search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Rawat"

    • சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை.
    • சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இரண்டு அணியினரும் உரிமை கோரி வருகின்றனர்.

    இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஷிண்டே அணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை.

    இந்த பிளவு கானல் நீராக தான் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர். ஆனால் கட்சி அப்படியே தான் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் வரை தேர்தல் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்ட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.

    • ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது.
    • ‘லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது.

    மும்பை :

    உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

    ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே 'லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தவும் 'லவ் ஜிகாத்' ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?. நடிகை துனிஷா சர்மா, ஷரத்தா கபூரின் மரணம் லவ் ஜிகாத் என கூறமுடியாது.

    எந்த மதம், சமூகத்தை சேர்ந்த பெண்களும் வன்முறைக்கு ஆளாக கூடாது. 2023-ல் நாடு அச்சம் இல்லாததாக மாறும் என நம்புகிறோம். அதிகாரத்தின் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.

    ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெறும் எனவும், அதன் இலக்கை அடையும் என நம்புகிறோம். 2022-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தலைமைக்கு புதிய ஒளியையும், அவதாரத்தையும் கொடுத்தது. 2023-லும் அது தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியல் மாற்றத்தை காண முடியும். பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையை விட வேண்டும் என்கிறார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்க விரும்பவில்லை.

    இந்து, முஸ்லிம் இடையே பிளவை தூண்டுவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும். மோடியும், அமித்ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைக்க கூடாது. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை.
    • காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

    மும்பை :

    சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். இவர் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளதாக சாம்னா பத்திரிகையில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    வெறுப்பை உணர முடிகிறது. தற்போது அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் அழிக்க விரும்புவதால் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளது.

    காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியதற்கு, அவர் உண்மையை தான் கூறி உள்ளார் என்றேன். உடனே ஊடகங்கள் நான் அடங்கிவிட்டதாக கூற தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை. அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அரசியல் விஷமாகிவிட்டது. இதுபோல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இல்லை.

    தற்போது டெல்லி ஆட்சியாளர்கள் அவர்கள் விரும்புவதை கேட்க விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி செயல்படாதவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் டெல்லி ஆட்சியாளர்களின் எதிரிகள் அல்ல. ஆனால் நேருக்கு நேராக உண்மையை பேசுபவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் மாண்பை குறைக்கின்றனர்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • தற்போது மகாராஷ்டிராவில் அதிகம் வெறுக்கப்படும் நபர் ஏக்நாத் ஷிண்டே.
    • கட்சியின் சின்னம் முடக்கப்படுவது புதிதல்ல.

    மும்பை :

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவசேனாவின் வில், அம்பு சின்னம் முடக்கப்பட்டது குறித்து சஞ்சய் ராவத்திடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு புதிய சின்னம் ஒதுக்கப்படுவது பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் கட்சியின் சின்னம் முடக்கப்படுவது புதிதல்ல. காங்கிரசின் சின்னம் கூட முடக்கப்பட்டுள்ளது. ஜனதா தளத்தின் சின்னமும் முடக்கப்பட்டு இருக்கிறது.

    தேர்தல் ஆணையத்தால் சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தவிடாமல் மட்டும் தான் தடுக்க முடியும். கட்சி உயிரோடு தான் இருக்கும். சிவசேனா பெயரையும், வில், அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணியால் எளிதில் பெற்றிபெற முடியாது. தற்போது மகாராஷ்டிராவில் அதிகம் வெறுக்கப்படும் நபர் ஏக்நாத் ஷிண்டே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பத்ரா சால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    • Sanjay Rawat received Rs 2 lakh monthly from Pravin Rawat Woman statement in ED
    • சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார்.

    மும்பை :

    சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பத்ரா சால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளது. அதில், சஞ்சய் ராவத்திற்கு எதிராக சாட்சி அளித்த அவரின் முன்னாள் தொழில் கூட்டாளியான சுவப்னா பட்கர் என்ற பெண்ணின் வாக்குமூலம் சேர்க்கப்பட்டு உள்ளது.

    அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    சஞ்சய் ராவத் குடும்பத்தினர் பெயரில் தொடங்கப்பட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் கணக்கில் வராத பணத்தை கையாண்டார். சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் தயாரிப்பு நிறுவனம் தாக்கரே என்ற பெயரில் படத்தை வெளியிட்டது. அந்த திரைப்பட நிறுவனம் மூலம் கணக்கில் வராத பணத்தை படம் தயாரிக்க சஞ்சய் ராவத் பயன்படுத்தினார்.

    கடந்த 2015-ல் நான் 'பால்கடு' என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் லாபத்தை சஞ்சய் ராவத் என்னிடம் இருந்து அபகரித்தார்.

    அலிபாக்கில் ரூ.9 முதல் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை, ரூ.51 லட்சம் என குறைந்த மதிப்பு காட்டி ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கினார். 2008 முதல் 2014 வரை 2 முறை சாம்னா அலுவலகத்தில் பத்ரா சால் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரவின் ராவத்தின் ஊழியர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சஞ்சய் ராவத்திற்கு பணம் கொடுத்தனர்.

    எனக்கு தெரிந்தவரை சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார். அவர் மாதந்தோறும் ரூ.2 லட்சத்தை சஞ்சய் ராவத்துக்கு கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    மும்பை :

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடியில் திரைமறைவில் இருந்து செயல்பட்டதாக கூறியது. மேலும் பத்ராசால் மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டு கூடுதல் குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரது நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கிடையே சஞ்சய் ராவத் தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    • பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    மும்பை

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர் சஞ்சய் ராவத். சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான இவர், பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக கட்சியை உடைத்த போதும், அதிருப்தி அணியினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    இந்தநிலையில் சஞ்சய் ராவத் பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்டவிரோத பணத்தின் ஒரு பகுதி சஞ்சய் ராவத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சிறப்பு கோர்ட்டு சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 (வருகிற 19-ந்தேதி வரை) நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    • கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
    • சிறையில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுப்பு.

    மும்பை

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சாலில் நடந்த குடிசை சீரமைப்பு பணியில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரவின் ராவத் என்ற தனக்கு நெருக்கமானவரிடம் இருந்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. குடும்பத்தினருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரியவந்தது.

    இதையடுத்து இந்த மோசடி வழக்கில் கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தது. கடந்த சனிக்கிழமை பத்ரா சால் மோசடி தொடர்பாக சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இந்த விசாரணையில் பத்ரா சால் முறைகேடு மூலம் சஞ்சய் ராவத் ரூ.2 கோடியே 25 லட்சம் பெற்றதாகவும், அந்த பணத்தை அலிபாக்கில் சொத்து வாங்க பயன்படுத்தியதும் தெரியவந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

    இந்தநிலையில் நேற்று காவல் முடிந்து அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அப்போது சஞ்சய் ராவத்தை இனிமேல் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. அதேநேரத்தில் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே வருகிற 22-ந்தேதி வரை சஞ்சய் ராவத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும் கோர்ட்டு சஞ்சய் ராவத்திற்கு இதய நோய் இருப்பதை சுட்டிக்காட்டி ஜெயிலில் அவர் வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து சாப்பிட அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது.

    கோர்ட்டு உத்தரவை அடுத்து மும்பை ஆர்தர்ரோடு சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார்.

    • பத்ரா சால் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைதுசெய்துள்ளது.
    • சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

    மும்பை:

    மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

    இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • சஞ்சய் ராவத் மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கில் ரூ.1.08 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மும்பையில் 'பத்ரா சால்' என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். சஞ்சய் ராவத்தை போலீசார் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்ரா சால் முறைகேடு மூலம் ரூ.1 கோடியே 6 லட்சத்தை பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    இதையடுத்து அவரை 4-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. சஞ்சய் ராவத்தின் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், அலிபாக்கில் உள்ள சொத்துகளை சஞ்சய் ராவத் வாங்கியதில் கணிசமான பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், எனவே காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணைக்கு ஒத்துழைக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் சஞ்சய் ராவத் குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.1.17 கோடியை அலிபாக் சொத்துக்களுக்காக பயன்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு விசாரணையில் வெளிவந்த ரூ.1.06 கோடியை அவர் கூடுதலாக பயன்படுத்தி உள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கில் ரூ.1.08 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வர்ஷா ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருவரிடமும் ஒன்றாக விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மேலும் சில பணபரிமாற்றம் குறித்த தகவல் வெளிவந்து இருப்பது விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று குறிப்பிட்டார்.

