search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Health"

    • உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.
    • லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

    நமது உடல் உறுப்பில் சிலவகை செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.

    இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் பண்பு கொண்டது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகள் பெரியவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.

    பெரியவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டாலும், லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒன்று முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இது ரத்த அணுக்களின் உற்பத்தியை தடுத்து, ஹீமோகுளோபின் அளவை பெருமளவில் குறைத்து, உடல் நிலையை சீர்குலைக்கிறது.

    இது தவிர மத்திய நரம்பு மண்டலத்தில் கட்டிகள், நியூரோபிளாஸ்டோமா போன்ற பல்வேறு புற்றுநோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் என்பதே பயமுறுத்தும் காரணியாக இருப்பின், அதுவே குழந்தைகளுக்கு ஏற்படும் போது இரட்டிப்பான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரை பறிக்கும் நோய்களில், புற்றுநோய் 9-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு தீர்வு காணும் நோக்கத்துடன் உலக சுகாதார நிறுவனமானது புற்றுநோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு புற்றுநோய் குறித்த முழுமையான புரிதல் இல்லாத வயதிலேயே, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றால் புற்றுநோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ந் தேதி (இன்று) சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும்.
    • மன மற்றும் உடல் நலனை பாதிக்கும்.

    தற்போதைய நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர். உடல் பருமன் காரணத்தால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல வழி.

    அத்தோடு சில குழந்தைகள் இப்போதெல்லாம் வயது மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்பதால், அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாழ்க்கை முறை தேர்வுகள், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பின்னணி உள்ளிட்ட சில காரணங்கள் காணப்படுவதோடு உடல் பருமன் கொண்ட நபர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

    அத்தோடு உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட மோசமான உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

    அதிக எடை கொண்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகமாக காணப்படுவதோடு அதிக எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில். இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

    • மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும்.
    • குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்பு சதை’ வளர்வதுண்டு.

    மூக்கில் அடிபட்டால் இரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று இரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் 'எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள். 

    சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கன்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான். மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர, உள்ளுக்குள் அது மிக மென்மையானது. 

    வெளிப்பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்த புறநாசி துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு 'மூக்குப் பெட்டகம்' என்று பெயர். இதன் ஆரம்ப பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய இரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு 'லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாக சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து இரத்தம் கொட்டிவிடும். இதை 'சில்லுமூக்கு' என்றும் பொதுவாக சொல்வார்கள். 

    மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்த பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும். 

    குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, இரத்தக் கசிவு ஏற்படும். 

    சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து இரத்தம் வடியும். 

    குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் 'அண்ணச்சதை' வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து இரத்தம் வரும். 

    • குழப்பமான மனநிலையில் இருக்கும்.
    • குழந்தையின் பேச்சு குழறும்.

    நீரிழிவு நோய் உள்ள குழந்தைக்கு ரத்தச்சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும்..

    குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும். குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும். மயக்கம் வரும். சில வேளைகளில் வலிப்பும் வரலாம்.

    பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும், என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையை தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லி வைப்பது நல்லது, எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • ஒருவரது குறட்டை சத்தம் யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும்.
    • ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    ஒருவரது குறட்டை சத்தம் அந்த அறையில்- சில சமயங்களில் அந்த வீட்டில், யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது.

    உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும் குறட்டை ஏற்படலாம். அதுவே குழந்தைகளுக்கு என்றால் டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதால் உள்நாக்கு நீண்டு, காற்று செல்லும் வழியை தடுத்தாலும் குறட்டை ஏற்படலாம்.

    பொதுவாகவே குறட்டை விடுபவர்களுக்கு தூக்கக்குறைவு ஏற்பட்டு, அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    இதயத் தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    • பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
    • புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    குளிர் காலத்தில் பொதுவாக குழந்தைகள், பெரியவர்கள் சளி, இருமல் தொந்தரவால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலம் முடிந்தவுடன் குளிர், பனி தற்போது அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், சிறுவர்கள் சுவாச தொற்று கிருமியால் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு சுவாச பாதை தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும்போது, எளிதாக பரவி விடுகிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்குகளில் சளி, இருமல் பாதிப்புடன் குழந்தைகள் அதிகம் வருவதாக தெரிவிக்கின்றனர்.

