search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் பேசும் திறனை மேம்படுத்தும் ஸ்பீச் தெரபி
    X

    குழந்தைகளின் பேசும் திறனை மேம்படுத்தும் ஸ்பீச் தெரபி

    • ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும்.
    • கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

    பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்.

    குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிவதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன.

    கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.

    அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்.

    எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தைகளுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்.

    திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.

    வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.

    Next Story
    ×