    மேலும் சஞ்சய் ராவத்தின் அமலாக்கத்துறை காவலை வருகிற 8-ந் தேதி வரை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    முன்னதாக அமலாக்கத்துறை காவலின்போது தன்னை காற்றோட்டம் இல்லாத அறையில் வைத்து இருந்ததாக நீதிபதியிடம் சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஆனால் இதை மறுத்த அமலாக்கத்துறை வக்கீல், "ஏ.சி. வசதி இருந்ததால் அறையின் ஜன்னல் அடைக்கப்பட்டு இருந்தது" என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், எனது உடல்நல பிரச்சினையால் ஏ.சி. வசதியை என்னால் பயன்படுத்த முடியாது" என்றார்.

    இதையடுத்து காற்றோட்டமான அறை வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா இன்று விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று(வெள்ளிக்கிழமை) ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவிக்கும் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது.
    • கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

    சிவசேனாவின் குரலாக கருதப்படும் சஞ்சய் ராவத் எம்.பி. பத்ரா சால் வழக்கில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது. பத்ரா சால் மோசடி என்றால் என்ன?. இதில் சஞ்சய் ராவத் சிக்கியது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ளது சித்தார்த் நகர். இது பத்ரா சால் என பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பில் 672 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். 2007-ம் ஆண்டு பத்ரா சாலை சீரமைக்க மகாடா நிறுவனம், எச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் கிளை நிறுவனமான குரு ஆஷிசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் எச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்கு கிடைக்க தொழில் அதிபர் பிரவின் ராவத் உதவி செய்தார். பிரவின் ராவத், சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமானவர் ஆவார். குரு ஆஷிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக ராகேஷ் வாதவன், சாரங் வாதவன் மற்றும் பிரவின் ராவத் இருந்தனர்.

    மகாடா குரு ஆஷிஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் முதலில் குடிசைப்பகுதியில் வசித்த 672 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் மகாடாவுக்கு 3 ஆயிரம் வீடும், 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் வீடு கட்டி விற்பனை செய்யலாம்.

    ஆனால் குரு ஆஷிஸ் நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு கட்டாமல், முதலில் விற்பனை செய்வதற்காக அடுக்குமாடி கட்டிட பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.138 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நிறுவனம் மகாடா கொடுத்த நிலத்தை முறைகேடாக பல்வேறு கட்டுமான அதிபர்களுக்கு ரூ.1,034 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பத்ரா சால் குடிசைப்பகுதி மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பத்ரா சால் வழக்கில் ரூ.1,200 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை பிரவின் ராவத்தை கைது செய்தது. விசாரணையில் அவர் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை எச்.டி.ஐ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.112 கோடியை பெற்றது தெரியவந்தது.

    இந்த பணத்தை பிரவின் ராவத் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 2010-ம் ஆண்டு பிரவின் ராவத்தின் மனைவி மாதுரி, சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு ரூ.83 லட்சம் வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறார். இந்த பணத்தில் வர்ஷா தாதரில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

    இதேபோல மோசடி மூலம் கிடைத்த பணத்தில் மாதுரி ராவத், வர்ஷா ராவத், தொழில் அதிபர் சுஜித் பட்கரின் முன்னாள் மனைவி சுவப்னா பட்கா் ஆகியோர் பெயர்களில் அலிபாக், கிம் கடற்கரையில் 8 பிளாட் நிலம் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை தாதரில் உள்ள வர்ஷா ராவத்தின் வீடு, அலிபாக்கில் உள்ள நிலம் என ரூ.11 கோடி சொத்துக்களை முடக்கியது.

    இந்தநிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. மேலும் அவர் பத்ரா சால் மோசடி வழக்கில் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார். அவரது எழுத்துக்கள் சிவசேனா தொண்டர்களை கவரும் வகையில் ஆவேசமாக இருக்கும். சிவசேனாவின் குரலாகவே கருதப்படும் இவர் முறைகேடு வழக்கில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×