    வழக்கத்தை விட அதிகமாக குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதால் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் எழிலரசி கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று பாதிப்பு வழக்கமாக ஏற்படும். சளி, இருமல், தொண்டை வலியுடன் மூச்சு விடவும் சிரமம் ஏற்படும். லேசான காய்ச்சல் பாதிப்பு போன்ற அறிகுறிகளுடன் இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த வருடம் சற்று கூடுதலாக வருகிறார்கள்.

    இது ஒரு வைரஸ் கிருமிதான். இதனால் பயப்பட தேவையில்லை. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று கிருமி குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாதமும் கூடுதலாகி வருகிறது. மருத்துவமனைக்கு சராசரியாக தினமும் 1200 குழந்தைகள் வருகிறார்கள். தற்போது சற்று கூடியுள்ளது. சுவாச தொற்று பாதிப்பு ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் டாக்டர் செந்தில்பிரபு கூறியதாவது:- பனி, குளிர் காலத்தில் சுவாச பாதை தொற்று கிருமி குழந்தைகளை தாக்கும். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, இருமலுடன் மூச்சு திணறலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும். சிலருக்கு வீசிங் வரும். அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வழக்கமான அளவில்தான் பாதிப்பு உள்ளது. 4 நாட்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்து சரியாகும். ஆனாலும் சளி, இருமல் 2 வாரம் வரை கடுமையாக இருக்கும். இந்த பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது. புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. குளிர் காலத்தில் பரவக் கூடிய இந்த வைரசால் உயிருக்கு ஆபத்து இல்லை. சிறுவர்களை மட்டுமின்றி முதியவர்களையும் இந்த வைரஸ் தாக்கக் கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய காலத்தில் குழந்தைகள் ‘ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள்.
    • இந்த உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம்.

    'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற தாரக மந்திரத்தின்படி தரமான ஊட்டச்சத்துகள் நிறைந்த பலவிதமான உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ரசித்து, ருசித்து உண்ணும் ஒவ்வொரு கவளமும் ஆரோக்கியம் சார்ந்ததாகவே இருந்து உள்ளது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், 'குப்பை உணவு' என்ற பொருள் கொண்ட 'ஜங்க் புட்'டை தற்போது, நாம் 'நவீன மாடர்ன் உணவு' என்று பெயரிட்டு சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் பழக்கிக்கொண்டிருக்கிறோம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே 'ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள் என்பதே உண்மை.

    ஆரோக்கியமாக வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்து கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள், சாட் வகைகள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் எல்லாமே இந்த வகையை சார்ந்தவையாகும். இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து மருத்துவர், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் இல்லத்தரசிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.

    உடல், மனவளர்ச்சி தடைபடும்

    ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி:-

    நாவிற்கு சுவையாகவும், எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால் துரித உணவுகள் குழந்தைகளிடையே குறிப்பாக பள்ளி சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக அமைகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேடிச்சென்று விரும்பி உண்பது அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம். இந்த உணவுகளின் சுவை, நிறம், திடம் ஏற்றக்கூடிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாலும் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிக அளவில் இருப்பதாலும் உடல் நலக்கேடு உருவாகிறது. இதனை அடிக்கடி விரும்பி உண்ணும் குழந்தைகள் உடல் பருமன் நோய்க்கு ஆளாகிறார்கள். இதுவே பிற்காலத்தல் இவர்களுக்கு தொற்றா நோய்கள் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (ஸ்ட்ரோக்) மற்றும் சீறுநீரக செயல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு முதல் மூலக்காரணியாக அமைகிறது.

    மேலைநாடுகளில் நடந்த ஆய்வுகளில் துரித உணவு அதிகம் உண்ணும் சிறுவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இதைத்தவிர நினைவாற்றல் குறைதல், உடல் பருமன், மனச்சோர்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. துரித உணவுகள் சுவையாக இருப்பதால் குழந்தைகள் அதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகிறது. உடல், மனவளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இவ்வகை உணவுகளில் இல்லாமல் இருப்பதால், உடலும், மனவளர்ச்சியும் தடைபெறுவது ஒரு பெரிய சவாலாக அமைகிறது. எனவே துரித உணவுகளை குழந்தைகள் உண்ணாமல் தடுப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமையாகும்.

