search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetes"

    • பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
    • இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.

    1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்

    2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்

    3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.

    மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.

    இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

    1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,

    2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,

    3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,

    4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,

    5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,

    6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,

    7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.

    நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.
    • நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

    நீரிழிவு நோய் என்பது பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீரிழிவு நோய் வந்து விட்டாலே அடுத்தடுத்து பல நோய்களும் தொற்றிக் கொள்ளும். என்றுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.

    சில பேர் சர்க்கரையை கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சில பேர் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவார்கள்.

    தேனில் கிட்டத்தட்ட 300 வகைகள் உண்டு. ஒரு டீஸ்பூன் தேனில் 60 கலோரிகள் மற்றும் 17 கிராம் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது.

    தேனில் உள்ள அதிகமான அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வெள்ளை சர்க்கரையில் ஒரு டீஸ்பூனில் 13 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

    ஒரு டீஸ்பூன் தேனில், வெள்ளை சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது சர்க்கரைக்கு மாற்றாக தேன் சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து கூடுதலாக தேன் சாப்பிடக்கூடாது.

    மார்க்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த தேனை பயன்படுத்துவதை விட கொம்புத்தேன் என்று கிடைக்கும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேனை பயன்படுத்துவது சிறந்தது. தேனில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும்.
    • நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது.

    நீரிழிவு நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி.

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும். ஒரு இட்லியில் கிட்டத்தட்ட 58 கலோரிகள் இருக்கிறது. இதில் மாவு சத்து (கார்போஹைட்ரேட்) அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிக அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது. எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பதும், சுலபமாக ஜீரணமாகி விடுவதும் இதன் நன்மைகளாக கருதப்படுகிறது.

    அரிசி இட்லியை விட, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி போன்றவற்றில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது. இட்லிக்கு தொட்டு சாப்பிடுவதற்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் நல்லது. அரிசி இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம். ரவா இட்லி, ராகி இட்லி அல்லது ஓட்ஸ் இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று இட்லி சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் காரணமாக நீரிழப்பு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்பட்ட்டு, மயக்கம் வரும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாதல், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு காரணமாக திடீரென்று மயக்கம் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு தலை சுற்றல் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றோ அதற்கு மேலும் இருக்கலாம்:

    ரத்த சர்க்கரை தாழ்நிலை (ஹைபோ கிளைசீமியா), ரத்த சர்க்கரை அதிகரித்தல், நீரிழப்பு (வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு காரணங்களாலோ உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது ஏற்படும் நிலை), குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மீனியர் நோய் (இது ஒரு சமநிலை கோளாறு ஆகும்.

    இதில் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அதிகம் சேர்வதால் காதுகளுக்குள் அழுத்தம் எற்படும். இந்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் போது மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு தலை சுற்றல் ஏற்படுகிறது), கழுத்து எலும்பு தேய்மானம், இதய கோளாறு, ரத்த சோகை, அதிகமான கொலஸ்ட்ரால் அளவு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை, உட்கொள்ளும் மாத்திரைகள் செயல்பாடுகள். (உதாரணமாக - சர்க்கரை அளவை குறைக்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு பாதிப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகள்)

    எனவே நீரிழிவு நோயாளிகள் தலைசுற்றல் ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து, அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.

    மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.

    நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.

    நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.

    புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.

    புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.

    இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும்.
    • கோழி மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது.

    பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சி என்பது பாலூட்டிகளில் இருந்து பெறப்பட்ட இறைச்சியாகும். இதில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி அடங்கும். இதை பார்க்கும்போது சிவப்பு நிறமாக இருப்பதால் இதை சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றனர்.

    கோழி மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது. கோழி இறைச்சியில் புரதம் அதிகமாக இருப்பதாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதாலும் நாம் இதை சாப்பிடலாம். பொறித்த வடிவிலோ, வறுத்த வடிவிலோ சாப்பிடக்கூடாது.

    மீன் இறைச்சியிலும் அதிகமாக புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மையான பொருட்கள் உள்ளன. மேலும் வைட்டமின் டி, வைட்டமின் பி 6, பி 12 போன்றவையும் இருக்கிறது. 2018-ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆகையால் நீங்கள் சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர்.
    • இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

    இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 நீரிழிவு நோய் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய். இவை இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் டைப்-1 மற்றும் டைப்-2 இரண்டுமே ஒரே மாதிரியானவை என்று நினைத்து குழப்பமடைகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையே பல வித்தியாசம் உள்ளது. இரண்டுமே நாள்பட்ட நோய்கள் மற்றும் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் மற்றும் அவை உடலை பாதிக்கும் விதம் என ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றன.

    முதலாவது தோன்றும் நீரிழிவு நோயை டைப்-1 என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தோன்றுவதால், இது சிறார் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து விடுவதால் இவர்களுக்கு இன்சுலின் மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் 10 சதவிகிதம் பேர் டைப் -1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வயது வந்தவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது டைப்-1 யை காட்டிலும் சற்று வயது அதிகமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை நாம் டைப்-2 நீரிழிவு நோய் என்று சொல்கிறோம். இது இன்சுலின் போதுமான அளவு சுரக்காததாலும் இன்சுலின் செயலாற்ற எதிர்வினை நிலை இருப்பதாலும் இது ஏற்படுகின்றது. மொத்த நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டைப்-1 நீரிழிவு நோயை விட டைப்-2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
    • டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது.

