search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Rawat"

    • அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது.
    • கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

    சிவசேனாவின் குரலாக கருதப்படும் சஞ்சய் ராவத் எம்.பி. பத்ரா சால் வழக்கில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது. பத்ரா சால் மோசடி என்றால் என்ன?. இதில் சஞ்சய் ராவத் சிக்கியது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ளது சித்தார்த் நகர். இது பத்ரா சால் என பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பில் 672 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். 2007-ம் ஆண்டு பத்ரா சாலை சீரமைக்க மகாடா நிறுவனம், எச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் கிளை நிறுவனமான குரு ஆஷிசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் எச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்கு கிடைக்க தொழில் அதிபர் பிரவின் ராவத் உதவி செய்தார். பிரவின் ராவத், சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமானவர் ஆவார். குரு ஆஷிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக ராகேஷ் வாதவன், சாரங் வாதவன் மற்றும் பிரவின் ராவத் இருந்தனர்.

    மகாடா குரு ஆஷிஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் முதலில் குடிசைப்பகுதியில் வசித்த 672 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் மகாடாவுக்கு 3 ஆயிரம் வீடும், 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் வீடு கட்டி விற்பனை செய்யலாம்.

    ஆனால் குரு ஆஷிஸ் நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு கட்டாமல், முதலில் விற்பனை செய்வதற்காக அடுக்குமாடி கட்டிட பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.138 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நிறுவனம் மகாடா கொடுத்த நிலத்தை முறைகேடாக பல்வேறு கட்டுமான அதிபர்களுக்கு ரூ.1,034 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பத்ரா சால் குடிசைப்பகுதி மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பத்ரா சால் வழக்கில் ரூ.1,200 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை பிரவின் ராவத்தை கைது செய்தது. விசாரணையில் அவர் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை எச்.டி.ஐ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.112 கோடியை பெற்றது தெரியவந்தது.

    இந்த பணத்தை பிரவின் ராவத் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 2010-ம் ஆண்டு பிரவின் ராவத்தின் மனைவி மாதுரி, சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு ரூ.83 லட்சம் வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறார். இந்த பணத்தில் வர்ஷா தாதரில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

    இதேபோல மோசடி மூலம் கிடைத்த பணத்தில் மாதுரி ராவத், வர்ஷா ராவத், தொழில் அதிபர் சுஜித் பட்கரின் முன்னாள் மனைவி சுவப்னா பட்கா் ஆகியோர் பெயர்களில் அலிபாக், கிம் கடற்கரையில் 8 பிளாட் நிலம் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை தாதரில் உள்ள வர்ஷா ராவத்தின் வீடு, அலிபாக்கில் உள்ள நிலம் என ரூ.11 கோடி சொத்துக்களை முடக்கியது.

    இந்தநிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. மேலும் அவர் பத்ரா சால் மோசடி வழக்கில் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார். அவரது எழுத்துக்கள் சிவசேனா தொண்டர்களை கவரும் வகையில் ஆவேசமாக இருக்கும். சிவசேனாவின் குரலாகவே கருதப்படும் இவர் முறைகேடு வழக்கில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருந்து வருகிறார்.
    • கடந்த மாதம் 1-ந்தேதி 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மும்பை :

    சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்(வயது60). மாநிலங்களவை எம்.பி.யான இவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருந்து வருகிறார்.

    2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா, தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத் என கூறப்படுகிறது.

    கடந்த மாதம் சிவசேனா 2 ஆக உடைந்த நிலையில், சஞ்சய் ராவத் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை கடுமையான வார்த்தைகளால் விமா்சித்து வந்தார்.

    இந்தநிலையில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்ததாக கூறப்படும் மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் அவர், தற்போது சிறையில் உள்ளார்.

    பிரவின் ராவத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பத்ரா சால் மோசடியில் சஞ்சய் ராவத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் கடந்த மாதம் 1-ந் தேதி சுமார் 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன்பிறகு 2 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டியது இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சுமார் 10 மணி நேர சோதனையில் ரூ.11½ லட்சம் ரொக்கம், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதன் பிறகு சஞ்சய் ராவத்திடம் தென்மும்பையில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அவரை மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சஞ்சய் ராவத்தை 8 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. எனினும் சிறப்பு கோர்ட்டு அவரை வரும் 4-ந் தேதி வரை விசாரிக்க அனுமதி வழங்கியது.

    • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
    • சஞ்சய் ராவத் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

    மும்பை :

    சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சஞ்சய் ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "எந்த ஊழலிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பாலாசாகேப் பால் தாக்கரே மீது சத்தியம் செய்து கூறுகிறேன்" என தெரிவித்தார்.

    இதுமட்டும் இன்றி எதிர்க்கட்சிகள் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "சஞ்சய் ராவத் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். அப்படியானால், அவர் விசாரணைக்கு பயப்படுவது ஏன்? அது தொடர்ந்து நடக்கட்டும். நீங்கள் நிரபராதி என்றால் ஏன் பயம்?"

    சந்தர்ப்ப சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் தான் சிவசேனா அதிருப்தி அணியில் இணைந்ததாக சிவசேனா தலைவர் அர்ஜூன் கோட்கர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "நாங்கள் அவரை அழைத்தோமா? அமலாக்கத்துறைக்கு பயந்து அல்லது எந்த அழுத்தத்தாலும் எங்களிடமோ அல்லது பா.ஜனதாவுக்கு வரவேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் மந்திரி கிரிஷ் மகாஜன் கூறுகையில், "சஞ்சய் ராவத் மறைந்த பால் தாக்கரேயின் பெயரை தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா தொண்டர்களை தூண்டிவிடுகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.

    மற்றொரு பா.ஜனதா தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையா கூறுகையில், "சஞ்சய் ராவத் தற்போது விசாரணையில் இருக்கிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர் இப்போது எந்த அரசியல் சார்ந்த கருத்துகளையும் கூறக்கூடாது. அவர் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

    • சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது.
    • எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்‌கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார்.

    மும்பை :

    சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதற்கு மத்தியில் தானே மாவட்டத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தனது இல்லமான மாதோஸ்ரீயில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை விருந்தினர்கள் தற்போது சஞ்சய் ராவத்தின் வீட்டில் உள்ளனர். அவர் கைது செய்யப்படலாம். இது என்ன வகையான சதி? சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது. எனவே சிவசேனாவை அழிக்க சதி நடக்கிறது. இந்த நடவடிக்கை அதில் ஒரு அங்கமாகும்.

    சிவசேனாவால் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்கள் தற்போது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.

    முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கர் குறைந்தபட்சம் அழுத்தத்தின் கீழ் தான் அதிருப்தி அணிக்கு செல்வதாக ஒப்புக்கொண்டார்.

    ஆனந்த் திகே 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதை காட்டினார்.

    கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் மும்பை குறித்த கருத்தால் மராத்தியர்கள் மற்றும் மராட்டியத்தை அவமதித்துள்ளார். அவருக்கு கோலாப்பூரின் செருப்புகளை காட்ட வேண்டும்.

    இந்த விஷயத்தில் அடிமைகளாக மாறியவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது. இது மிகவும் லேசானது. எங்களுக்கு அவரின் பேச்சில் உடன்பாடில்லை என்று கூறி கடந்துவிட்டனர்.

    எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்‌கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார். ஆனால் நாங்கள் கூட்டணி கட்சிகளாக இருந்தபோதும் எதிரிகளாக கருதப்பட்டோம்.

    அஞ்சாத, அநீதிக்கு எதிராக போராடும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் கட்சிக்கு தேவைப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவாக உள்ளது. இந்தநிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்ற 17 நாட்கள் ஆன பிறகும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

    இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "2½ லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 மந்திரிகள் உள்ளனர். ஆனால் 12 கோடி மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 மந்திரிகள் மட்டுமே உள்ளனர்.

    அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது?. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மந்திரி சபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 12 மந்திரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சொல்கிறது. எனவே கடந்த 2 வாரமாக 2 நபர் மந்திரி சபை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சட்டத்தின்படி செல்லாது. மரியாதைக்குரிய கவர்னரே, இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?" என கூறியுள்ளார்.

    • பா.ஜகவுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர்.
    • அணி மாறிய பல சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கட்சி ஆட்சி செய்துவந்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால் மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்ததுடன், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார். இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அரசு சட்டவிரோதமானது என சிவசேனா கட்சி தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று பேசியதாவது:-

    மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 100 பேர் இறந்துள்ளனர். இதுபோல மாநிலத்தில் காலரா நோயால் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். இத்தகைய மோசமான சூழ்நிலையில் மாநில அரசும் தற்போது ஆட்சியில் இல்லை. ஏனெனில் இது ஒரு சட்டவிரோதமான அரசு ஆகும். மாநிலத்தில் ஆட்சியும், மந்திரிசபையும் இல்லாத நிலையில் நமது கவர்னர் எங்கே இருக்கிறார்? மாநிலத்தில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் கவர்னர் எங்கே? நேற்றுவரை எங்களை அவர் வழிநடத்தி வந்தார். இப்போது அவர் எங்கே? அவருடைய வழிகாட்டுதல் இப்போது மாநிலத்திற்கு தேவையாகும்.

