search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gun"

    பீகார் மாநிலத்தில் கட்டாய திருமணத்துக்காக என்ஜினீயர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் பிடாபூர் மாவட்டம் வைசாலி பகுதியை சேர்ந்தவர் சரண்.

    என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.

    இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியங்கா குமாரியை திருமணம் செய்ய சரண் மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக சரணை கடத்தினர். சரணும், அவரது நண்பர் சவுரவ்சும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பிரியங்காவின் உறவினர் துப்பாக்கி முனையில் அவரை காரில் கடத்தி சென்றனர். 12 முதல் 15 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    சரண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது தாயார் வீனா தேவி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சரணை மீட்டனர். கடத்தல் தொடர்பாக பிரியங்கா தந்தை அரவிந்த்ராய் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை நெசப்பாக்கத்தில் கொடூரமாக மகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார். கணவர் தன்னை விலக்கி வைத்து இருந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுதாகர் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறினார்.

    துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கவும் சம்மதித்தார். இதை தொடர்ந்து இருவரும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அனந்தராமன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    உலகம் முழுவதும் 100 கோடி துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாகவும், இவற்றில் 84 சதவிகிதம் பொதுமக்கள் கைகளிலும் மீதமுள்ளவை ராணுவம் மற்றும் போலீசார் கைகளில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    உலகம் முழுவதுமுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே என்ற அமைப்பு, உலகில் உள்ள 230 நாடுகளில் உள்ள கைத்துப்பாக்கிகள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்கள், ராணுவம் மற்றும் காவல்துறை போன்று சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகள் ஆகியவை வைத்திருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் போன்று உலகில் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 17% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிர்ச்சி தரும் தகவலாக 85 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் தனியார், தனியாரால் நடத்தப்படும் பாதுகாப்பு நிறுவனங்கள், திருட்டு, கொள்ளை கும்பல்கள் ஆகியவையும் அடங்கும்.

    உலக மக்கள் தொகையில் 4% அளவிற்கே பங்களிப்பை அளிக்கும் அமெரிக்காவில் உலக துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 40% அளவுக்கு குவிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அங்கு 40 கோடி துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது.

    அதாவது அங்கு வசிக்கும் 100 பேருக்கு 121 துப்பாக்கிகள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் 100 பேருக்கு 90 என்ற அளவிற்கே அங்கு துப்பாக்கிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அங்கு வசிக்கும் மக்களை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சம் யாதெனில் பொதுமக்களிடம் குவிந்து கிடக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா இருப்பதே. இந்தியாவில் பொதுமக்கள் கைவசம் சுமார் 7 கோடி துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 5 கோடி துப்பாக்கிகளை கொண்டுள்ள சீனா 3வது இடத்தையும் பெற்றுள்ளன. எனினும் சராசரியாக மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 100 நபர்களுக்கு 52 துப்பாக்கிகள் கொண்டுள்ள ஏமன் 2 வது இடத்திலும் 39 துப்பாக்கிகளுடன் மாண்ரினெகரோ மற்றும் செர்பியா நாடுகள் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

    இந்த புள்ளிவிவரங்களுக்கு நேர்மாறாக மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் மாலாவி ஆகிய நாடுகளில் வசிப்போரில் 100 நபர்களுக்கு ஒன்றுக்கும் குறைவான துப்பாக்கியே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறை இதே போன்றதொரு ஆய்வை இதே அமைப்பானது, 2007ஆம் நடத்தியிருந்தது. அப்போது உலகில் மொத்தமே 87 கோடி துப்பாக்கிகளே இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 65 கோடி பொதுமக்களிடம் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    அரியானா மாநிலம் குர்கானில் வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    குர்கான்:

    அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் தயாசந்த். இவர் வேலைக்கு சரிவர வராமலும், வேலையிலும் அலட்சியமாக நடந்து கொண்டதால் இவர் மீது புகார் வந்தது.

    அந்த கார் நிறுவனத்தின் மேலதிகாரியாக எச்.ஆர். எனப்படும் மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் தினேஷ் சர்மா. இதையடுத்து, தயாசந்த்தை பணியில் இருந்து நீக்கினார் தினேஷ் சர்மா. இதனால் அவர்மீது ஆத்திரம் கொண்டார்.