    அலர்ஜியும், அஜிரணமும்

    நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்:-

    'ஜங்க் புட்' என்று அழைக்கப்படும் பீசா, பர்க்கர் போன்ற உணவு வகைகளில் மைதா, அஜினோ மோட்டோ போன்ற பொருட்கள் அதிகம் சேர்ப்பதால், இந்த மாதிரியான உணவு வகைகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு தொடர்ந்து இதுபோன்ற உணவுகளை கொடுத்து வந்தால் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாகி விடுவதுடன், வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மாறாக குழந்தைகளுக்கு அஜிரணம் ஏற்படுவதுடன், அலர்ஜியும் ஏற்படலாம். குழந்தைகளை படிக்க வைக்கவும், சாப்பிடவும், தூங்குவதற்கும் ஜங்க் புட் உணவு வகைகளை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறுவதையும் பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை ருசியாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி நோய், நொடி இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கெடுதல் என்று கூற முடியாது

    புரசைவாக்கத்தைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் அப்துல் ஹமீது:-

    பேக்கரியில் தினசரி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையை பொருத்துதான் தினசரி தயாரிக்கப்படுகிறது. எனவே அன்றாடம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அன்றைக்கே விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. எனவே இதனை வாங்கி உட்கொள்பவர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இதனை வாங்கி கொண்டு வீடுகளுக்கு சென்று 2 நாட்களுக்கு பிறகு சாப்பிடுவதால் தான் கெடுதல் ஏற்படுகிறது. உடல்நலம் குன்றியவர்கள் கூட பேக்கரி பொருட்களை வாங்கி உட்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பேக்கரி மற்றும் துரித உணவுகள் கெடுதல் என்று கூறிவிட முடியாது.

    ஆரோக்கியத்திற்கு நல்லது

    பெரியமேட்டைச் சேர்ந்த வியாபாரி காந்திலால் பண்டாரி:-

    ஜங் புட் என்று அழைக்கப்படும் துரித உணவுகளை தவறாமல் சாப்பிடுவதால் உடல் பருமன், கல்லீரல், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், மன அழுத்தம், தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இதில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. அதனால் தான் இது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மெதுவாக கொல்லும் கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றில் உள்ளது. உலகில் உள்ள மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஒன்றாக ஜங் புட் இருப்பதால், அதிக சர்க்கரை கொண்ட தானியங்கள், சர்க்கரை பானங்கள், பதிவு செய்யப்பட்ட சூப்கள், சோடாக்கள், உறைந்த பிரஞ்சு பொரியல், ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர்கள் மற்றும் சாண்ட்வீச்சுகள் போன்றவை இந்த வகைக்குள் அடங்கும். இதனை சிறுவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    இயற்கை தந்த உணவுகள்

    ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஜெனீபர்:-

    இயற்கை தந்த உணவுப்பொருள்கள் அனைத்திலும் ஒருவித சுவை உண்டு. குறிப்பாக ஆப்பிள் பழமாகட்டும், பாகற்காய் பொரியலாகட்டும், எலுமிச்சை சாறாகட்டும் எல்லாவற்றையும் நினைக்கும் போதே அதன் சுவையை உணர்த்தும் வகையில் நம் மனதில் நிறைந்திருக்கும். இவை இயற்கை தந்த பொருட்கள். ஆனால், ஜங் புட் உணவுகள் எதிலும் அப்படியொரு இயற்கையான சுவையை எதிர்பார்க்க முடியாது. இந்த சுவை அனைத்துமே செயற்கையாக சேர்க்கப்படுபவை. இந்தவகை உணவுகள் குழந்தைகளை மீண்டும், மீண்டும் சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பண்டங்கள் குறித்து மருத்துவர்கள் கூறுவதை கேட்டால் பயமாக இருக்கிறது. எனவே இப்போது பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம் எடுத்துக்கூறி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இருந்தாலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மீது அலாதி பிரியமாக இருந்து வருகிறது.

    எந்த உணவில் ஊட்டச்சத்து உள்ளது?

    கல்லூரி மாணவி பானுப்பிரியா:-

    ஊட்டச்சத்து இல்லாத பீட்சா மற்றும் பர்கர் சாப்பிட வேண்டாம், பொதுவாக வெளியில் எதையும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். தற்போது சாப்பிடும் எந்த உணவு தரமாகவும், ஊட்டச்சத்துடனும் இருக்கிறது?. ஆரோக்கியம் குறைவதற்கு வெறும் உணவு பொருட்கள் மட்டுமே காரணம் இல்லை. இருந்தாலும் பெரியவர்கள் சொல்படி, எண்ணெய் உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை தவிர்த்து வருகிறோம். வீட்டில் சமைக்கப்படும் கீரைகள் மற்றும் தானிய உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். ஆரோக்கியமாக இருப்பதாக உணருகிறோம். அனைவரும் கடைபிடிக்கவும் வேண்டுகோளும் விடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும்.
    • சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.

