என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nitin gadkari"
- இனி, மாசுபடுத்தும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள் சாலைகளில் செல்லாது.
- மாற்று எரிபொருளுடன் கூடிய புதிய வாகனங்கள் வரும்.
புதுடெல்லி :
மத்திய-மாநில அரசுகள், அரசு போக்குவரத்துக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவது பற்றி போக்குவரத்து விதிகளில் ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. இதன்படி அந்த வாகனங்களை அப்புறப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அவர் இதுதொடர்பாக பேசும்போது கூறியதாவது:-
15 ஆண்டுகளுக்கும் மேலான 9 லட்சத்துக்கும் அதிகமான அரசு வாகனங்களை அகற்றுவதற்கு நாங்கள் தற்போது ஒப்புதல் அளித்துள்ளோம். எனவே இனி, மாசுபடுத்தும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள் சாலைகளில் செல்லாது. அதற்கு பதிலாக மாற்று எரிபொருளுடன் கூடிய புதிய வாகனங்கள் வரும். இது காற்று மாசுபாட்டை பெருமளவு குறைக்கும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் அவை நிறுத்தப்படும். அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.
மாசுபடுத்தும் வாகனங்களுக்கு பதிலாக எத்தனால், மெத்தனால், பயோ-சி.என்.ஜி., பயோ-எல்.என்.ஜி. மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முறையான போக்குவரத்து அணுகுமுறையை நாடு பின்பற்றினால் 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு நிலை, நிகர பூஜ்ஜியத்தை அடைந்துவிடும். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய மின்சார பஸ்களை இயக்குவது காலத்தின் தேவை. இது மக்களை பொதுப்போக்குவரத்தை நோக்கி ஈர்க்க வைக்கும். மின்சார வாகனங்களில் தனியார் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பழைய அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவதோடு, அந்த வாகனங்களை சிதைப்பதற்கான நடவடிக்கை பற்றியும் போக்குவரத்து விதிகளில் கூறப்பட்டு உள்ளது. வாகன சிதைப்புக்கொள்கை பற்றி பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் 150 கி.மீ. தூரத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு சிதைப்பு மையமாவது அமைக்கப்படும் என நிதின் கட்காரி கூறியிருந்தார். இந்தநிலையில் பழைய அரசு வாகனங்களை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, நாட்டின் பாதுகாப்புக்காகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல தனியார் வாகனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தகுதி சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி.
- நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மும்பை :
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி. இவரது சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். நாக்பூரில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் 2 தடவை நாக்பூர் சவுக், காம்ளா பகுதியில் உள்ள நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்தபோதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் எனவும் மிரட்டினார்.
மிரட்டல் குறித்து அலுவலக ஊழியர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாக்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
- வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம்
- மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம்.
புதுடெல்லி:
டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டில் உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும்.
நமது தளவாட செலவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, இது 16 சதவீதமாக உள்ளது, ஆனால் 2024 இறுதி வரை, ஒற்றை இலக்கமாக, 9 சதவீதம் வரை கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன்.
கட்டுமானத் தொழில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய பொருட்கள் மற்றும் வளங்களில் 40 சதவீதத்தை பாதுகாக்கிறது. வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். சிமென்ட் மற்றும் இரும்பு ஆகியவை கட்டுமானத்திற்கான முக்கியமான பொருட்கள் என்பதால் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம்.
தூய எரிசக்தியான பசுமை ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள். இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்காலத்தில், விமானம், ரெயில்வே, சாலை போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் தொழில்களில் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- மத்திய மந்திரி நிதின் கட்கரி கடிதம் ஒன்று வெளியிட்டார்.
- அதில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க. எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தனது பதில் கடிதத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 60 கி.மீ. தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
- மந்திரி நிதின் கட்கரியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
- இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
சிலிகுரி:
மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மேடையில் இருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் டார்ஜிலிங் பா.ஜ.க. எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நான்கு அல்லது ஆறு வழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்படும்.
- சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்பப் பெற முடிவு.
மும்பை:
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இந்த நெடுஞ் சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். பின்னர் இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். 13 ஆண்டுகளுக்குப் பின் செலவுகள் உட்பட முழு முதலிடும் முழுமையாக திரும்பக் கிடைத்துவிடும்.
