search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்"

    • ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
    • தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    தந்தை...! இந்த ஒற்றை வார்த்தைக்கு உரியவரிடம் இருந்துதான் ஒவ்வொருவருக்கும் அன்பு, அறிவு, ஒழுக்கம், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் ஆகியவை கிடைக்க பெறுகின்றன. ஆம்... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிகேற்ப அவரது அறிவுரை, கண்டிப்பும்தான் ஒவ்வொருவருக்கும் நல்ஒழுக்கம், சிறப்பான வாழ்க்கையை பெற்றுத்தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தாய் கருவில் பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுத்தாலும் அந்த தாயையும், பிள்ளையையும் சேர்த்து தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் சுமந்து செல்லக்கூடியவர்கள்தான் தந்தையர்கள்.

    பிள்ளைகளின் பார்வைக்கு வேண்டுமானால் தங்களது தந்தை ராஜாவாக இல்லாமல் போகலாம். ஆனால் தந்தையானவர்களுக்கு தங்களது பிள்ளைகள் என்பவர்கள் இளவரசியாகவும், இளவரசனாகதான் தெரிவார்கள். அதனால்தான் ஒவ்வொரு தந்தையும் தான் கஷ்டப்பட்டதுபோல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது வலி, சோகத்தையும் மறந்து பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.

    இப்படி தன் பிள்ளைக்காக எது நல்லது, கெட்டது என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் தந்தையர் கடவுளுக்கும் நிகரானவர்கள் என்றே வர்ணிக்கப்படுகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்-தந்தையருக்கு பிறகுதான் கடவுளும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதனால் தாய்-தந்தையரை மதித்து நடக்காமல், முதுமையில் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு நீங்கள் எவ்வளவு நல்லகாரியங்கள் செய்தாலும் அது பிரயோஜனம் அற்றவைதான். தாய்-தந்தையர் இருக்கும்போது அவர்களை கவனிக்காமல் பின்னர் வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. எனவே, ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.

    அந்த வகையில்அன்னையர்களுக்கு போல் தந்தையருக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன்னை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்ஸ் என்பவர் 1910-ம் ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக அறிமுகப்படுத்தி கொண்டாடினார். இதைதொடர்ந்து அமெரிக்க அரசு ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக அறிவித்து கொண்டாடியது.

    இதுவே பின்னாளில் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பரவி தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாட்டம் நாள் வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஜூன் மாத 3-வது ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    • இன்னொரு ஜோடியும் சிக்கியதால் பரபரப்பு
    • பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி

    நாகர்கோவில், ஜூன்.16-

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல தொடங்கினர். இதையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையங்களில் காலை, மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இளம் பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் சுற்றித்திரிந்தார். போலீசார் அந்த ஜோடியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பிடிபட்ட வாலிபர் வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இளம்பெண் அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த பெண் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறினார்.

    மேலும் வீட்டிலிருந்து இன்று காலை புறப்பட்டு பள்ளிக்கு செல்லாமல் பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும் பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துவிட்டு மாற்று உடையில் காதலனுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரியும் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு போலீஸ் பிடியில் இருந்த தனது மகளை தாயார் சரமாரியாக தாக்கினார். சகோதரியும் அவர் பங்குக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரையும் போலீசார் எச்சரித்தனர். இதே போல் இன்னொரு ஜோடியும் போலீசாரிடம் சிக்கியது. நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த போது போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் போலீசாரிடம் ரோந்து பணியின் போது காதல் ஜோடிகள் சிக்கினர். அந்த ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் நடமாட்டம் பஸ் நிலையத்தில் மட்டும் இன்றி நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்பதற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.
    • அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    பெற்றெடுத்தது முதல் குழந்தைகளை படிக்க வைத்து, ஆளாக்கி நல்ல பணியில் அமரச் செய்து திருமணமும் செய்து வைத்து தனது குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்த எத்தனையோ பெற்றோர் இன்று மகனிடமும், மருமகளிடமும் ஒரு ஊதியமில்லாத ஊழியராக வாழ்ந்து வருகின்றனர்.