    குழந்தைகளிடையே பொதுவாக காணப்படும் ஒவ்வாமைகள் பற்றி இங்கு காண்போம்

    * சிரங்கு ( எக்ஸிமா - Rash) - இது எரிச்சலூட்டும் துணி வகைகள், சோப்புகள், உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய, பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்ககூடிய ஒவ்வாமையாகும்.இதனால் தோலில் சிவப்பு நிற மிகச்சிறிய புடைப்புகள் அல்லது வறண்ட சருமமாகவோ / செதில் செதிலாகவோ காணப்படும்.

    * பேப்புலர் அர்டிகாரியா(Arteria) - அரிக்கக்கூடிய தடுப்புகள் உண்டாக்கும் இவ்வகையான ஒவ்வாமையானது பூச்சிகள், கொசுகள், மூட்டை பூச்சிகள் கடிப்பதனால் ஏற்படக்கூடியது. சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.

    * படை நோய் (Hives) - உடலானது குறிப்பிட்ட ஓர் பொருளுக்கு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, நமது உடலில் 'ஹிஸ்டமைன்' எனப்படும் வேதிப்பொருள் உருவாகும். இதன் விளைவாக உடலில் இளஞ்சிவப்பு / சிவப்பு நிற திட்டுகள் தடித்த சிவப்பு இரத்த வளையத்தோடு காணப்படும்.

    * உணவு ஒவ்வாமை(Food Allergies) - குழந்தை உண்ணும் உணவினால் மட்டுமின்றி , குழந்தை உண்ணாது தாய்ப்பால் வழங்கும் தாய் உண்ணும் உணவாலும் ஒவ்வாமை ஏற்படலாம். வாந்தி, வயிற்று போக்கு, மலத்தில் இரத்தம், இருமல், அரிப்பு, திட்டுகள் போன்றன உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் ஆகும்.

    ஒவ்வாமைக்கான மருத்துவம்

    மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும். அரிப்புடன் அசௌகரியத்தைத் தரக்கூடிய ஒவ்வாமைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட வேண்டும். பொதுவாக பின்வருவன பின்பற்றப்படலாம்.

    * ஒவ்வாமை காரணிகளைத் தவிர்த்தல் (Avoiding Allergic Reactions) - குழந்தையின் தோலிற்கு எரிச்சல் தரக்கூடிய சோப்புகள், சோப் பவுடர்கள், வாசனை திரவ களிம்புகளை தவிர்க்க வேண்டும்.

    * வாசனை அற்ற சுத்தப்படுத்திகளை பயன்படுத்துதல் (Use Odorless Cleanser) - மென்மையான வாசனை அற்ற சோப்பு கொண்டு கடுமையாக தேய்க்காமல் மென்மையாக குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் மற்றும் அதன் பின் நன்கு உடலை துடைக்க வேண்டும்.

    * ஒரு சதவீத ஹைட்டிரோகாட்டிஸோன் பயன்படுத்துதல் (Use Hydrocortisone Cream) - பொதுவாக குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்தப்பிறகு எக்ஸிமா மற்றும் பிற ஒவ்வாமையினால் ஏற்படும் தோல்தடுப்புகளுக்கு ஹைட்டிரோகாட்டிஸோனைப் பயன்படுத்தலாம்.

    * அரிப்பதை தவிர்க்கும் கை உறைகளைப் பயன்படுத்துதல் (Use Corrosion Resistant & Hand Coverings) - குழந்தைகள், மென்மையான குணமாகக் கூடிய தடிப்புகளை கூட அரிப்பினால் தங்கள் விரல் நகங்களால் சொரிந்து காயம் ஏற்படுவதை தடுக்க கை உறைகளை அணிந்து விடலாம்.

    ஒவ்வாமை தடுப்பு முறைகள்

    உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை ஒவ்வாமை அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளிலிருந்து தடுக்க சில வழிகள்...

