search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"

    • இதே வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை இன்று முன் வைக்கின்றனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இதனை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து இந்த வழக்க இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன் வைக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
    • நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னையில் நடந்தது.

    அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

    ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த பொதுக்குழுவில் ஏகமனதாக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் அந்த மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது, "ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது" என்று நீதிபதி அறிவித்தார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே அ.தி.மு.க.வில் நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி தனது உத்தரவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே மீண்டும் இருவரும் சேர்ந்து கூட்டலாம் என்று நீதிபதி கூறி இருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அவர்கள் மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சமரச முயற்சிகளை மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த சமரச முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து உள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த விசாரணை நடந்தது.

    இந்த மேல் முறையீட்டு வழக்கில் தங்களை கேட்காமல் தீர்ப்பளிக்க கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்கனவே மனு செய்திருந்தனர். இதனால் இன்றைய வழக்கு விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம் அணி வக்கீல்களும் ஆஜரானார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு நாளை பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். எனவே நாளை முதல் விசாரணை நடைபெறும்.

    • சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார்.
    • அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து விட்டார்.

    ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    இதில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணையரை நியமிக்க கோர்ட்டை நாடலாம் என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன. இந்த தீர்ப்பை அடுத்து தான் கூட்டுத்தலைமையோடு மீண்டும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    அவர் மேலும் கூறும் போது, 'ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க.வுடன் தொடர்பு கொண்டவர்கள். நாங்கள் கோவிலாக கருதும் ஜெயலலிதாவின் அறையையே உடைத்து சூறையாடியவருடன் இனி எந்த காலத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை' என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல கோர்ட்டு விதித்து இருந்த தடையும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. எனவே தலைமை கழகத்துக்கு செல்ல அனுமதி கேட்டு அடுத்த வாரம் மனு செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து வைத்திலிங்கம் அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

    அப்போது நமக்குள் பிரச்சினை வேண்டாம். எல்லோரும் இணைந்து செயல்படுவோம். கட்சி நிர்வாகிகளாக இரு தரப்பிலும் பாதி பேரை நியமித்தால் போதும். பிரச்சினையை வளர்க்க வேண்டாம். வாங்க பேசலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    வைத்திலிங்கத்தின் இந்த சமரச உடன்பாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்கவில்லை. கூட்டுத் தலைமை, பாதி பாதி நிர்வாகிகள் என்ற நிபந்தனையை கைவிட்டு விட்டு வாருங்கள். அப்புறம் யோசிக்கலாம் என்று கண்டிப்புடன் கூறி விட்டனர்.

    வைத்திலிங்கத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அப்பாவுக்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் களம் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் நாம் பேசி சரி கட்டலாம் என்ற முடிவோடு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டுள்ளார். 3 முறை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி பேசாமல் தவிர்த்து விட்டார்.

    அப்பா செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன செய்யும். இப்போது நாம் எடுத்திருக்கும் முடிவுகள் நிர்வாகிகள் எடுத்த முடிவு. இந்த முடிவை எப்படி மாற்ற முடியும். அந்த பிள்ளைகளிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டுள்ளார்.

    கோர்ட்டு தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலர் தன் பக்கம் வருவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் எதிர்பார்த்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சமரச முயற்சிகளும் பலன் அளிக்காததால் கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கோபத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார்.

    சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார். அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் பட்டியல் தயாரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 800 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி இருக்கிறார்கள். திங்கள்கிழமை புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிறது.

    அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டவும் முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். பொதுக்குழுவை கூட்ட கோர்ட்டு அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்.

    • நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம்.
    • நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், 'அ.தி.மு.க. சார்பில் ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்கள் செல்லாது. ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது.

    ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்' என்று கூறினார்.

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வம், அ.தி. மு.க.வில் கூட்டு தலைமையாக இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும்.

    கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை.

    எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

    கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.

    அம்மாவின் மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் தொடங்கப்பட்டு அதற்கு பிறகு கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள், எண்ணப்படி கூட்டுத் தலைமையாக அ.தி.மு.க. செயல்படும் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கழகத்தின் சட்ட விதிப்படி எங்களின் பணிகளை நிறைவாக ஆற்றினோம்.

    அவரிடமும், எங்களிடமும் எந்தவித குறைபாடும் இல்லை. இரட்டை தலைமையா என்பதில் பிரச்சினை கிடையாது. கூட்டு தலைமையில் தான் அ.தி.மு.க. செயல்படும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.

