search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia ukraine war"

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன
    • 2 வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றார் பொதுச்செயலாளர்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கிடையே போர்கள் தோன்றாமல் இருக்க அமெரிக்காவின் தலைமையில் பல உலக நாடுகளை உள்ளடக்கி உருவான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் (United Nations) அமைப்பு.

    ஐ.நா. சபையின் முக்கிய அங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council).

    இதில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இவற்றில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் 5.

    2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் நேற்றுடன் 2-வருட காலகட்டத்தை நிறைவு செய்துள்ளது.

    உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் போர்நிறுத்த கோரிக்கையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.


    இப்பின்னணியில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:

    2 வருடங்களாக நடக்கும் இப்போரினால் ஐரோப்பிய மக்களின் இதயத்தில் ஒரு திறந்த, ஆறாத காயம் ஏற்பட்டுள்ளது.

    சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சச்சரவுகள் அமைதியான வழிமுறையிலேயே தீர்க்கப்பட வேண்டும்.

    உக்ரைனில் பலர் தங்கள் குழந்தைகளை எப்போது இழந்து விடுவோமோ என அச்சத்திலேயே வாழ்கின்றனர்.

    ரஷிய வீரர்களும் இப்போரினால் உயிரிழக்கின்றனர்.

    இரண்டு வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிப்பதை பார்த்து விட்டோம். போதும்.

    சர்வதேச சட்டங்களின்படி அமைதி ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.

    இவ்வாறு குட்டெரஸ் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள், பல நாடுகளின் அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ரஷிய உக்ரைன் போரினால் இதுவரை உக்ரைனில் பொதுமக்களில் 10,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது
    • இங்கிலாந்து உக்ரைனுக்கு அளிக்கும் உதவிகளை வரவேற்கிறேன் என்றார் மன்னர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று, தனது அண்டை நாடான உக்ரைனை, ரஷியா, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை போர் நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

    போர்நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இப்பின்னணியில், உக்ரைனுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைத்து வந்த நிதியுதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு நிதியுதவி தொடர்ந்து அளிக்க போவதாக உறுதியளித்தார்.


    இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    எந்த வித முன்னறிவிப்போ, தூண்டுதலோ இன்றி ஒரு தாக்குதலை உக்ரைன் சந்தித்தது.

    அந்நாட்டு மக்கள் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு துன்பத்தையும், அடக்குமுறையையும் சந்தித்து வருகின்றனர்.

    இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து அளித்து வரும் உதவிகளை வரவேற்கிறேன். இங்கிலாந்தில் உக்ரைன் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியையும் பாராட்டுகிறேன்.

    அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுகின்ற நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவுவது பாராட்டத்தக்கது.

    மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் உக்ரைன் மக்கள் அசாத்திய மன உறுதியையும், வீரத்தையும் காட்டி வருவதை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதும், அவர் பூரண நலம் பெற உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு செய்தி அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
    • உக்ரைன் ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது.

    உக்ரைன் மீது ரஷியா போரை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என துவங்கி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடுமையான போராக இது மாறி இருக்கிறது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    ரஷிய - உக்ரைன் போர் தற்போதைக்கு முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை ரஷியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளன. அந்த வகையில், ரஷியா - உக்ரைன் போர் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை குறித்து தொடர்ந்து பார்ப்போம்..

     


    பிப்ரவரி 24, 2022-ம் ஆண்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. ஆரம்பக் கட்டத்தில் கீவ், கார்கீவ் மற்றும் ஒடீசா என முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷிய தாக்குதலை தீவிரப்படுத்தியது.

