search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தார்
    X

    கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தார்

    கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினர், விசாரணை நடத்தி சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் தொடர்புள்ள நவீன் குமாரை கைது செய்தனர்.

    மேலும், எழுத்தாளர் பகவான் கொலை வழக்கில் தொடர்பு கொண்டு கைதாகி உள்ள மராட்டியத்தைச் சேர்ந்த அமுல் காளே, அமித் திக்விகார் என்ற பிரதீப் மகாஜன் மற்றும் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த மனோகர் துண்டப்பா யாவடி, பிரவீன் ஆகியோரையும் சிறப்பு விசாரணை குழுவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 4 டைரிகள், 22 செல்போன்கள், 74 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கும், கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, 9 மாதங்கள் கழித்து கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு 3-வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 30-ந் தேதி சிறப்பு விசாரணை குழுவினர் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் நவீன் குமார் மற்றும் பிரவீன் என்ற சுசீத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நவீன்குமார் பற்றி அவருடைய மனைவி கொடுத்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    நவீன் குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியை சிவமொக்காவில் இருந்து கடந்த ஆண்டு(2017) வாங்கி வந்தார். முன்னதாக, அவர் கலாசிபாளையா என்.ஆர். ரோட்டில் உள்ள கடையில் ரூ.3 ஆயிரம் கொடுத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு 18 குண்டுகளை வாங்கினார். துப்பாக்கி எதற்கு என்று கேட்ட அவருடைய மனைவியிடம், ‘இது பொம்மை துப்பாக்கி. உண்மை துப்பாக்கி இல்லை. வீட்டுக்கு வரும் குரங்குகளை விரட்ட பயன்படும்‘ என்று கூறியுள்ளார். மேலும் ஆயுத பூஜையின்போது துப்பாக்கியை வைத்து நவீன்குமார் சிறப்பு பூஜை செய்ததுடன், அவருடைய ரத்தத்தால் துப்பாக்கிக்கு திலகமிட்டு ‘ஜெய் பாரத் மாதா‘ என கூறியுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
    Next Story
    ×