    அணி மாறிய பல சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம். தகுதி நீக்கம் என்ற வாள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களின் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்னும் முடிவு எடுக்காததால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாதது. இது அரசியல் ஊழல். அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் எதுவும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமலாக்கத்துறை பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது.
    • சஞ்சய் ராவத் எம்.பி., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசி வருகிறார்.

    மும்பை:

    சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதனால் சிவசேனா தலைமையிலான அரசு கவிழும் ஆபத்தை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் எம்.பி., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசி வருகிறார்.

    இந்தநிலையில் அமலாக்கத்துறை பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு திடீரென நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது. அதில் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் அவரது வக்கீல் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.

    அப்போது, அலிபாக்கில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்ததால் சஞ்சய் ராவத்தால் ஆஜராக முடியவில்லை என்றும், முக்கிய ஆவணங்களை சேகரித்து விசாரணைக்கு ஆஜராகும் வகையில் அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் சஞ்சய் ராவத்திற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டது. ஜூலை 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகும்படி அவருக்கு புதிய சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

    மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட நிறுவனம் ரூ.1,039 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், ரூ.100 கோடியை பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.
    • அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

    மும்பை :

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்கள் சிவசேனாவின் புதிய அணியை உருவாக்கி உள்ளதாக நேற்று அறிவித்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எனது வெளிப்படையான சாவல் என்னவென்றால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த காலங்களில் சகன் புஜ்பால், நாராயண் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்ற கட்சியில் இணைவதற்காக சிவசேனா எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    அதிருப்தியாளர்கள் குழுவுக்குள்ளும் அதிருப்தி ஏற்படலாம். அவர்கள் மீண்டும் மும்பைக்கு வந்தவுடன் உண்மையான அதிருப்தி எங்கு இருக்கிறது என்று தெரியும். சிவசேனா மற்றும் பாலாசாகேப் தாக்கரே ஆகியோரின் பெயரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கவுகாத்தியில் ஓட்டலில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு உள்ள அதிருப்தியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

    அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர். எனவே அவர்கள் ஏன் இன்னும் கவுகாத்தியில் இருக்கிறார்கள். மும்பை வாருங்கள். வரவேற்க நானே விமான நிலையத்திற்கு செல்வேன். திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன. கவுகாத்தியில் உள்ள பலருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்குகிறதா என்று பார்ப்போம்.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் தந்தை பெயரையோ அல்லது வதோதரா, சூரத், டெல்லியில் உள்ள உங்களின் தந்தையின் பெயரையோ பயன்படுத்தி வாக்குகளை பெறுங்கள்.

    அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிர் மற்றும் உடைமைகள் சேதமாகி உள்ள நிலையில், அவர்கள் அங்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதியுதவி செய்கின்றனர். அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள ஓட்டலில் 340 அறைகள் உள்ளன. இது 18 மாடி கட்டிடம். இதில் அதிருப்தியாளர்கள் 3 தளங்களை பதிவு செய்துள்ளனர். நானும் இந்த ஓட்டலில் 40 அறைகள் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி வருகிறேன்.

    உத்தவ் தாக்கரேவை சுற்றுலா பயணியாக அசாமுக்கு அழைக்க அசாம் முதல்-மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மராட்டியம் மற்றும் அசாம் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். எனவே அங்குள்ள ஓட்டலில் முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் எனக்கு இன்னும் பதில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இது ஒரு சட்ட போராட்டம், சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன.
    • அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது.

    மும்பை :

    மகா விகாஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் காரணமாக சட்டமன்றத்தில் எங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிருப்தியாளர்கள் குழு தன்னிடம் தேவையான எண்ணிக்கையில் இருப்பதாகவும், ஜனநாயக முறையில் தாங்கள் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.

    ஆனால் இந்த எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதிருப்தியாளர்கள் திரும்பி வரும்போது, பாலாசாகேப் தாக்கரே மற்றும் சிவசேனா மீதான அவர்களின் விசுவாசத்தை அது சோதிக்கும்.

    இது ஒரு சட்ட போராட்டம், சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒன்றாக உள்ளது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மகா விகாஸ் அகாடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது.

    பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×