    ரஷிய தாக்குதலை எதிர்கொண்ட உக்ரைன், ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது. போர் துவங்கிய சில வாரங்களில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷியா தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும், வான்வழி தாக்குதல்களையும் நடத்தியது. இதில் பெரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

     


    தற்போது ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அமெரிக்கா ரஷியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. போர் துவங்கியதில் இருந்து ஒரே நாளில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அதிக கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    புதிய கட்டுப்பாடுகள் ரஷிய ராணுவம் மற்றும் அவர்களின் போர் முயற்சிகளை முடிந்தவரையில் குறைக்க செய்யும் வகையில் உள்ளது. அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன் சார்பில் ரஷியாவுக்கு எதிராக 13-வது முறையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவை ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வைகயில் அமைந்துள்ளன.

     


    ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ரஷியா சார்பில் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    "ரஷியாவின் போர் நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், சண்டையிடுவதை மேலும் கடுமையாக்கும் வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன," என்று அமெரிக்க அதிகாரியான வேலி அடிமோ தெரிவித்துள்ளார்.

    ரஷியாவில் செயல்பட்டு வரும் 500 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரஷியாவின் ராணுவ துறையை சேர்ந்தவை ஆகும்.

    இந்த போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. முதல் ஆண்டிலேயே அந்நாட்டின் பொருளாதாரம் 30 முதல் 35 சதவீதம் வரை சரிந்துள்ளது. உக்ரைன் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்படைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ரஷியாவிற்கு எதிராக பல வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது
    • "உக்ரைனுக்கு இன்றும் என்றும் ஆதரவு தொடரும்" என்றார் ரிஷி சுனக்

    இன்றுடன், "சிறப்பு ராணுவ நடவடிக்கை" (special military operation) எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, 2 வருடங்கள் ஆகின்றன.

    ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    போர் நிறுத்தம் மற்றும் படைகளை உக்ரைனிலிருந்து திரும்ப பெறுவது குறித்து பல உலக நாடுகள் கடந்த பல மாதங்களாக முன் வைத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து வந்தார்.

    இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ரஷியாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது.

    பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு கிடைத்து வந்த பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் ரிஷி சுனக், உக்ரைனுக்கு சுமார் ரூ. 2600 கோடி (250 மில்லியன் பவுண்ட்) மதிப்பிற்கு ராணுவ தளவாட உதவிக்காக நிதி ஒதுக்கியுள்ளார்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    போர் தொடங்கி 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ரஷியாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இங்கிலாந்து மேலும் உறுதியாக உள்ளது.

    என்றுமே சர்வாதிகாரம் வெற்றி பெறுவதில்லை.

    நாங்கள் இன்றும் உக்ரைன் பக்கமே நிற்கிறோம்; தொடர்ந்தும் நிற்போம்.

    இதற்காக எத்தனை நாட்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • கடும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • உக்ரைனுக்கு உதவ மறுப்பது நியாயமற்ற செயல் என பைடன் கூறினார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் போரிட்டு வருகிறது.

    போர் தொடங்கி 2 வருடங்களை நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் இதுவரை பலத்த சேதங்கள் நிகழ்ந்துள்ளது.

    பல உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவியை பெருமளவு வழங்கி வந்த அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் தரவில்லை.

    இப்பின்னணியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), டெலாவேர் (Delaware) மாநில தேவாலய கூட்டத்தை முடித்து வரும் போது உக்ரைன் விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) தொலைபேசியில் உரையாடினேன். உக்ரைனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க வழி ஏற்படுத்தப்படும் என அவருக்கு நம்பிக்கை தெரிவித்தேன்.

    அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உக்ரைன் ராணுவத்திற்கு உதவிட மறுப்பது அறிவற்ற செயல் மட்டுமல்ல; நியாயம் இல்லாததும் கூட.

    நான் இதற்காக உறுப்பினர்களோடு போராடி, உக்ரைனுக்கு தேவைப்படும் தளவாடங்கள் கிடைக்க வழிவகை செய்வேன்.

    அமெரிக்க உதவி இல்லாவிட்டால், உக்ரைன் மேலும் பல பிராந்தியங்களை ரஷியா வசம் இழக்க நேரிடும் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பைடன் கூறினார்.

