search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டும்: சஞ்சய் ராவத் சவால்
    X

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டும்: சஞ்சய் ராவத் சவால்

    • திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.
    • அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

    மும்பை :

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்கள் சிவசேனாவின் புதிய அணியை உருவாக்கி உள்ளதாக நேற்று அறிவித்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எனது வெளிப்படையான சாவல் என்னவென்றால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த காலங்களில் சகன் புஜ்பால், நாராயண் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்ற கட்சியில் இணைவதற்காக சிவசேனா எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    அதிருப்தியாளர்கள் குழுவுக்குள்ளும் அதிருப்தி ஏற்படலாம். அவர்கள் மீண்டும் மும்பைக்கு வந்தவுடன் உண்மையான அதிருப்தி எங்கு இருக்கிறது என்று தெரியும். சிவசேனா மற்றும் பாலாசாகேப் தாக்கரே ஆகியோரின் பெயரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கவுகாத்தியில் ஓட்டலில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு உள்ள அதிருப்தியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

    அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர். எனவே அவர்கள் ஏன் இன்னும் கவுகாத்தியில் இருக்கிறார்கள். மும்பை வாருங்கள். வரவேற்க நானே விமான நிலையத்திற்கு செல்வேன். திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன. கவுகாத்தியில் உள்ள பலருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்குகிறதா என்று பார்ப்போம்.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் தந்தை பெயரையோ அல்லது வதோதரா, சூரத், டெல்லியில் உள்ள உங்களின் தந்தையின் பெயரையோ பயன்படுத்தி வாக்குகளை பெறுங்கள்.

    அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிர் மற்றும் உடைமைகள் சேதமாகி உள்ள நிலையில், அவர்கள் அங்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதியுதவி செய்கின்றனர். அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள ஓட்டலில் 340 அறைகள் உள்ளன. இது 18 மாடி கட்டிடம். இதில் அதிருப்தியாளர்கள் 3 தளங்களை பதிவு செய்துள்ளனர். நானும் இந்த ஓட்டலில் 40 அறைகள் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி வருகிறேன்.

    உத்தவ் தாக்கரேவை சுற்றுலா பயணியாக அசாமுக்கு அழைக்க அசாம் முதல்-மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மராட்டியம் மற்றும் அசாம் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். எனவே அங்குள்ள ஓட்டலில் முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் எனக்கு இன்னும் பதில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×