    அனைவரும் இணைந்து கழகத்தை முழு வலிமையோடு கொண்டு செல்வது தான் எங்கள் எண்ணம். அம்மா சொன்னது போல் 100 ஆண்டுகளை நோக்கி கழகம் பயணிக்கும். எங்கள் எண்ணம், செயல் எல்லாமே இணைப்பு என்பதுதான். நாங்கள் அழைப்பு விடுப்பதற்கு காரணம் எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. ஏற்கனவே நடந்தவைகளை நாங்கள் தூக்கியேறிந்து விட்டோம். அவை தொலைந்து போகட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உளளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு காலக் கட்டத்தில் 2 அணியாக பிரிந்து இருந்தது. இரண்டு அணியும் 2017-ல் இணைந்தது. ஓ.பி.எஸ். வெளியில் இருந்தார். பிறகு நானும், அவரும் இணைந்தோம். மூத்த தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றாக கூடி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் 2 அணியும் ஒன்று சேர்க்கப்பட்டது.

    அப்போது பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்ந்து எடுக்கப்பட்டது. பொது உறுப்பினர்களால் அல்ல.

    அப்போது சில சட்ட திட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை ஒன்றாக இருந்த காரணத்தினால் 2 பேருக்கும் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததால் அதை தனியாக எடுத்து சட்ட விதிகளை உருவாக்கினோம்.

    பொதுச்செயலாளருக்கு சமமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. கூடவே விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் பிறகு இணைந்து தேர்தலையும் நடத்த வேண்டும். எங்களது சட்ட திட்ட விதிப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சட்ட திட்ட விதிகளை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கிளை கழக தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட்டது.

    அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வருகிறோம்.

    பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பொது உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து கூடுகின்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று இருக்கிறது.

    ஏனென்றால் செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அ.தி.மு.க. சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது.

    அதனால் தேர்தல் நடைபெறுகின்ற போது இந்த தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோம்.

    இந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. இதுதான் நடைபெற்ற சம்பவம்.

    இவர்கள் எப்படி ஒற்றை தலைமையை கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். எங்களுடன் பிரிந்து சென்றவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

    நீதிமன்றத்தில் கூட இதை முன்வைத்தார்கள். 2663 பேர் மட்டுமே முடிவு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்கள்.

    இந்த 2663 பேரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். யாரும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். இது தான் வரலாறு. இதன்படி தான் கட்சி நடக்கிறது.

    கூட்டு தலைமையாக இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பை ஏற்க இயலாது. அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஏற்கனவே தர்ம யுத்தம் சென்றார். யாரை எதிர்த்து சென்றார். அவருக்கு பதவி வேண்டும். பதவி இல்லாமல் இருக்க முடியாது.

    உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் என்பது தான் அவருக்கு முக்கியம். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலை இல்லை. இணைவோம் என்பதை எதன் அடிப்படையில் வைத்து அவர் எப்படி சொல்கிறார்.

    கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ரவுடிகளை ஏவி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடி சென்று உள்ளனர். தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடன் எப்படி இணைய முடியும்.

    அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கிய போது தீய சக்தி தி.மு.க. அதை வேரோடு ஒழிப்பது தான் எனது முதல் கடமை என்று சொன்னார். அவரோடு ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு வைத்திருக்கிறார். அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பாராட்டுகிறார்.

    இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய மகனே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியை புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்? தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.

    எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம். நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

    பதவி இல்லை என்றால் தர்மயுத்தம் செய்வார். யாரும் வேண்டாம் என்பார். மீண்டும் பதவி வேண்டும் என்றால் எல்லோரையும் சேர்த்துக்கொள்வோம் என்பார். இதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. நாங்கள் 15 நாட்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    ஆனால் அவர் ஒற்றை தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தின் படிதான் கட்சி நடத்த முடியும். கட்சியின் சட்டத்திட்ட விதிகளை மதிக்க வேண்டும். பெரும்பான்மை கட்சி தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை பிரதிபலிக்க வேண்டும். மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால் தான் ஆட்சிக்கு வர முடியும்.

    அவருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவுக்கு வந்து நிரூபிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.
    • ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் அ.தி.மு.க.வை வழிநடத்தினார்.

    இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்ற சவால்களை முறியடித்தார். 17 லட்சம் தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அவர் 16 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சி தந்தார்.

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக அர்ப்பணித்தார்.

    இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்த போது அதை வெல்வதற்கு இன்று தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை புரட்சித் தலைவியும், எம்.ஜி.ஆரும் உருவாக்கி தந்தார்கள்.

    சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில் தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் அம்புகளாக, அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

    எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும்.

    கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

    நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு பாதிப்பாக இருந்தது என்று எந்த காலத்திலும் செல்ல மாட்டேன். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளின் காரணமாக இன்றைக்கு அ.தி.மு.க.வில் இருக்கின்ற 1½ கோடி தொண்டர்களுடைய மனதிலும் நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர்., அம்மா மீது பாசம் கொண்ட தமிழக மக்களும், இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து இந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

    எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

    எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றியதன் காரணமாகத்தான் அ.தி.மு.க. உருவானது. அதன் பிறகு தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற நிலை வரும் போது அ.தி. மு.க. தான் அதிகமான தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பை தமிழக மக்களிடம் பெற்றது.