    முன்னதாக, உக்ரைனுக்கான ராணுவ உதவி குறித்து விவாதிக்காமல் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மனிதாபிமான உதவி, நிதியுதவி மற்றும் ராணுவ உதவி எனும் வகையில் $75 பில்லியனுக்கும் மேல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

    • நேட்டோ அமைப்பிடம் உதவி கோரி வருகிறது உக்ரைன்
    • நிதி பங்களிப்பை செலுத்துங்கள் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்

    2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    சில மாதங்களாக ராணுவ தளவாட கையிருப்பு குறைந்துள்ளதாக கூறி மேற்கத்திய நாடுகளிடமும், நேட்டோ (NATO) அமைப்பிடமும் உக்ரைன் உதவி கோரி வருகிறது.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைனுடன் நிற்காமல் மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பேசினார்.

    அதில் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் நேட்டோ அமைப்பில் இருந்த ஒரு உறுப்பினர் நாட்டின் தலைவருடன் (பெயர் குறிப்பிடாமல்) அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம், நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில், ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

    நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால், இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறி விடுவேன்.

    நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை $110 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்கா உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷியாவில் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    "தாய்நாட்டை பாதுகாக்கும் அடிப்படைகள்" எனும் பாடத்தின் கீழ் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டு கல்வித்துறை சார்ந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்த பயிற்சியின் கீழ், உக்ரைனுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென அணு ஆயுத போராக மாறும் பட்சத்தில் மாணவர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்வர். மாணவர்கள் பேரழிவு ஆயுதங்களின் திறன் மற்றும் அவற்றின் சேதப்படுத்தும் விளைவுகள், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் கற்றுக் கொள்வர்.

    இதோடு இயற்கை, மனிதர்களால் உருவாக்கப்படும் மற்றும் உயிரியல் சமூக இயற்கை பேரிடர்கள் மற்றும் ராணுவ பேராபத்து உள்ளிட்ட அவசர கால நிலைகளில் மாணவர்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வர். இத்துடன் அடிப்படை ராணுவ பயிற்சி, கலாஷ்நிகோவ் ரைஃபிள், கையெறி குண்டுகளை எப்படி கையாள வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது.

    • உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
    • பாதிரியார் டுப்மேனுக்கு பல ஊர்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் பலமாக ஏற்பட்டிருந்தும், போர் தீவிரமாக 710 நாட்களை கடந்து தொடர்கிறது.

    ரஷியாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சுமார் 40 சதவீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்

    உதவிகள் கேட்டு அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை இயங்க செய்யவும் அமெரிக்க உதவியை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சாஸ்டன் (Sawston) கிராமம்.

    சாஸ்டன் பகுதியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர், 29 வயதான வில் லயான் டுப்மேன் (Will Lyon Tupman).

    உக்ரைன் மக்கள் இருளில் அவதிப்படுவதை கேள்விப்பட்டு 2022லிருந்தே பாதிரியார் டுப்மேன், பாதி உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மெழுகுவர்த்திகளை சேகரிக்க தொடங்கினார்.

    தங்கள் தேவாலயத்திலும் இருந்த பயன்படுத்தப்படாத மெழுகுவர்த்திகளையும் தனது சேகரிப்பில் இணைத்தார். மேலும், இவரது கோரிக்கைக்கு உதவ பலர் முன் வந்ததால், தங்கள் வீட்டில் இருந்த பாதி எரிந்த நிலையில் உள்ள மற்றும் உபயோகப்படுத்தாத மெழுகுவர்த்திகளையும் அவரிடம் வழங்கினர்.


    இவையனைத்தையும் பாதிரியார் டுப்மேன், அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தில் கொடுத்து, உருக்கி, புது மெழுகுவர்த்திகளாக மாற்றினார். அந்த புது மெழுகுவர்த்திகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த அரிய பணியை, பாதிரியார் டுப்மேன் தற்போது வரை தொடர்கிறார். இவரது முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சர்ச்களிலில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

    உக்ரைன் மக்கள் டுப்மேனின் இந்த பெரும் உதவியினால் பயனடைந்துள்ளதால், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    • இரண்டு ஆண்டுகளை தொட இருக்கும் நிலையிலும் ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது.
    • கடந்த வாரம் போர்க்கைதிகளுடன் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இன்று பரிமாற்றம் நடந்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. என்றபோதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.

