search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "King Charles III"

    • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணமடைந்துள்ளதாக நேற்று தகவல் பரவியது.
    • இது ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தீயாக பரவியது.

    லண்டன்:

    இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது.

    இதற்கிடையே, ரஷிய ஊடகங்களில் நேற்று மதியத்திற்கு மேல் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக தகவல் பரவியது. ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாக பரவியது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியிட்ட ரஷிய ஊடகங்கள், மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் இணைத்திருந்தன.

    இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் வெறும் புரளி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    • நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது
    • இங்கிலாந்து உக்ரைனுக்கு அளிக்கும் உதவிகளை வரவேற்கிறேன் என்றார் மன்னர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று, தனது அண்டை நாடான உக்ரைனை, ரஷியா, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை போர் நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

    போர்நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இப்பின்னணியில், உக்ரைனுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைத்து வந்த நிதியுதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு நிதியுதவி தொடர்ந்து அளிக்க போவதாக உறுதியளித்தார்.


    இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    எந்த வித முன்னறிவிப்போ, தூண்டுதலோ இன்றி ஒரு தாக்குதலை உக்ரைன் சந்தித்தது.

    அந்நாட்டு மக்கள் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு துன்பத்தையும், அடக்குமுறையையும் சந்தித்து வருகின்றனர்.

    இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து அளித்து வரும் உதவிகளை வரவேற்கிறேன். இங்கிலாந்தில் உக்ரைன் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியையும் பாராட்டுகிறேன்.

    அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுகின்ற நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவுவது பாராட்டத்தக்கது.

    மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் உக்ரைன் மக்கள் அசாத்திய மன உறுதியையும், வீரத்தையும் காட்டி வருவதை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதும், அவர் பூரண நலம் பெற உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு செய்தி அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு கேன்சர் இருப்பதாக அரண்மனை தெரிவித்தது
    • உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது

    கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரண்மனை அதிகாரபூர்வமாக கடந்த பிப்ரவரி 6 அன்று தெரிவித்தது. ஆனால், எந்த வகையான கேன்சர் என்பது பற்றியோ உடலின் எந்த பாகத்தில் உள்ளது என்பது குறித்தோ அரண்மனை அலுவலகம் தகவல் வெளியிடவில்லை.

    மேலும், மன்னர் சார்லஸ் இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற தொடங்கி விட்டதாகவும் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகெங்கும் உள்ள பல முக்கிய தலைவர்கள் செய்தி அனுப்பி வந்தனர்.

    மேலும், பல இங்கிலாந்து மக்களும் மன்னர் சார்லஸ் நலம் பெற அவருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

    இதுவரை உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கைப்பட எழுதி மற்றும் வரைந்து அனுப்பியுள்ள கடிதங்கள் தினந்தோறும் அரண்மனையில் குவிகின்றன.


    இது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    இது போன்ற அன்பான எண்ணங்கள்தான் எனக்கு பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன. பல கடிதங்களை படிக்கும் போது எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது.

    நான் நலமடைய விரும்பும் அனைவருக்கும் என் நன்றி.

    எனக்காக நேரம் ஒதுக்கி தங்களின் அன்பான வார்த்தைகளால் கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு சார்லஸ் தெரிவித்தார்.

    • புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்
    • மருமகள் கேத்ரீனுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது

    பிரிட்டிஷ் அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (King Charles III).

    2022 செப்டம்பர் மாதம் சார்லஸின் தாயார், அரசி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) காலமானார்.

    அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 73.

    சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், அடுத்த வாரம் இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டது. தற்போது ஆபத்தில்லாத நிலையில் உள்ள இந்நோய்க்காக சிகிச்சை பெறுவார் என தெரிவித்த அந்த அறிக்கையில், சிகிச்சை முறைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    இதை தொடர்ந்து, அரசர் சார்லஸ் பங்கேற்க இருந்த பல நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    50 வயதை கடந்த பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஒரு பொதுவான நோய் என்றது பிரிட்டன் சுகாதார துறை,

    முன்னதாக, வேல்ஸ் இளவரசி (Princess of Wales) என அழைக்கப்படும் அரசர் சார்லஸின் மருமகள், 42 வயதாகும் கேத்ரீன் (Catherine) இரு வார சிகிச்சைக்காக லண்டன் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அரண்மனை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    வயிற்று பகுதி நோய்க்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது என அறிவித்திருந்த அரண்மனை செய்தி குறிப்பு, நோய் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

    • மன்னர் 3ம் சார்லசுக்கும், அவரது மனைவி அரசி கமிலாவிற்கும் நேற்று முடிசூட்டப்பட்டது.
    • மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார்.

    ஆனால் அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மன்னர் 3ம் சார்லசுக்கும், அவரது மனைவி அரசி கமிலாவிற்கும் நேற்று முடிசூட்டப்பட்டது. இந்த விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில், மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் அரசி கமிலாவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுவடையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் குவிந்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

    மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை வண்ண மிகு ஊர்வலம் நடந்தது.

    மன்னர் சார்லசும், அவரது மனைவியும், ராணியுமான கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சாரட் வண்டி தங்க முலாம் பூசப்பட்டது

    சாலையோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது. அதன்பின், மன்னர் 3-ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

    உறுதிமொழி எடுத்ததும் மன்னரின் தலை மற்றும் உடல் பகுதியில் புனித எண்ணை தேய்த்து அபிஷேகம் நடைபெறும். இந்த எண்ணை மன்னருக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டதாகும். பின்னர் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அவருக்கு அளிக்கப்படும்.

    இந்நிலையில், மூத்த மதகுருமார்கள் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மன்னர் சார்லசுக்கு செங்கோல் வழங்கப்பட்டு ஆர்ச் பிஷப் அவரது தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டி தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர வைத்தார். அவரது மனைவி கமீலா சார்லசுக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் 1953-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 முக்கிய தலைவர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மற்ற நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்திய அரசின் சார்பில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் தனது மனைவி டாக்டர் சுதிப் தன்கருடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பக்கிங்காம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பங்கேற்றார்.

    இந்த விழாவில் இந்து, சீக்கியம், முஸ்லீம், புத்தமதம், ஜெயின் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களும் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதில் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.

    மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி தம்பதி இங்கிலாந்து செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

    • அரசர் மூன்றாம் சார்லஸ் கடந்த செப்டம்பர் மாதம் அரியணை ஏறினார்.
    • மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். சார்லஸ் மன்னர் செப்டம்பரில் அரியணை ஏறினார்.

    இதற்கிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது. இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இதன்படி, மே 6-ம் தேதி முடிசூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, சிறப்பிக்கும் வகையிலும், அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையிலும் நாடு முழுவதும் வங்கி விடுமுறை அமலில் இருக்கும்.

    ×