    மனைவியின் சொல்லை கேட்டு அப்பா வெளியே போய் வரலாம் என்று கூட்டிக்கொண்டு போய் ரெயில் நிலையத்திலோ, கோவில் அருகிலோ நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என்று சொல்லி சென்று விடுகின்றனர். இப்படி சென்றுவிட்ட தனது மகனை நினைத்து முதியோர்கள் அலைந்து திரிகின்றனர். அப்பா, அம்மா என்று பின்னாலேயே அலைந்த மகன் இன்று மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்ப தற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.

    ஆட்டை விற்று, மாட்டை விற்று, நகைகளை நிலங்களை பிள்ளைக்காக விற்று படிக்க வைத்து உயரச் செய்து எனது மகன் இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று கர்வம் கொண்டு பெருமையடையும் பெற்றோர்கள் பலர் தற்போது முதியோர் இல்லத்தில் உள்ளனர். உணவிலிருந்து உறக்கம் வரை குழந்தைகளுக்காகவே வாழ்பவர்கள் பெற்றோர்கள்.

    தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்மானத்தைகூட தூக்கி எறிபவர்கள்தான் பெற்றோர்கள். அப்படிப்பட்ட பெற்றோர் இன்று வீட்டிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.

    அவ்வாறு அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    1 மாதத்திற்கு குறைந்தது 30 பேர் அனாதையாக விடப்பட்டு மீட்கப்பட்டு காப்பகத்தில் அரவணைக்கப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்படுவது விதவை பெண்கள்தான். கணவன் இருக்கும்வரை அவர் ஆதரவுடன் இருந்த பல பெண்கள் கணவன் இறந்த பின்னர் நிர்கதியாக நிற்பது அதிகமாகி வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த கமலேஷ் குமாரி (75), சமீரா அப்ரோஜ் (70), புஷ்பா (60), சுரேந்தர் சவுத்ரி (57), சவ்ஹான் (50) ஆகிய 5 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை கோட்ட சீனியர் கமாண்டர் முத்துக்கும் ரேசன் மற்றும் அதிகாரிகள் ரோகித்குமார், சைனி, போலீஸ் ஏட்டு பாண்டி தலைமையில் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு இவர்கள் முதியோர் காப்பகத்தில் விடப்பட்டுள்ளனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தவித்தவர்களில் எண்ணூரை சேர்ந்த 75 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை கமலேஷ் குமாரியும் ஒருவர். இவர் இரண்டு முதுகலை பட்டங்களை படித்தவர். 7 மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர். சென்னையில் உள்ள இவரது சொத்தை யாரோ ஏமாற்றி அபகரித்துவிட்டதாலும், உறவினர்கள் யாரும் இவரை கண்டு கொள்ளாததாலும் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்தார். அவர் மீட்கப்பட்டு ஒரு முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊருக்கு சென்று வருவோம் என தந்தையையோ, தாயையோ ரெயிலில் கூட்டி வந்து ரெயில் நிலையங்களில் விட்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பெண் ஒருவர் 3 நாட்களாக ரெயில் நிலையத்தில் ஒரு ஓரத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்து கொண்டிருப்பதை அறிந்து மீட்க சென்றோம்.

    எங்களை கண்டதும் கதறி அழுத மூதாட்டி ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் என் மகன்... அவனை ஒன்னும் செஞ்சிடாதீங்க என்று கெஞ்சி கேட்டு கதறினார்.

    அவரை சமாதானப்படுத்தி வாருங்கள், நாங்கள் அழைத்து செல்கிறோம் என்று அழைத்து சென்று அவருக்கு உணவளித்து உடைகளை வழங்கி அருகில் உள்ள காப்பகத்தில் சேர்த்தோம். நன்றாக வாழ்ந்தவர். அவர் முகவரியை கூட சொல்ல மறுத்துவிட்டார் என்றார்.

    வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் அனாதையாக ஆதரவின்றி தவிக்கவிடப்படுகின்றனர்.

