search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Health"

    • ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது.
    • குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும்.

    குழந்தைகளின் உணவு எனும் போது சத்துக்களைத் தாண்டி ,குழந்தைகளின் எடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது குழந்தைகளுக்கு உணவளிப்பதன் முக்கிய நோக்கம் வளர்ச்சியுடன், அவர்களின் எடையையும் அதிகரிப்பது ஆகும்.

    குழந்தைகள் பொதுவாக உணவு சாப்பிட அடம்பிடிப்பதால், அவர்கள் சாப்பிடுவது சிறிய அளவு உணவு என்றாலும் அது சத்து மிக்கதாகவும், குழந்தையின் எடை அதிகரிப்பதாகவும் இருக்கவே தாய்மார்கள் விரும்புகிறார்கள்.

    வாழைப்பழம்

    வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளது.. இது ஒரு அதிக கலோரிகளைக் கொண்ட உணவும் ஆகும்.குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும். வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு. அவர்களுக்கு ஒரு தனி பழமாக கொடுக்கலாம். வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகளுக்கு பான்கேக் (pan cake) , வாழைப்பழ பணியாரம், வாழைப்பழ கேக் செய்யும் போது அதில் கலந்து கொடுக்கலாம். அல்லது ஏனைய பழங்களுடன் சேர்த்து ஸ்மூதியாகவும் (Smoothie) கொடுக்கலாம். வெளியில் செல்லும் வேளைகளில் கூட, உங்களுடன் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு இலகுவாக கொடுக்கலாம்.

    தானியங்களும் பருப்புவகைகளும் (Nuts & Grains)

    அவல், கொண்டைக்கடலை, குரக்கன், தினை,சோளம் ,பயறு போன்ற தானிய வகைகள் மற்றும் கச்சான், பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளில் புரதம், மெக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இந்த வகை தானியங்களில் இறைச்சியிலிருந்து நாம் பெறுவதை விட அதிக புரதத்தை பெறலாம். அதோடு இவை இறைச்சி மற்றும் மீன்களை விடவும் மிகவும் மலிவாக இருப்பது இன்னும் நல்லது. ஆறு மாதத்திலிருந்து, குழந்தையின் உணவில் தானிய வகைகளை கஞ்சியாக ,கூழாக,களியாக சேர்க்கலாம்.

    அவகாடோ

    அவகாடோ அல்லது ஆனைக்கொய்யா என்பது ஒரு ஆரோக்கியமான பழமாகும். குழந்தைகளின் உணவில் அவகாடோவை சேர்ப்பது உடல் எடையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும்.இது விட்டமின்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவாகும். இதனால் குழந்தைக்கு உணவு கொடுக்கும் ஆரம்ப நாட்களிலிருந்து கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான உணவாகும். குழந்தைகளுக்கு இதை நேரடியாகவோ அல்லது அவகாடோ ஜூஸ், அவகாடோ ஸ்மூதியாக தயாரித்துக் கொடுக்கலாம்.

    நெய்

    சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் வாங்கி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நெய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஏற்ற நல்லதொரு சத்தான உணவு. தனியாக மாத்திரமல்லாமல் பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இது உண்மையில் குழந்தைகளின் உணவிற்கு சேர்க்ககூடிய மிகவும் பயனுள்ள உணவாகும்.

    சீஸ்

    சீஸ் (பாலாடைக்கட்டி) மிகவும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது சீஸ் என்பது கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது. இதனால் உப்பு சேர்க்காத சீஸ்களை குழந்தைக்குக் கொடுப்பது எடையை அதிகரிக்க உதவும்.

    யோகர்ட்

    வயது வந்தவர்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை கூட பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிறந்த உணவு யோகர்ட் ஆகும். யோகர்ட்டில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கல்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து தேவைக்கும் , எடை அதிகரிப்புக்கும் சரியான வயதில் குழந்தைக்கு தயிரை வழங்கத் தொடங்குவது சிறந்தது. அதோடு வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும். பழங்கள் சேர்க்கப்பட்ட பலவிதமான யோகர்ட்களும் சந்தையில் கிடைக்கிறது.

    இருப்பினும், அவற்றை குழந்தைக்கு கொடுப்பதற்கு ,உப்பு மற்றும் சர்க்கரையின் அளவுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனையின்படி பின்பற்றுவது மிகவும் நல்லது. இதைவிட சாதாரண தயிருடன் பழங்களைச் சேர்த்து கொடுக்கலாம். இப்படி நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பது மிக சிறந்தது.

    • தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.
    • எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல.

    குளித்து முடித்தவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பெரும்பாலானவர்கள் காதுக்குள் சென்றிருக்கும் தண்ணீரை அகற்றத் தலையை வேகமாக அசைத்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள். இப்படிச் செய்வதனால் சிறிய குழந்தைகளின் மூளை பெரிதளவு பாதிப்படையும் என்று அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகம் (Cornell University) மற்றும் வெர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தலையை வேகமாக அசைப்பதனால் பெரியவர்களைவிடக் குழந்தைகளே அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தப் பிரச்னை இன்றும் தொடர்கிறது. தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.

    அதுபோன்ற நேரத்தில் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். மெல்லிய தலையுடைய குழந்தைகளின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள், லேசாக அசைத்தாலும் பாதிப்புகள் ஏராளம். அப்படி இருக்கும்போது காதுக்குள் சென்ற நீரை வெளியே எடுக்கத் தலையைச் சற்று கடுமையாக அசைக்கும்போது, ரத்தக் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    காதுக்குள் இருக்கும் குழாய் பகுதி வயதானவர்களுக்கு நீண்டு இருப்பதனால், பெரியவர்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது. ஆனாலும், எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல. மேலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காதுக்குள் சென்ற நீர் தானாகவே ஆவியாகி வெளியேறிவிடும்.

    தலையசைத்து நீரை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். காதுக்குள் செல்லும் நீர் உறுத்துவதால் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறோம் என்பதை உணர்ந்து குழந்தைகளையும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது.
    • ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது.

    உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப் புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள். உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டிசம் நோயல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே.

    இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம். இந்தியாவில் 20 லட்சம் பேர் இந்த குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

    மேலும் இந்த அளவானது ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. இவர்களுக்கு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அதை சிறந்த பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் முழு பொறுப்பு.இந்த குழந்தைகளின் பிரதான பிரச்சினை மற்றவர்களோடு பழகுவது தான். மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும். குழந்தை பிறந்தவுடன் ஆட்டிசம் உள்ளதா? என்பதை முகபாவனை உணராமை, சத்தங்களை உணர முடியாமல் இருப்பது, கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, தனியாக இருப்பதை விரும்புதல், சொற்களை திரும்ப திரும்ப பேசுதல், பேசுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியான காரணங்கள் குறைவு தான். சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வது, மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது.

    நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை அளிக்கும் சிகிச்சைகள் உள்ளன. முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இவர் களுக்கென தனி சிறப்பு பள்ளிகள் உள்ளன. அரசின் சார்பில் இவர்களுக்கு அனைத்து தெரபிகளும் வழங்கும் மையங்கள் மருத்துவ கல்லூரிகள் என்ற அளவில் தான் உள்ளது. அரசானது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆட்டிசத்துக்கான சிகிச்சையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் சிகிச்சைகளும் எளிமையாகும், விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

    • டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை.
    • கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

    குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

    ஏடீஸ் (Aedis) கொசுக் களால் பரப்பப் படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.

    டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை

    டெங்கு காய்ச்சலின் அறி குறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

    அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோல் சிவப்பு ஆகுதல் (Skin Rash) சில கடுமையான சந்தர்ப்பங்களில் டெங்கு காய்ச்சல் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு வழிவகுக்கும், இது இரத்தப்போக்கு, குறைந்த அளவிலான இரத்த தட்டுக்கள் மற்றும் அபாயகரமான அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தே கிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவது அவசியம்.

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?

    டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?

    ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முறையை பற்றி கூறுக?

    டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே வைரஸ் பரவாமல் தடுக்க ஒரே வழி

    டெங்கு காய்ச்சலைத் தடுக்க சில வழிகள்:

    கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றவும், ஏடிஸ் கொசு தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே பூந்தொட்டிகள் , வாளிகள், தூக்கி எரியக்கூடிய டயர்கள் உட்பட உங்கள் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது அவசியம். கொசு விரட்டியை பயன்படுத்துங்கள். கொசுக்கள் வராமல் இருக்க தோல் மற்றும் ஆடைகளில் கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள். கொசுக் கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீண்ட கை சட்டை மற்றும் பேன்ட்களை அணியுங்கள்.

    கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க திரைகளைப் பயன்படுத்தவும். மேலும் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்போது விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்கவும். டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.

    மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு காய்ச்சல அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.

    டெங்குவினால் மூளைக்காச்சல் வருமா?

    மிகவும் அரிதாக வரலாம். ஒருசில நேரங்களில் டெங்கு வைரஸ் மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். அப்படி பாதிப்பிற்கு உள்ளானால் தலைவலி, வாந்தி, மயக்க நிலை மற்றும் வலிப்பு ஏற்படலாம். உடனடி தீர்வு சிகிச்சை செய்வது அவசியம்.

    குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவ மனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவ னந்தபுரம் சாலை, பாளை யங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783.

    • இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை
    • குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

    இன்றைய வேகமான உலகில் வயதில் பெரியவர்கள் மட்டுமல்லாது வயதில் சிறிய குழந்தைகளும் கொலஸ்ட்ரால் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.முன்னர் இருந்தது போல இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, செல்போன் மற்றும் டிவிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.இதுபோன்ற உட்கார்ந்த வாழ்க்கை மற்றும் அதிகப்படியான நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் இன்றைய கால குழந்தைகள் இளம் வயதிலேயே அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர்.உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது இரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக்கை உருவாக்க காரணமாக இருக்கிறது.இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத்தின் ஆரோக்கியம் மோசமடைகிறது.  

    உடல் பருமன், ஜீன், மோசமான உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடலில் கொலஸ்டராலின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.பெரும்பாலும் குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதால் நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர்கள், பிரஞ்சு ப்ரைஸ் மற்றும் சிப்ஸ் போன்ற எண்ணெயில் வறுத்து பொறித்த உணவு வகைகளை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.இதுதவிர இனிப்பு சுவை அதிகம் நிறைந்த பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள் மற்றும் கேக் போன்ற இனிப்புப் பொருட்களை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது.ஏனெனில் அவற்றில் நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.குழந்தைகளுக்கு கொலஸ்டராலின் அளவை குறைக்க அவர்களை உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும்.தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    • குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும்போது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது.
    • தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாவே காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருக்கும். அதன்பின்னர், படிப்படியாக அந்த பாதிப்புகள் பிப்ரவரி மாதத்தில் குறைய தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, பிப்ரவரி மாதத்திலும் வைரஸ் காய்ச்சல் குறைந்தபாடில்லை. தற்போது வரை அதாவது மார்ச் மாதம் தொடங்கிய பின்னரும் வைரஸ் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இந்தநிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. இதுபோல், தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    பனிக்காலத்தில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் கோடைக்காலம் தொடங்கிய பின்னரும், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் பிரிவு துறை தலைவர் டாக்டர் பாலசங்கர் கூறுகையில், தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் சளி மற்றும் காற்றின் மூலம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் குழந்தைகளை குறிவைத்து தாக்குகிறது..

    குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும்போது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது, இருமல் அதிகமாக இருக்கிறது என்றால் மருத்துவரை சந்திப்பது தான் சிறந்தது. வெயில் காலம் அதிகரிக்க தொடங்கிவிட்டால், காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். வரும் நாட்களில் காய்ச்சல் குறைந்துவிடும்.

    இந்த காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. மதுரையில் காய்ச்சல் பாதிப்பை காட்டிலும் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வந்து உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்படுகின்றனர். தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். தண்ணீரின் மூலமே டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதிப்பு வருகிறது. எனவே, சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும் என்றார்.

    • குழந்தைகளுக்கு இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன.

    உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.

    இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காய்ச்சல் இல்லாமல் சாதாரண இருமல் மட்டும் இருந்தால், இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

    சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி. வீதம் காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி. வீதம் இரவு வேளை சாப்பிடலாம்.

    வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

    குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும்.

    2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும்.
    • புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

    காது கேளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம் பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    காது கேளாமைக்கு காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வு என்ன? காதை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கோவையில் உள்ள கொங்குநாடு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் எ.அனுபிரியா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    காது கேளாமைக்கான காரணம்

    கேள்வி:- காது கேளாமைக்கான காரணம் என்ன?