    போர் நிறுத்தம் என்பது ரஷியாவுக்கு சாதகமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.

    ரஷியாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த வாரம் ரஷியாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

    அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷிய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ராணுவ உதவி செய்து வருகிறது
    • ஆயுத விற்பனை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சம்

    கடந்த 2023ல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள ராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

    2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது.

    அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும்.

    இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

    அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

    ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும்.

    இது குறித்து அமெரிக்க அரசு, "பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்" என தெரிவித்தது.

    ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

    அமெரிக்க அரசிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் ராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம்.

    ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் பறந்து கொண்டிருந்தது
    • இவ்விமானம், ராணுவ சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது

    ரஷிய-உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ளது, பெல்கொரோட் (Belgorod) பகுதி.

    கடந்த 2022 பிப்ரவரி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போரில் இந்நகரம் பல முறை தாக்குதலுக்கு உள்ளானது.

    ரஷியாவின் இல்யுஷின்-76 ரக போக்குவரத்து விமானம் ஒன்று, உக்ரைனிலிருந்து ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் தென் பெல்கொரோட் பகுதியில் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 65 உக்ரைன் வீரர்களும் உயிரிழந்தனர்.

    இத்தகவலை வெளியிட்ட பெல்கொரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் க்ளாட்கோவ் (Vyacheslav Gladkov), "புலனாய்வு படையும், அவசர கால சேவை பணியாளர் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனது பயண திட்டங்களை மாற்றி நானும் அங்கு செல்கிறேன்" என தெரிவித்தார்.

    விபத்துக்கான காரணம், விமான பணியாளர்களின் நிலை உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் தற்போது வரை தெரியவில்லை.

    அவ்விமானம், பெல்கொரோட் பிராந்தியத்திற்கு தென்கிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் யப்லோனோவோ (Yablonovo) கிராமத்தில் விழுவது குறித்த ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த விமானம், ராணுவ போக்குவரத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. ராணுவ சரக்குகள், தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்ல இது பயன்படுத்தப்படும்.

    வழக்கமாக 5 பேர் வரை பயணம் செய்யும் இந்த விமானத்தில் அதிகபட்சமாக 90 பேர் வரை பயணிக்கலாம்.

    ரஷிய அரசாங்கம் நிலைமையை ஆராய்வதாக தெரிவித்தது. உக்ரைன் அரசும் தகவல்களை அறிய முயற்சித்து வருவதாக தெரிவித்தது.

    • அமெரிக்க அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது
    • ஐரோப்பிய நாடுகளை உக்ரைனுக்கு உதவ கேட்டு கொண்டார் ஆஸ்டின்

    2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் மற்றும் கட்டிட சேதங்கள் நடந்து, போர் தொடங்கி அடுத்த மாதத்துடன் 2 வருடங்கள் ஆக உள்ள நிலையிலும், போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது.

    அமெரிக்க அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனிடம் தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

    நேற்று ரஷியா, உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்; பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.


    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    2022ல் இந்த கூட்டமைப்பை அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் (70) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வரும் ஆஸ்டின், தனது வீட்டில் இருந்தபடியே "வீடியோ கான்ஃப்ரன்சிங்" வழியாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம், "போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவால் இனி நிதியுதவி அளிக்க இயலாது. உக்ரைனுக்கு உயிர் காக்கும் ராணுவ வான்வழி தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப உபகரணங்களை தந்து உதவவும், நிதியுதவி வழங்கவும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டு கொள்கிறேன்" என தனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தார்.

    அமெரிக்க உதவி கேள்விக்குறி ஆனதால், ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்ய போகின்றன என உக்ரைன் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

    ×