search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zelensky"

    • லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.
    • நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தில் பச்சை நிற ராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் முகத்தில் கடுமையாக எதையோ யோசிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.

    இதனை தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் அழைப்பு இல்லாமல் கூட உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது இதுபோன்று நடக்கும் என கிண்டல் செய்துள்ளார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சந்தர்ப்ப சூழல் காரணமாகவே அந்த தருணத்தில் ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்காலத்தில்தான் இணைய முடியும் என நேட்டோ நாடுகள் அறிவிப்பு
    • காலவரையறை கூறப்படாதது அபத்தமான செயல் என்கிறார் ஜெலன்ஸ்கி

    நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர். அதனை அமைப்பில் சேர எந்த முறையான அழைப்பையும் வழங்கவில்லை.

    உக்ரைனின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது என்று பிரகடனத்தில் தெரிவித்த தலைவர்கள், அதற்கான செயல்முறைக்கு எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை.

    நேட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுப்போம்" என்று மட்டுமே கூறியிருக்கிறார்.

    இந்த பின்னடைவு ஜெலன்ஸ்கியை கோபப்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் அவர், "நேட்டோ உக்ரைனை சேர்க்க தயாராக இல்லை. இணைவதற்கு எந்த காலவரையறையும் கூறப்படவில்லை. இது அபத்தமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.

    ரஷியாவுடன் போரில் ஈடுபடும்போது நேட்டோவில் சேர முடியாது என்பதை ஜெலன்ஸ்கி ஏற்று கொள்கிறார். ஆனால், போர் முடிந்தவுடன் கூடிய விரைவில் அதில் சேர விரும்புகிறார்.

    காலக்கெடு எதுவும் வரையறுக்காததால், ரஷியாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நேட்டோ ஈடுபடும்போது உக்ரைனை உறுப்பினராக்குவதா? வேண்டாமா? என தங்கள் நிலை ஒரு பேரம் பேசும் பொருளாக மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது. இது எங்களுக்கு ஒரு பலவீனம் ஆகி விடலாம்" என்று அதிபர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

    கடந்த காலத்தில், மேற்கத்திய பாதுகாப்பு உறுதிமொழிகள், 2 ரஷிய படையெடுப்புகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்பதாலும், உக்ரைன் நேட்டோவின் ஒரு அங்கமானால் ரஷியாவிற்கு போரை நீடிக்க ஒரு ஊக்கத்தை அளிக்கலாம் என்பதாலும் சில உறுப்பு நாடுகள் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அஞ்சுகிறது.

    • ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜெலன்ஸ்கி நாடு திரும்பினார்.
    • உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என்றார்.

    கீவ்:

    ரஷியாவுக்கு எதிரான போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி, ரெயிலில் கீவ் நகருக்குச் சென்றார். அப்போது ரெயிலில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • உக்ரைன் போர் தொடங்கி 400 நாள் நிறைவடைந்துள்ளது.
    • ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் அதிபர் சபதமிட்டார்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசியதாவது:

    இந்தப் போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம்.

    உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

    உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன.

    கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது.
    • ராணுவ உதவிகள் வழங்கிய பின்லாந்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

    உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனுக்கு பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார்.

    ஓராண்டு கால போரில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்லாந்திற்கு நன்றி தெரிவித்தார்.

    • ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர்.
    • ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது உக்ரைனின் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய பின்னர், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷியா வைத்திருந்து உள்ளது.

    அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்று கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டு உள்ளன.

    ரஷிய படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்த விவரங்கள் இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

    இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விவரங்கள் தெரிய வந்து உள்ளன. உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், அடித்து, துன்புறுத்தியும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் பல கொடுமைகள் நடந்து உள்ளன.

    ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர். இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து விட்டனரா? அல்லது ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதலால் அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.

    இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. பெண் ஒருவரின் உடலை உக்ரைனின் அவசரகால குழுவினர் மீட்டனர். இந்த ஏவுகணை வீச்சில் குழந்தை ஒன்றும் உயிரிழந்து உள்ளது. ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைனின் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என ரஷியாவை குறிப்பிட்டார்.

    ஆனால், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றார்.
    • வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

    இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
    • கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது.

    அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்தார்.

    • உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என லிஸ் டிரஸ் உறுதி.
    • இந்திய வம்சாவளி பெண், இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

    இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார். 


    இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.

    • ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
    • ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.

    மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    ×