    பதில்: பொதுவாக வெளி காது, நடு காது, உள் காது அல்லது செவி புலத்தில் ஏதாவது சேதம் ஏற்படுவதன் காரணமாக காது கேளாமை ஏற்படுகிறது. குறிப்பாக கன்டெக்டிவ், சென்சோநியூரல், இவை 2-ம் சேர்ந்து என்று 3 விதமான காது கேளாமை பிரச்சினை ஏற்படுகிறது.

    கன்டெக்டிவ் என்பது நடுத்தர மற்றும் வெளிப்புற காதில் ஏற்படும் பிரச்சினையால் வருகிறது. இது சரிசெய்யக்கூடியது. நோய் தொற்றுகள், காதின் மெழுகுகள், காதில் தேவையற்ற வெளிப்பொருட்களை நுழைத்தல், காதில் திரவம் உருவாதல், இஸ்டாசியன் குழாய் செயலிழப்பு, காதில் கட்டிகள், செவிப் பறையில் துளை போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.

    சென்சோநியூரல் என்பது உட்புற காதில் ஏற்படும் பிரச்சினைகளால் வருகிறது. இதற்கு முதுமை, தலையில் ஏற்படும் அதிர்ச்சி, ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள், கட்டிகள், மரபணு காரணிகள் மற்றும் குறைபாடுகள், அதிகப்படியான இரைச்சல் ஆகியவை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு மரபணு காரணிகள், காதில் மெழுகுகள், கிருமி தொற்று, நடுத்தர வயதினருக்கு செவிப்பறை துளைகள் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. முதியோருக்கு கட்டிகள் காரணமாக ஏற்படுகிறது.

    பரிசோதனைகள் என்ன?

    கேள்வி: காது கேளாமைக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?

    பதில்: காதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முதலில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். எங்களிடம் காதை காட்சிப்படுத்த ஓட்டோஸ்கோப் என்ற கருவி உள்ளது. இதன் மூலம் காதின் மெழுகு, கிருமிகள், செவிப்பறை துளை ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். டியூனிங்போர்க் என்ற கருவி மூலம் செவித் திறன் இழப்பின் அளவு, அவற்றின் வகையை மருத்துவ ரீதியாக மதிப்பிடலாம். செவித்திறன் இழப்பின் அளவு மற்றும் வகையை உறுதிப்படுத்த தூய தொனி ஒலி அளவீடு செவித்திறன் சோதனை அறிவுறுத்தப்படும்.

    சி.டி. ஸ்கேன், டம்போரல் எலும்பு, எம்.ஆர்.ஐ. போன்ற பிற ஆய்வுகள் நோயாளியின் நிலையை பொறுத்து தேவைப்பட்டால் அறிவுறுத்தப்படும். புதிதாக பிறந்த செவித்திறன் ஸ்கிரீனிங் திட்டம் அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு மாத வயதுக்கு முன்பே கேட்கும் பரிசோதனையை செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

    சிகிச்சைக்கான வழிமுறைகள்

    கேள்வி: சிகிச்சைக்கான வழிமுறைகள் என்ன?

    பதில்: சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். காது மெழுகு வெளிப்புற தொற்றுகள் போன்ற சிறிய பிரச்சினைகளை வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கலாம். செவிப்பறை துளைகள், நடுத்தர காதில் திரவம், கட்டிகள் போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். காது துவாரம் காரணமாக ஏதேனும் தொற்று ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் மூட வேண்டும். செவித்திறன் இழப்பு மீளமுடியாவிட்டால் செவிப்புலன் உதவியை பயன்படுத்தலாம். ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள் நிறுத்தப்பட்டால் செவித்திறன் இழப்பு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மேம்பட்ட தொழில்நுட்பம்

    கேள்வி: மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் என்ன?

    பதில்: பிறக்கும்போதே காது கேளாத குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தலாம். இது ஒரு மின்னணு சாதனம் ஆகும். இதை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி பயன் அடையலாம். இது சேதமடைந்த காது பகுதியை கடந்து செவி வழி நரம்புக்கு சிக்னல்களை கொண்டு செல்கிறது. ஒரு வயதுக்கு முன்பே இதை செய்தால் அந்த குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு முன்பே அதிகபட்ச பலனை பெறுவார்கள்.