    தள்ளாத சூழ்நிலையில் விடப்பட்ட முதியோர்களை காப்பகங்கள் அரவணைத்து பாதுகாக்கின்றன. பெரிய மேட்டில் சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய சமுதாய நிறுவனம் இணைந்து ஆதரவற்ற வர்களை பாதுகாத்து வருகிறது. இங்குள்ள காப்பக நிர்வாகி கிருத்திகா கூறியதாவது:-

    உறவுகளால் அதிகம் கைவிடப்படுபவர்களில் 55 வயதில் இருந்து 85 வயதானவர்களே அதிகம். குடும்பத்தினரின் கடும்சொல் தாங்காமல் கண்ணீர் ததும்ப வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தங்கியிருந்தோரை மீட்டு எங்கள் காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம். உணவு, உடை வழங்கி மருத்துவ வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை மறந்து காப்ப கத்தில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்க ஏற்பாடு செய்கிறோம்.

    முடிந்தளவு அவர்களின் உறவுகளுடன் பேசி கவுன்சிலிங் கொடுத்து சேர்த்தும் வைக்கிறோம்.

    பெரியமேடு ஸ்டிரிஸ்கர்ஸ் தெரு காப்பகத்தில் 25 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவின்றி வந்தவர்கள் தான் என்றார்.

    தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமாக ஆதரவற்றோர் விடப்படுகின்றனர். அதிகமாக சென்னையில் வருடத்திற்கு 2000-க்கும் மேற்பட்டோர் ஆதரவின்றி கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் காணப்பட்டு மீட்கப்படுவதாக முதியோர் காப்பகங்கள் தெரிவிக்கின்றன.

    கண் விழித்து இரவு பகலாக நமக்காக உழைத்த பெற்றோரை கண் கலங்க வைத்து ஏதோ அறியாத புது இடத்தில் தவிக்கவிட்டு செல்லும் இவர்களை கல் நெஞ்சம் கொண்டவர் என்பதா? இல்லை பிறர் கண் கலங்குவதை வேடிக்கை பார்க்கும் நன்றி கெட்ட மனிதர் என்பதா? காலமே பதில் சொல்லும்.

    • குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.
    • பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம்.

    எல்லா பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

    இதுபோல பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்தவைப்பது சற்று சிரமமான ஒன்று. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்கூட பாதிக்கப்படலாம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கலாம், குழந்தைகள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள், அதை எப்படிச் சரிசெய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

    புதிதாகப் பள்ளியில் சேரும்போது, சில குழந்தைகள் அந்தப் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது அடம்பிடிப்பார்கள். என்றாலும், தொடர்ச்சியாக 20 நாள்கள் பள்ளி செல்லும் காலத்தில் அவர்களுக்கு அந்தச் சூழல் பழகிவிடும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு சூழலில் பள்ளி செல்ல மீண்டும் அடம்பிடிக்கலாம். சமாதானம் செய்து அனுப்பிவைத்தால் சூழலை ஏற்றுக்கொள்வார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால், ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் திடீரென்று பள்ளிக்குச் செல்ல மறுத்து, சில உடல்நிலைக் காரணங்களைச் சொல்லி, தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முயல்வார்கள். ஏதோ உடல்நல பாதிப்பு என நினைத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தால், எல்லாம் நார்மலாக இருக்கும். இதுவே குழந்தைகளின் அன்றாட நிகழ்வாகும்போது பெற்றோர் தங்கள் குழந்தையின் செயல்பாடுகளை அவசியம் ஆராய வேண்டும்.

    * பள்ளிக்குச் செல்வதால் அம்மாவைப் பிரியவேண்டியிருக்கும், இதனால் தனக்கோ, தன் அம்மாவுக்கோ ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என குழந்தை பயத்துக்கு ஆளாகலாம். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எனவே, இது 'ஸ்கூல் போபியா' கிடையாது; பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கான பயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    * சில குழந்தைகள் மென்மையான மனம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் பிற குழந்தைகளின், ஆசிரியர்களின், ஸ்கூல் வேன் டிரைவர், ஆயா ஆகியோரின் கேலி, கிண்டல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ ஆளாகியிருக்கலாம். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம்.

    * தான் பள்ளி சென்றவுடன் தன் தம்பி அல்லது தங்கை மட்டும் அம்மாவுடன் இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல், தானும் வீட்டிலேயே இருக்கிறேன் என அடம்பிடிப்பார்கள் சிலர்.

