search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tennis"

    • பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
    • அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

    அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    • ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
    • ஜோகோவிச் மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி வென்றது.
    • வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மதுரை

    மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் மாவட்ட டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 4 நாள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதனை தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் முதல் முறையாக 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மதுரை மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி சங்க செயலாளர் நாகராஜன் கணேசன், விளையாட்டு இயக்குனர் நாகராஜன், கௌரவ உறுப்பினர் பிரகதீஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆந்த்ரே ரூப்லெவ் 5-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    • அரையிறுதி போட்டியில் ருனே 1-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 10-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை எதிர்கொண்டார்.

    இதில் சரிவில் இருந்து மீண்டு வந்த ஆந்த்ரே ரூப்லெவ் 5-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மழையால் தடைபட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 7 நிமிடம் அரங்கேறியது.

    மற்றொரு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவுடன் மோதினார். இந்த போட்டியில் ருனே 1-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ரூப்லெவ், ருனேவுடன் மோதுகிறார்.

    • நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
    • இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.

    பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெற்றியும், ருதுஜா போசாலே தோல்வியும் கண்டனர்.

    பின்னர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ருதுஜா போசாலே கூட்டணி வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.

    • டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக அறிவிப்பு.
    • இந்தியன் வெல்ஸ் அல்லது மியாமி டென்னிசில் என்னால் போட்டியிட முடியாமல் போனதில் வருத்தம்.

    முன்னனி டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த அவர் சமீப காலமாக காயத்தால் அவதி அடைந்து வருகிறார்.

    அவருக்கு இடுப்பு பகுதியில் தசை கிழிந்து இருப்பது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, " இந்தியன் வெல்ஸ் அல்லது மியாமி டென்னிசில் என்னால் போட்டியிட முடியாமல் போனதில் வருத்தமாக உள்ளது. எனது அனைத்து அமெரிக்க ரசிகர்களையும் மிஸ் பண்ணுவேன்" என்று கூறியுள்ளார்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
    • போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

    சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.

    போட்டிக்கு பிறகு பேசிய சானியா மிர்சா உணர்ச்சிவசமாக காணப்பட்டார். இந்த நிலையில் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்-வீராங்கனைகளுக்கு உதவ விரும்புகிறேன். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை செய்யவும் விரும்புகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை. பொதுவாக என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன்.

    ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் பேசிய போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். கிராண்ட்சிலாம் போட்டியில் பங்கேற்பது இதுவே கடைசி முறை என்ற வகையில் அரை இறுதி போட்டியுடன் முடித்ததற்கு நன்றியுடன் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் என புகார் கூறியுள்ளார்.
    • பொறுமை இழந்த நடால் எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என கூறுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் எனவும் புகாராக கூறியுள்ளார்.

    இதனால், போட்டி தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அது சர்வதேச பரபரப்பு செய்தியாகவும் மாறியது. போட்டி பாதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பொறுமை இழந்த நடால் தனது டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என நடுவரிடம் கூறுகிறார்.

    தனது பேட் கிடைக்காமல் போகவே, வழியின்றி வேறொரு டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாட சென்றார். அதன்பின் போட்டி தொடர்ந்தது. எனினும், போட்டியில் ஜாக் டிரேப்பருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

    நடால் பயன்படுத்திய பேட்டை, பந்து எடுத்து போடும் சிறுவன் தவறுதலாக எடுத்தது பின்னர் தெரியவந்தது. ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்து எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் நடாலிடம் பேட்டை ஒப்படைத்ததும் குழப்பம் தீர்ந்தது.



    • அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.
    • ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.

    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

    இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் ஆடுவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

    இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.

    சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.

    கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.

    வருகிற ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, கஜகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து ஆடுகிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    கடந்த ஆண்டு சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.

    ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும்.

    இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

    • தேசிய டென்னிஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி கலந்து கொண்டார்.

    கரூர்:

    அண்மையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி கலந்து கொண்டார்.தேசிய சப் ஜூனியர் போட்டிகளில் குழு பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 2 தங்கப் பதக்கங்களும், தனி நபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் சாதனைப் படைத்தார். இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் என தேசிய அளவில் 4 பதக்கங்கள் பெற்றார். சாதனை புரிந்த மாணவி யாழினிக்கு அஹமதாபாத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சாப்ட் டென்னிஸ் பெடரேசன் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மகேஷ் காஸ்வாலா, தேசிய பொதுச்செயலாளர் சகுந்தலா கடோதரா ஆகியோர் பதக்கங்கள் அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய அளவில் சாதனை படைத்து கரூருக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினி, அவரது டென்னிஸ் பயிற்சியாளர் வினோத்குமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து போட்டியை நடத்தியது.
    • மேலும், அவர் மாணவர்களோடு ேடபிள் டென்னிஸ் விளையாடினார்.

     தஞ்சாவூர்:

    தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியை நடத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஹெர்பர்ட் ஜோன்ஸ் வரவேற்றார்.

    புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெரோம் அடிகளார், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் செயலர் அண்ணாமலை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் மாணவர்களோடு மேபிள் டென்னிஸ் விளையாடினார்.

    இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் தஞ்சை ராமதாசு தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் பால்பிண்டோ நன்றி கூறினார்.

    • ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான பள்ளியில் டென்னிஸ் போட்டி தொடங்கியது.
    • 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி- வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க விழாவிற்கு ரம்யா சத்தியநாதன் கல்வி குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். ரம்யா சத்தியநாதன் கல்வி குழும செயலாளர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

    பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் விளையாட்டு போட்டி பணிகளை செய்து வருகின்றனர்.

    ×