search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சஞ்சய் ராவத் சிறையில் அடைப்பு: சிறையில் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி
    X

    சஞ்சய் ராவத் சிறையில் அடைப்பு: சிறையில் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி

    • கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
    • சிறையில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுப்பு.

    மும்பை

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சாலில் நடந்த குடிசை சீரமைப்பு பணியில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரவின் ராவத் என்ற தனக்கு நெருக்கமானவரிடம் இருந்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. குடும்பத்தினருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரியவந்தது.

    இதையடுத்து இந்த மோசடி வழக்கில் கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தது. கடந்த சனிக்கிழமை பத்ரா சால் மோசடி தொடர்பாக சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இந்த விசாரணையில் பத்ரா சால் முறைகேடு மூலம் சஞ்சய் ராவத் ரூ.2 கோடியே 25 லட்சம் பெற்றதாகவும், அந்த பணத்தை அலிபாக்கில் சொத்து வாங்க பயன்படுத்தியதும் தெரியவந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

    இந்தநிலையில் நேற்று காவல் முடிந்து அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அப்போது சஞ்சய் ராவத்தை இனிமேல் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. அதேநேரத்தில் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே வருகிற 22-ந்தேதி வரை சஞ்சய் ராவத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும் கோர்ட்டு சஞ்சய் ராவத்திற்கு இதய நோய் இருப்பதை சுட்டிக்காட்டி ஜெயிலில் அவர் வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து சாப்பிட அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது.

    கோர்ட்டு உத்தரவை அடுத்து மும்பை ஆர்தர்ரோடு சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×