்பட்டது. ஆனால் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்த நாங்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். வரிசையில் வரும் பக்தர்களுக்கு கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே கோவிலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றனர்.

    • பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும்.
    • ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50-ன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றைய பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
    • திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி நாளை 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வருகிற பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×