

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.
கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.
காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.
இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.