    * ஒவ்வாமை குறைவான துவைக்கும் பவுடரால், குழந்தையின் துணிகளைத் துவைத்தல்

    * வாசனை அற்ற சோப், ஷாம்பு மற்றும் திரவ களிம்புகளைப் பயன்படுத்துதல்

    * தூசி மற்றும் பூச்சிகளைத் தவிர்க்க, குழந்தையின் படுக்கை மற்றும் படுக்கை துணிகளை சுடு தண்ணீரில் ஒவ்வொரு வாரமும் துவைக்க வேண்டும்

    * வீட்டினை சுத்தமாக வைத்து கொள்ளல்

    எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

    ஒவ்வாமைக்கு வீட்டிலே மருந்துகள் / கை வைத்தியம் செய்து கொள்ளலாம் என்றாலும் பின்வரும் சமயங்களில் மருத்துவரை அணுக வேண்டும்.

    * தடுப்புகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும் போதும், மோசமடையும் போதும்

    * தோலில் தொற்றுகள், கொப்புளங்கள் காணப்படுதல், இரத்தம் வடிதல், நீர் ஒழுகுதல் போன்றவற்றின் போதும்

    * தடுப்புகளுடன் காய்ச்சல், அதிகப்படியான அழுகை, குறைவான உண்ணல், சோம்பல், இருமல் போன்றவையும் உள்ள போதும்

    * மூச்சு திணறல், சுவாசிக்க கஷ்டப்படுதல், உதடு / நாக்கில் வீக்கம் போன்றவை தீவிரமான நிலையை குறிக்கக்கூடியவை. இவ்வேளைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    இந்த ஆலோசனை எங்கள் நிபுணர்களிடமிருந்து பெற்றிருந்தாலும். நீங்கள் கண்டறிந்த எந்தவொரு தீவிர அறிகுறிகளும் இருந்தால், முதலில் மருத்துவரை அணுகவும்.

    • குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
    • குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

    சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

    அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

    குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .

    உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.

    அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

    கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

    முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.

    • 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
    • பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...'' என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?

    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?

    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ

    நடக்கிறதா?

    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?

    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?

    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,

    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

    சிகிச்சைகள்...

    நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!

    • இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம்.
    • இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன.

    மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுள் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உண்டு.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்படலாம் என்றாலும், பச்சிளம் குழந்தைகளை குறிவைத்து தாக்குவது நிமோனியாவின் தனித்தன்மை.

    பலதரப்பட்ட கிருமிகள் காற்றில் கலந்துவந்து நுரையீரலை தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியை உமிழும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சரவர தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்பு புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்கு பசி இருக்காது, சாப்பிடாது.

    கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால் குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாக காணப்படும்.

    இந்த நோயை கவனிக்க தவறினால், இந்த கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளைஉறை போன்றவற்றை பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.

    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன. நிமோனியா சில நேரம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்க 50 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    • குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.
    • வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    மனிதக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வெளியேறும் குடற்புழுக்களும் அவற்றின் முட்டைகளும் மண்ணில் கலந்திருக்கும். குழந்தைகள் அதுபோன்ற இடங்களில் விளையாடும்போது, அவற்றை எதிர்பாராதவிதமாகத் தொட்டுவிட்டு, கைகழுவாமல் உணவு உண்ணும்போது, விரலை வாயில் வைக்கும்போது அவை உடலுக்குள் செல்லும். கொக்கிப்புழுவின் லார்வாக்கள் சருமத்தைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள் செல்லக்கூடியவை என்பதால், குறிப்பிட்ட இடங்களில் குழந்தைகள் காலணி அணியாமல் நடக்கும்போது பாதங்கள் வழி உள்செல்கின்றன.

    படைபோன்ற பிரச்னை ஏதுமின்றி ஒருவருக்குப் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டால், கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரைக் கொதிக்கவைக்காமல் அருந்துவது, காய்கறிகள், பழங்களைக் கழுவாமல் உண்பது, முழுமையாக வேகவைக்காத இறைச்சி மற்றும் உணவுகளைச் சாப்பிடுவது என இவையெல்லாம் புழுக்கள் உடலினுள் செல்ல வாய்ப்பளிக்கும். சுகாதாரமற்ற வீடு, அறை, படுக்கை, உள்ளாடைகள் இவையெல்லாம் குடற்புழுத்தொற்று பெருகக் காரணங்களாகும்.

    குடற்புழுப் பாதிப்பைத் தவிர்க்க முடியுமா?

    எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் தவிர்க்கலாம். அவை...

    * கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

    * குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.

    * ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.

    * குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.

    * பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.

    * வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    * மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    * விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.

    ×