    * சில குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் கற்றல் குறைபாடு ஏற்படலாம். இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளைக் கண்டிக்கும்போது பள்ளிக்குச் செல்ல அவர்கள் நிச்சயம் மறுப்பார்கள்.

    * உடல்நிலை பிரச்னை அல்லது அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் நீண்ட நாள்கள் விடுமுறையில் இருந்த குழந்தைகளுக்கு, மீண்டும் பள்ளிச் சூழலை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள்.

    * குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் `வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, தலை வலிக்கிறது' போன்ற உடல்ரீதியான காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்க முயல்வார்கள். 'சரி லீவ் எடுத்துக்கோ' என பெற்றோர் சொன்ன சில மணி நேரத்தில் இயல்பான சூழலுக்கு வந்துவிடுவார்கள்.

    * மனரீதியான பாதிப்பு ஏதேனும் அடைந்திருந்தால், தூக்கத்தில் அது அலறல்களாக வெளிப்படும்.

    * ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களைப் பற்றி வீட்டில் அடிக்கடி குறை கூறலாம்.

    * பள்ளி சார்ந்த செயல்பாடுகளான வீட்டுப்பாடம் எழுதுவது, பாடம் படிப்பது போன்றவற்றை வீட்டிலிருந்தே தான் செய்துகொள்வதாகச் சொல்வார்கள்; கெஞ்சுவார்கள்.

    குழந்தைகள் இது போன்ற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் உடனே இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

    தீர்வுகள்!

    பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை, 'நீ ஸ்கூலுக்கு கண்டிப்பாகப் போகணும்' என வற்புறுத்தாமல், அவர்கள் ஏன் அடம்பிடிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் யோசிக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் அடிக்கடி பள்ளி செல்ல மறுக்கிறார்கள் என்றால், முதலில் உடல்ரீதியான பாதிப்பு இருக்கிறதா எனக் குழந்தைகள்நல மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் உரிய சிகிச்சை வழங்கி, முழுமையாகக் குணப்படுத்தி, அதன் பிறகு பள்ளிக்கு அனுப்பலாம்.

    சில குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாலியாக விளையாடலாம்; டி.வி பார்க்கலாம் என்றும்கூட பள்ளி செல்ல மறுப்பது உண்டு. எனவே, அவர்கள் விடுப்பு எடுக்கும் நாள்களில் டி.வி பார்க்கவும், விளையாடவும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தான் நினைத்தது நடக்கவில்லை எனும் பட்சத்தில் மறுநாள் அவர்களே ஸ்கூலுக்குக் கிளம்பிவிடுவார்கள்.

    `ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டாலே மிரட்சியுடன் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் வகுப்பு ஆசிரியரை அணுகி உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல், மிரட்டல்களுக்கு ஆளாகிறதா என்பதை விசாரித்துத் தீர்வு காணுங்கள்.

    பெற்றோரைப் பிரிய இயலாமல் பள்ளி செல்ல மறுக்கிறார்கள் எனில், பெற்றோரிடமிருந்து குழந்தை விலகியிருக்கச் சிறிது சிறிதாக எப்படிப் பழக்கப்படுத்தலாம் என ஆசிரியர்களுடன் கலந்து பேசலாம். பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம். அதன் பின்னர் சில தினங்கள் குழந்தையை வகுப்பறையில் அமரச் சொல்லி, 'அம்மா ஸ்கூல்லதான் இருப்பேன், லஞ்ச் டைம்ல பார்க்கலாம்' எனச் சொல்லி பள்ளியில் காத்திருக்கலாம். இப்படிப் படிப்படியாக பள்ளியின் சூழலையும் பெற்றோரின் பிரிவையும் குழந்தையை மனதளவில் ஏற்றுக்கொள்ளச் செய்யலாம்.

    பள்ளி செல்ல குழந்தை மறுப்பதற்கு என்ன காரணம் என்றே பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாத சூழலில், குழந்தைகள் உளவியல் அல்லது மனநல மருத்துவரை அணுகித் தீர்வு காண வேண்டும்.

    • இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
    • பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.

    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

    இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு அன்பையும், அரவணைப்பையும் வழங்குகிறார்களோ அதே அளவுக்கு அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அப்படி கடுமையாக கண்டிப்பது உளவியல் ரீதியாக அவர்களை காயப்படுத்தும்.

    எப்போதும் அன்பாக நடத்தும் பெற்றோர் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கத்தை அவர்கள் மனதில் விதைக்கும். ஒவ்வொரு சமயத்திலும் அவர்கள் தவறு செய்யும்போது குரலை உயர்த்தி கடுமையாக பேசுவது மனதளவில் காயப்படுத்திவிடும்.

    அதன் அதிர்வு ஆழ் மனதில் பதிவாகிவிடும். அதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும். உளவியல் ரீதியாக பலவீனமாகிவிடுவார்கள். பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.

    உங்கள் குழந்தையை பொது இடத்தில் கத்தாதீர்கள், இதனால் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் குற்றஉணர்ச்சியாக உணர்வார்கள். மேலும் நல்ல பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்குப் பதிலாக, அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இதன் விளையாவாக அவர்கள் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களை வெறுக்கத் தொடங்கலாம். எனவே அவர்கள் தவறு செய்தாலும் தனியாக அழைத்து சென்று கண்டிப்பது நல்லது.

    ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்கின்றன, அது தவறு என ஒரு முறை புரிய வைத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும், அதைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அவை குழந்தைகளின் நடத்தையில் மேலும் சிக்கலை தரும். எனவே, தொடர்ந்து அசிங்கப்படுத்துவை தவிர்க்கவும்.

    • ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும்.
    • கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

    பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்.

    குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிவதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன.

    கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.

    அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்.

    எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தைகளுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்.

    திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.

    வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.

    • படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள்.
    • குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

    படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். அதற்கான சில ஆலோசனைகள்:

    5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளிடம்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. பெற்றோர், இதற்காக குழந்தைகளை குறை கூறுவது அல்லது தண்டிப்பதைத் தவிர்த்து, முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். குற்றம் சாட்டுவதும், தண்டிப்பதும் பிரச்சினையை மோசமாக்கும்.

    நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது அவர்களுடைய பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அதற்கு உதவுவீர்கள் என்று அவர்களுக்கு உறுதி அளியுங்கள்.

    படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள். நீங்கள் அருகில் இருந்து உதவி செய்யுங்கள். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும்.

    குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.

    • ஊற்றுக்குழி அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் 100 வருடம் பழமை வாய்ந்தது.
    • ஊற்றுக்குழி பள்ளி மாணவர்களை பிலாக்கோடு பள்ளிக்கு மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சித்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ளது ஊற்றுக்குழி அரசு தொடக்கப்பள்ளி.இந்த பள்ளிக்கட்டிடம் 100 வருடம் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. கட்டிடம் பராமரிப்பு பணிகள் நடந்து பல வருடங்கள் ஆகிறது எனவும் கூறப்படுகிறது.

    தற்போது இந்த பள்ளியில் 37 மாணவர்கள் உள்ளனர். பள்ளி கோடை விடுமுறையில் இந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் பாதுகாப்பு கருதி மாணவர்களை பிலாக்கோடு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் செயல்பட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று ஊற்றுக்குழி பள்ளி மாணவர்களை பிலாக்கோடு பள்ளிக்கு மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சித்தனர்.

    தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர்.

    உடனே குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விரைந்து சென்று பள்ளி தலைமையாசிரியை தங்கம் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு முடிவில் பள்ளி கட்டிடம் பராமரிப்பு செய்வது எனவும், பராமரிப்பு பணிகள் முடியும்வரை வகுப்புகளை அங்குள்ள சமூக நலக்கூடத்தில் நடத்துவது எனவும் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

    இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.

    குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:

    சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:

    குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

    ஊக்கத்தொகை வழங்குங்கள்:

    நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.

    பணம் சம்பாதிக்கும் வழிகள்:

    குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

    பண இலக்குகள்:

    குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.

    ×