search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake currency"

    மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை கோவையில் கைதான கும்பல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38), கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2 மாதங்களாக சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், கோவை மேட்டுப்பாளையம் மார்க்கெட், ஈரோடு ஜவுளி மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். இங்கு வழக்கமாக லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என்பதால் கள்ள நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுள்ளனர்.



    மேலும் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என சுற்றுலா தலங்களை குறி வைத்தும் இந்த கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கமி‌ஷன் அடிப்படையில் ஊழியர்களை நியமத்து கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். அந்த ஊழியர்கள் யார்-யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிதர் முகமது ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி, போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவை மற்றும் ஈரோட்டில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் மூலம் தற்போது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த கும்பலின் பின்னணி பற்றி முழு தகவல்களும் தெரியவரும். இவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    இருவரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடைசியாக யார்-யாரிடம்? பேசினார்கள் என பட்டியல் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கிதர் முகமது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியவர். தற்போது இந்த கும்பல் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர். அதிலும், யாரும் எளிதில் கண்டுபிடித்து விடாதபடி, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    குஜராத்தில் இருந்து இந்த கும்பலுக்கு நவீன காகிதங்களை சப்ளை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதன்பின்னணயில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கள்ள நோட்டு வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. #fakecurrency

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களாக அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்றும் பயங்கரவாதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகின்றனர். #fakecurrency
    கோவை:

    கோவையில் ரூ.1½ கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    கோவை சாய்பாபா காலனி அருகே அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகளை அச்சடித்த ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1¼ கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரங்கள், பிரிண்டர் கருவி, கள்ள நோட்டுகளை கத்தரிக்கும் கருவி, வெள்ளை காகித கட்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

    காரமடை நால் ரோடு பகுதியை சேர்ந்த சுந்தர் (38), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(55) ஆகியோருடன் சேர்ந்து கள்ளநோட்டுகளை அச்சடித்ததாக ஆனந்த் கூறினார்.

    இவர்கள் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சாய் பாபாகாலனி அருகே உள்ள வேலாண்டிபாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கள்ள நோட்டுகள் அச்சடித்துள்ளனர். இந்த கும்பலின் தலைவனாக சுந்தர் செயல்பட்டுள்ளார்.

    இவரது கூட்டாளியான கிதர் முகமதுவின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும். இவர்கள் இருவர் மீதும் கடந்த 2012-ம் ஆண்டிலேயே கோவை சரவணம்பட்டி, போத்தனூர் பகுதிகளில் கள்ள நோட்டுகள் அச்சடித்த வழக்குகள் உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசிலும் வழக்கு இருக்கிறது.

    சுந்தர், கிதர் முகமது இருவரும் கள்ளநோட்டு வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்ற ஆனந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும் என திட்டம் தீட்டினர்.

    சமீபத்தில் ஆனந்த் ஜெயிலில் இருந்து வெளிவந்த போது சுந்தர் அவரை தொடர்பு கொண்டார். கள்ள நோட்டு அச்சடிக்க கடை எடுத்து தந்தால் பணம் தருவதாக ஆசை காட்டினார். அதன்படி 1½ மாதங்களுக்கு முன்பு ரூ.2700 வாடகைக்கு அறை எடுத்து கொடுத்தார்.

    சுந்தர் எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கள்ளநோட்டுகளை அச்சடிப்பதில் கைதேர்ந்தவர். அச்சடித்த கள்ள நோட்டுகளை பல்வேறு ஏஜெண்டுகள் மூலமாக புழக்கத்தில் விடுவது கிதர் முகமதுவின் வேலையாக இருந்தது.

    இங்கு அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் திருப்பூர், நீலகிரி உள்பட தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

    கும்பல் தலைவன் சுந்தர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி என பல இடங்களில் தங்கி இருந்துள்ளார். எனவே அங்கும் கடைகளை வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த 2 வருடங்களாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது. அவர்களுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் கள்ள நோட்டு கும்பல் பற்றிய முழு தகவல்களும் தெரியவரும். எனவே அவர்களை பிடிப்பதற்காக கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    துணை கமி‌ஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர்கள் சோம சேகர், சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். ஒரு தனிப்படை கேரளாவுக்கு விரைந்துள்ளது.

    இதற்கிடையே, கைதான ஆனந்தை கோவை 1-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு குமாரசிவம் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆனந்த் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஆனந்தை காவலில் எடுத்து விசாரித்தால் கள்ள நோட்டு கும்பல் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என கருதுகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஓரிரு நாளில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படுகிறது. #fakecurrency
    கோவையில் பல கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கும் அதிகமான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து காவல்துறை ஒருவரை கைது செய்தது. #FakeCurrency
    கோவை:

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபோது, புதியதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது.

    அந்த 2,000 ரூபாய் நோட்டு மாறுபட்ட கலர் மற்றும் வடிவமைப்புடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த நோட்டு போன்று கள்ள நோட்டு தயாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் 2,000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்தும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்து இந்தியாவுக்குள் வினியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கோவை உள்பட தமிழகம் முழுவதும் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்தவர் பிடிபட்டார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 31). இவர் மீது கோவை நகர போலீசில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு குற்ற வழக்குகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக கோவை நகரில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. எனவே மோட்டார் சைக்கிளை திருடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். மோட்டார் சைக்கிளை திருடும் பழைய குற்றவாளிகளையும் தேடிவந்தனர்.

    கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மோட்டார் சைக்கிள்களை திருடுபவர் என்பதால் அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆனந்த் மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    ஆனந்தின் சட்டை பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அந்த ரூபாய் நோட்டுகள் கம்ப்யூட்டரில் போட்டோ காப்பி செய்து கலர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் பிரதி எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அசல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், ஆனந்த் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது ஆனந்த் வைத்திருந்தது கள்ள நோட்டுகள்தான் என்பது உறுதியானது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த கள்ள நோட்டுகளை கொடுத்தது யார்? என்று அவரிடம் கேட்டனர்.

    முதலில் ஆனந்த் உண்மையை கூற மறுத்தார். பின்னர் தீவிர விசாரணையில் அவர் உண்மையை கக்கினார். பணத்துக்கு ஆசைப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை நண்பர்களுடன் சேர்ந்து அச்சடித்து வருவதாக கூறினார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர்கள் சோமசேகர், சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், செந்தில் குமார் ஆகியோர் ஆனந்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். கள்ள ரூபாய் நோட்டுகளை எங்கு வைத்து அச்சடிக்கிறீர்கள்? என்று அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் ஒரு கடையில் அறை அமைத்து மாதம் ரூ.2,700 வாடகை செலுத்தி நண்பர்களுடன் சேர்ந்து அச்சடிப்பதாக கூறினார்.

    உடனே போலீசார் வேலாண்டிபாளையத்துக்கு விரைந்தனர். ஆனந்த் குறிப்பிட்ட கடையில் அறைபோல் அமைக்கப்பட்டு இருந்ததை திறந்து சென்று பார்த்தனர். அங்கு கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

    அந்த அறை முழுக்க போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு, 52 பண்டல்களில் ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

    கட்டுக்கட்டாக இருந்த அந்த கள்ள நோட்டுகளை பார்த்ததும் போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் அச்சு அசல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் போலவே இருந்தன. ஒரே சீரியலில் 50 நோட்டுகள் வீதம் அச்சடித்து இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 5,904 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ள நோட்டு தயாரிக்க கம்ப்யூட்டர் மற்றும் ஒரு கலர் ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தி உள்ளனர். கலர் ஜெராக்ஸ் மெஷினில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கலர் போலவே உள்ள மையை பயன்படுத்தி உள்ளனர்.

    மிக நூதனமான முறையில் அவர்கள் இந்த கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மெஷின், பிரிண்டர் கருவி, கள்ள நோட்டுகளை கத்தரிக்கும் கருவி, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், வெள்ளை காகித கட்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ள நோட்டு அச்சடிப்பதில் காரமடையை சேர்ந்த சுந்தர், யூசுப் ஆகியோர் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். ஆனந்த் பிடிபட்ட தகவல் அறிந்ததும் அவர்கள் இருவரும் அறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    வேலாண்டிபாளையத்தில் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய கடையை 1½ மாதத்துக்கு முன்பு தான் சுந்தர் வாடகைக்கு எடுத்து, ஆனந்த், யூசுப் ஆகியோர் மூலம் இரவு, பகலாக கள்ள நோட்டுகளை தயார் செய்து வந்து உள்ளார்.

    கள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கோவையிலும், அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரியிலும் புழக்கத்தில் விட்டதாக தெரிகிறது. அசல் ரூபாய் நோட்டுகளுடன் கலந்தும், பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளில் தனித்தனியாக கொடுத்தும் இவற்றை புழக்கத்தில் விட முயன்றுள்ளனர். எந்த அளவுக்கு புழக்கத்தில் விட்டனர் என்பது சுந்தர் கைதான பின்னர்தான் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பதால் அவர்கள் மூலம் புழக்கத்தில் விட்டுள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கும்பலைச் சேர்ந்த யூசுப், சுந்தர் ஆகியோருக்கு பல இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அனுபவம் உள்ளதால் அவர்கள் அந்த நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டு உள்ளனர். சென்னை, ஈரோடு, திருப்பூர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கு அறை எடுத்து தங்கி இருந்து, இரவு நேரத்தில் வெளியே சென்று கள்ள நோட்டுகளை கடையில் கொடுத்து மாற்றி உள்ளனர்.

    பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்து அதை மாற்ற முடியாமல் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக கூறுவார்கள். உதாரணமாக ரூ.1 கோடிக்கு பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.25 லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக கூறுவார்கள். அப்படி கூறியும் கள்ள நோட்டுகளை மாற்றி இருக்கிறார்கள்.

    அப்படி பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கியவர்கள், அவை கள்ளநோட்டுகள் என்று தெரிந்தாலும் புகார் எதுவும் கொடுக்க முடியாது என்பதால், இந்த கும்பல் சுதந்திரமாக செயல்பட்டு உள்ளது.

    தலைமறைவாக இருக்கும் யூசுப், சுந்தர் ஆகியோரை பிடித்தால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பல கோடி மதிப்புக்கு ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அந்த கள்ள நோட்டுகள் கோவை மற்றும் அண்டை மாவட்டங்கள், கேரளா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டதா? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறும்போது, “கள்ளநோட்டு கும்பலில் சுந்தர் என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளதால் அவரையும், கூட்டாளி யூசுப் என்பவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலர் ஜெராக்ஸ் மூலம் இந்த நோட்டுகளை தயாரித்துள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்?, வெளி மாநில தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

    கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்த தனிப்படையை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

    கோவையில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் 83 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளுடன் போலீசாரிடம் இன்று பிடிபட்டார். #fakecurrency
    கோவை:

    தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் கள்ளநோட்டுகளின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இன்று கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியே வந்த கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கட்டுகட்டாக கள்ளநோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும், ஆனந்தன் அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த குடோனில் போலீசார் சோதனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிடிபட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு 83 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கள்ளநோட்டுகளின் தயாரிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #fakecurrency

    ×