    ஒரு காலத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் அரிதானது என்பதால் நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது ஒரு பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றோ, நீரிழிவு நோயால் பாதிக்கப்படாத குடும்பத்தைக் காண்பது அரிது.

    அதிகமான இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கு பல ஆபத்து காரணிகள் உள்ளன அவை சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை முறை, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவை ஆகும்.

    இளம் வயதினருக்கு நீரிழிவு நோயால் பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது:

    1) உடல் எடை அதிகமாக இருத்தல். குறிப்பாக வயிற்றின் சுற்றளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருத்தல்,

    2) உடல் பருமனால் இன்சுலின் எதிர்மறை நிலை,

    3) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதித்திருத்தல்.

    இளம் வயதில் அதிக பசி எடுப்பது பொதுவானது, ஆனால் அதிக பசி எடுப்பது நீரிழிவு நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம், அப்படியாமால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

    முக்கிய அறிகுறிகள்: பாலியூரியா (அடிக்கடி சிறுநீர் கழித்தல்), பாலிடிப்ஸியா (அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்), பாலிபேஜியா (அடிக்கடி பசி எடுத்தல்), உடல் சோர்வு, மங்கலான பார்வை, காரணம் இல்லாமல் திடீர் எடை இழப்பு, கழுத்து மற்றும் இடுப்பில் தோல் கருமை நிறமாக மாறுதல், அடிக்கடி தொற்று ஏற்படுதல் மற்றும் பாதங்களில் எரிச்சல், மதமதப்பு அல்லது உணர்ச்சியின்மை.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • நல்ல உணவு உண்ணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை.
    • வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிக்கும் என்பது தவறான எண்ணம்.

    நீரிழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயை வேரிலிருந்தே ஒழிப்பதற்கான வழியை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை நாம் குறைக்கலாம்.

    நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் ஆகும்.

    நீரிழிவு நோயின் எல்லா நிலையிலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் உணவுப் பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியாது.

    பொதுவாக நீரிழிவு நோயில் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகை இருக்கிறது.

    டைப் 1 நீரிழிவு நோயானது இன்சுலின் சார்ந்த நிலையாகும். இந்நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் நாம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் டைப் 1 நீரிழிவு நோய்க்கு உணவு பழக்கங்களின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது.

    டைப் 2 நீரிழிவு நோய் வேண்டுமானால் உணவு பழக்கங்களை மாற்றி, உடல் எடையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தலாம். ஆனால் டைப் 2 பாதித்த ஆரம்பக்கட்டத்தில் இது சாத்தியம். மேலும் பல ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு நீடித்ததால் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்கள் மெதுவாக அழியத் தொடங்கும். இந்நிலையில் உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே கட்டுப்படுத்துவது சிரமமாகும். மாத்திரைகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். மாத்திரைகளின் தேவைகளை தீர்மானிப்பது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களின் எண்ணிக்கை, அதன் செயல்பாடு மற்றும் திசுக்களில் உள்ள இன்சுலின் எதிர்மறை நிலையின் அளவாகும்.

    நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது,

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பிரவுன் ரைஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளான பீன்ஸ், அவரை, புரொக்கோலி (பச்சை பூக்கோஸ்), பாகற்காய் போன்ற காய்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தரைக்கு அடியில் விளையும் கிழங்குகளை குறைத்துக் கொள்ளவேண்டும். புரதம் அதிகமாக உள்ள பால், முட்டையின் வெள்ளைக் கரு, கோழிக்கறி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டக்ஸ்) குறைவாக உள்ள பழங்களை உண்ணலாம்.

    பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால் கைக்குத்தல் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு குறைவு.

    நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், கிழங்கு வகைகளை அறவே தவிர்க்கத் தேவையில்லை. சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்றவற்றைச் சிறிதளவில் வாரம் ஒரு முறை அல்லது ஒரு வேளை சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாகக் கிழங்கு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்காமல் இருப்பதே நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம்.
    • ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது.

    நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ மருத்துவர் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.

    இளநீரில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

    இளநீரை எல்லோரும் 'நேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிவரேஜ்' என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதில் அதிகமான அளவு சோடியம், பொட்டாசியம், சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம். ஒரு டம்ளர் இளநீர் நமக்கு 45 கலோரிகள் கொடுக்கிறது. பாட்டிலில் அல்லது டின்களில் வரும் குளிர்பானங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது. ஆனால் பாட்டில் குளிர்பானங்களில் ஒரு டம்ளரில் 30 கிராம் சர்க்கரை இருக்கிறது.

    இதில் நார்ச்சத்து இல்லாதது ஒரு சிறிய குறையாக கருதப்படுகிறது. இளநீரில் உள்ள எல்-ஆர்ஜினின், வைட்டமின்-சி, இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.

    இளநீரில் நிறைய நன்மைகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் இளநீர் பருகலாம். அதற்கு மேல் குடித்தால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×