இதே போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் சாலைப் பணிகள் முடிவடைந்து விடும். டெல்லியில் இருந்து ஜெய்பூர் இடையே 2 மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், செல்லும் வகையில் பசுமை விரைவு நெடுஞ்சாலை பணிள் நடைபெறுகின்றன. டெல்லி-ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும், டெல்லி -மும்பை இடையே 10 மணி நேரத்திலும் செல்கின்ற பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுக்கும் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டப்பணிகள் நடைபெறும் என நிதின் கட்கரி கூறினார்.
- 2024-ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:
வரும் 2024-ம் ஆண்டு முடிவதற்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை.
உத்தர பிரதேச மாநிலத்தை பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை பயன்படுத்துவதே, தற்போதைய காலத்தின் தேவை ஆகும். பொருளாதாரத்துடன், சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- இந்த சாலைத் திட்டம் 4 பகுதிகளாக கட்டப்படுகிறது.
- சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும்.
சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது என்றும் சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டத்திற்கான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 20.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் 2024-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம்.
- ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது.
மும்பை :
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். நாம் ஏழை மக்கள் தொகையை கொண்ட பணக்கார நாடு. ஏழை மக்கள் பட்டினி, வேலையின்மை, வறுமை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.
இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல. சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வை போல, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து உள்ளது. ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளியை குறைக்க கல்வி, சுகாதாரம், சேவை துறைகளில் வேலை செய்ய வேண்டியது உள்ளது.
பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கம் தெளிவானது. ஆனால் சமூக கடமை, உணர்வுடன் நாம் எப்படி வெவ்வேறு வகையான பிரிவுகளில் பணியாற்ற போகிறோம் என்பது தான் சவாலானது. நாம் நமது லட்சியத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே அதை சாதிக்க நமது வேகத்தை அதிகரிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக எல்லோரும் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறையும்.
- மக்கள் குறைவான கட்டணத்தில் வசதியான பயணத்தை விரும்புகின்றனர்.
பசுமை மற்றும் தூய்மைப் போக்குவரத்து குறித்து டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சிறப்புரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி, தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.
பொதுத்துறை மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் மின்சார வாகன பொதுப் போக்குவரத்து அமைப்பை, தொழில்ரீதியாக செயல்படுத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது போன்று லண்டனில் செயல்படும் போக்குவரத்து முறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
மக்கள் குறைவான கட்டணத்தில் அதிக வசதியான பயணத்தை விரும்புவதாக அவர் கூறினார். போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யவும், பயணத்தை எளிதாக்கவும், கைகளால் பயணச்சீட்டு தரும் முறைக்கு பதிலாக, அட்டை அல்லது க்யூஆர் குறியீடு முறையிலான பயணச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறைவதுடன், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் அவர் தெரிவித்தார். 15 லட்சம் கோடியில் ஆட்டோமொபைல் துறையை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும், இது 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மந்திரி நிதின் கட்கரி கூறினார்.
பொருளாதார நம்பகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மாற்று எரிபொருள் மற்றும் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- ‘பிரதமர் கதிசக்தி’ திட்டத்தால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
- இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள்.
புதுடெல்லி :
டெல்லியில், இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள், மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அந்த மின்சார வாகனங்களுக்கு சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவை அடிப்படையிலான சார்ஜ் ஏற்றும் மையங்கள் உருவாக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து, சோலார் மின்சார சப்ளையுடன் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறோம். அந்த சாலைகளில், ஆகாய மார்க்கமாக மின்வழிப்பாதை செல்லும். அத்தகைய சாலைகள் வழியாக செல்லும் கனரக லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள், மின்சார 'சார்ஜ்' ஏற்றிக் கொள்ளலாம்.
சுங்க சாவடிகளையும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் பொருளாதார நடவடிக்கைகள் பெருகும். வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும்.
'பிரதமர் கதிசக்தி' திட்டத்தால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தளவாட செலவுகள் குறைகிறது.
நெடுஞ்சாலைகள் அமைக்கும்போதும், விரிவாக்கம் செய்யும்போதும் மரக்கன்று நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சுமார் 3 கோடி மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்போகிறோம்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, இதுவரை 27 ஆயிரம் மரங்களை அப்புறப்படுத்தி, வெற்றிகரமாக வேறு இடங்களில் நட்டு வைத்துள்ளோம்.
இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். இந்திய தளவாடங்கள் துறையில் முதலீடு செய்ய அமெரிக்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்