    இன்று தி.மு.க. ஆளுகின்ற நிலை இருக்கிறது. அ.தி.மு.க.வை பொறுத்த வரை ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்க்கட்சியாக அவர்கள் மக்கள் விரோத போக்கை கையில் எடுக்கின்ற போது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களோடு 50 ஆண்டு காலம் இருவரும் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அம்மா காலமான பிறகு 4½ ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த பொழுதும், அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்து இருக்கிறோம்.

    கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் இப்போதே தொடங்கி உள்ளனர்.
    • அடுத்த மாதம் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.திமு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலின் போது அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவுகளும் உடைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக ஐகோர்ட்டு உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பரபரப்பான தீர்ப்பை அளித்தார்.

    கடந்த மாதம் 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    அ.தி.மு.க.வில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

    இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் இந்த பதவி செல்லாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமை பதவிக்கு ஏற்பட்டுள்ள இந்த சட்ட சிக்கலை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இரவு 10.30 மணி வரை நீடித்தது.

    அப்போது டெல்லியில் உள்ள மூத்த வக்கீல்களுடன் தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மூத்த வக்கீல் விஜய் நாராயண் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் முன்பு முறையிட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் முந்தைய நீதிபதியின் தீர்ப்பே தொடர வேண்டும் என உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிடப்பட்டது. ஆனால் நீதிபதிகள் திங்கட்கிழமை வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் பொதுக்குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 5-ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கூட்ட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    ஒற்றை தலைமை தீர்மானத்துடன் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்ய அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கையெழுத்தை பெறவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் சம்மதிக்காத பட்சத்தில் ஐகோர்ட்டை நாடி முறையிட எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    அப்போது கட்சியில் பொதுக்குழுவுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? என்பது பற்றி விரிவாக எடுத்துக்கூற எடப்பாடி பழனிசாமி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் இப்போதே தொடங்கி உள்ளனர். அடுத்த மாதம் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பதவியை கொண்டு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மீண்டும் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் அமர வைத்து விட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது நாளை தெரியவரும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது போன்ற பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த அறிவுறுத்தியது.

    இதன்படி வழக்கு விசாரணை கடந்த வாரம் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வக்கீல்களும் காரசாரமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதனை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாளை வழக்கு விசாரணை பட்டியலில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் திக், திக் மனநிலையுடன் காத்திருக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது நாளை தெரியவரும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தான் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதனால் அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டதும், இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் திங்கட்கிழமை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விசாரணையை தொடங்கி 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருப்பதால் விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் வருகிற 9, 15, 19, 31 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.

    திங்கட்கிழமை வழக்கு விசாரணை தொடங்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். இதனால் வழக்கு விசாரணை காரசாரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் பொதுக்குழு விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கோர்ட்டில் எடுத்துக்கூற உள்ளனர். இது செல்லாது என்று ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல்கள் வாதிட உள்ளனர்.

    வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று 10 நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 20-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    இதனை எதிர்த்தே ஓ.பி.எஸ். தற்போது முறையிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கை விசாரிக்க போகும் நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எந்த மாதிரியான தீர்ப்பை வழங்க போகிறார்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
    • வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ந்தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார்.

    அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களான வைத்தி லிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள், ஆதரவாளர்களை அடுத்தடுத்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். பதிலுக்கு ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறினார். இதனால் இருதரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகத்தை திறந்து சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி அ.தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பொதுக்குழு கூட்டத்தை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும் என்கிற விதி கடை பிடிக்கப்படவில்லை.

    எனவே பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

    மேல்முறையீட்டு வழக்கை திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. அ.தி.மு.க. கட்சியின் மொத்த வடிவமும் மாற்றப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. மேலும் வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. எனவே கடந்த 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லுமா? என்பது அடுத்த வாரம் தெரியவரும்.

    • உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என ஈபிஎஸ் மனு

    அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அ

    திமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.
    • 2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அத்துடன் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக்குழுவில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர்.

    இந்த நகல்களையும், பொதுக்குழு தீர்மானங்களையும் உடனடியாக எடப்பாடி பழனிசாமி இ-மெயில் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.

    2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.

    வக்கீல்கள் பாலமுருகன், பிரேம்குமார், வினோத் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அவரிடம் உங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

    பொன்னையன் தொடர்பான ஆடியோ பற்றி கேட்டதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    • 8-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதம்.
    • ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

    அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    ×