    இந்நிலையில், தினேஷ் சர்மா நேற்று காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது கூட்டாளிகள் சிலருடன் தயாசந்த் பைக்கில் பின்தொடந்து வந்தார்.

    ஆளில்லா இடத்தில் காரை தடுத்து நிறுத்திய தயாசந்த் துப்பாக்கியால் தினேஷ் சர்மாவை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தினேஷ் சர்மாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினர், விசாரணை நடத்தி சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் தொடர்புள்ள நவீன் குமாரை கைது செய்தனர்.

    மேலும், எழுத்தாளர் பகவான் கொலை வழக்கில் தொடர்பு கொண்டு கைதாகி உள்ள மராட்டியத்தைச் சேர்ந்த அமுல் காளே, அமித் திக்விகார் என்ற பிரதீப் மகாஜன் மற்றும் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த மனோகர் துண்டப்பா யாவடி, பிரவீன் ஆகியோரையும் சிறப்பு விசாரணை குழுவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 4 டைரிகள், 22 செல்போன்கள், 74 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கும், கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, 9 மாதங்கள் கழித்து கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு 3-வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 30-ந் தேதி சிறப்பு விசாரணை குழுவினர் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் நவீன் குமார் மற்றும் பிரவீன் என்ற சுசீத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நவீன்குமார் பற்றி அவருடைய மனைவி கொடுத்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    நவீன் குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியை சிவமொக்காவில் இருந்து கடந்த ஆண்டு(2017) வாங்கி வந்தார். முன்னதாக, அவர் கலாசிபாளையா என்.ஆர். ரோட்டில் உள்ள கடையில் ரூ.3 ஆயிரம் கொடுத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு 18 குண்டுகளை வாங்கினார். துப்பாக்கி எதற்கு என்று கேட்ட அவருடைய மனைவியிடம், ‘இது பொம்மை துப்பாக்கி. உண்மை துப்பாக்கி இல்லை. வீட்டுக்கு வரும் குரங்குகளை விரட்ட பயன்படும்‘ என்று கூறியுள்ளார். மேலும் ஆயுத பூஜையின்போது துப்பாக்கியை வைத்து நவீன்குமார் சிறப்பு பூஜை செய்ததுடன், அவருடைய ரத்தத்தால் துப்பாக்கிக்கு திலகமிட்டு ‘ஜெய் பாரத் மாதா‘ என கூறியுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
    வேலூரில் குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்ததையடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    வேலூர் மாவட்டம் ஆலங்காயம் கல்லறைபட்டை சேர்ந்தவர் குமார் (வயது 35) தொழிலாளி. இவரது மகன் ராகவன் (9). கடந்த 26-ந்தேதி குமார் அந்த பகுதியில் உள்ள காட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    அதனை வீட்டில் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது துப்பாக்கி எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. அதில் இருந்து வெளியேறிய குண்டுகள், ராகவனின் இடது உள்ளங்காலில் பாய்ந்தது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் சாதாரண காயம் தான் என்று கட்டு போட்டு அனுப்பினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகவன் அவரது தாயுடன் செங்கம் புதூர் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது ராகவனுக்கு காலில் பயங்கரமாக வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர்.

    அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, காயம் ஏற்பட்ட இடத்தில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் சிறுவன் ராகவனின் காலில் இருந்து 4 துப்பாக்கி ரவைகளை அகற்றினர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சிறுவனின் தந்தை குமாரிடம் துப்பாக்கி குறித்து விசாரித்தனர். அப்போது அவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர்.
    சேலத்தில் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம், அழகாபுரம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). கூலி தொழிலாளி. இவர் நேற்று அழகாபுரம் காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்கு சென்றார்.

    அப்போது, அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் கோவிந்தசாமி ஒரு மறைவான இடத்தில் பதுங்கினார்.

    இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று கோவிந்தசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கையில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை கையில் வைத்திருந்ததும், முயல் வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை அழகாபுரம் போலீசார் பறிமுதல் செய்து, கோவிந்தசாமியை கைது செய்தனர். வாலிபர் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×