search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

    • பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடக்கிறது .
    • 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் வீதி உலா நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும்.

    அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

    விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திரு வீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடை பெறுகிறது.

    அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோவில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத்தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    Next Story
    ×