    போதுமான ஒலி- வாய்மொழி, மறுவாழ்வு மூலம் அவர்கள் சாதாரண செவித்திறன் கொண்ட மற்ற நபர்களை போலவே இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். இந்த அறுவை சிகிச்சையை 5 வயது வரை செய்யலாம். இந்த உள்வைப்புகளை இம்பிளான்ட் ஒன்று அல்லது 2 காதுகளுக்கும் வைக்கலாம்.

    பிரஸ்பைகசிஸ் கொண்ட பெரியவர்கள் செவிப்புலன் கருவியை காதுக்கு வெளியே பயன்படுத்தலாம். இப்போது மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் வெளிப்புறமாக தெரியாமல் காதிற்கு உள்ள செவிப்புலன் கருவியை வைக்க முடியும். எண்டோஸ்கோப் மூலம் இப்போது நடுத்தர காது அறுவை சிகிச்சையை சிறிய துளை மூலம் செய்யலாம்.

    செவிப்புலன் பரிசோதனை

    கேள்வி: காது பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

    பதில்: காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் வழக்கமான செவிப்புலன் பரிசோதனையை செய்ய வேண்டும். குடும்பத்தில் காது கேளாமை இருந்தால் சந்ததிகளை இ.என்.டி. மருத்துவ ஆலோசகரிடம் சீக்கிரம் அழைத்து வந்து பரிசோதனை செய்யலாம். சத்தமுள்ள இடத்தில் வேலை செய்யும்போது காது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தலாம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

    தவிர்க்க வேண்டும்

    கேள்வி: காதில் செய்யக்கூடாதது என்ன?

    பதில்: காதில் எந்த காரணத்தைக்கொண்டும் இயர்பட் பயன்படுத்தகூடாது. காது சொட்டு மருந்தை மருந்தகத்தில் வாங்கி ஆய்வு செய்யாமல் பயன்படுத்தகூடாது. சூடான எண்ணெய்யை காதுக்குள் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சத்தமாக இசையை கேட்பதை தவிர்க்க வேண்டும். காது கேளாமை என்பது முதுமை அடைந்தவர்களுக்கு மட்டும் என்று நாம் நினைக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்டிசம் ஒரு நோய் அல்ல குணப்படுத்துவதற்கு.
    • சரியான நேரத்தில் கண்டறிந்தால் சரி செய்ய இயலும்.

    ஆட்டிசம் குறைப்பாட்டினை சமூக தொடர்புகள் சார்ந்த மற்றும் மொழித் தொடர்பு சார்ந்த குறைபாடுகளாக வரையறுக்கலாம்.

    இத்தகைய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தனக்குத் தேவையானவற்றை முறையாக வாய்வழி கேட்பதிலும், சமூகத்தில் மற்றவர்களிடம் உள்ள தொடர்புகளிலும், பிறர் கட்டளையை இவர்கள் பின்பற்றுவதிலும் சிரமம் இருக்கும்.

    அறிகுறிகள்

    1. தனது உணவுர்களை அழுகை, முனுமுனுத்தல், கூக்குரல்கள் மூலம் வெளிப்படுத்துதல்

    2. வாய்மொழியற்ற பிற உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துதல்

    3. இயந்திரக் குரலில் பேசுதல்

    4. சமூக தொடர்புகளில் பிரச்சினை மற்றும் மொழித் தொடர்பில் பிரச்சினை.

    5. வாய்க்குள் முனுமுனுத்தல் மற்றும் வார்த்தைகள் போன்று ஒலி ஏற்படுத்துதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதித்தல் நல்லது.

    ஆட்டிசத்தில் பேச்சுப் பயிற்சியாளின் பங்கு:

    1. பயிற்சியின் மூலம் தொடர்புத் திறனை மேம்படுத்துதல்

    2. சரளமாக தடையின்றி பேச பயிற்சி அளித்தல்

    3. ஒரு வார்த்தை பேசுவதற்கு நாக்கு, மேல்வாய், தாடை மற்றும் உதடுக்கான தொடர்புகளை புரிய வைத்தல் (Aritculaction Skills)

    4. உடல் மொழியையும் முக பாவனையும் மேம்படுத்துதல்

    5. செய்யும் வேலைகளை குவிந்த கவனத்துடன் செய்யவைப்பது.

    6. சமூக தொடர்புகளை மேம்படுத்துவது

    ஆட்டிசம் ஒரு நோய் அல்ல குணப்படுத்துவதற்கு. இது ஒரு குறைபாடு மட்டுமே. சரியான நேரத்தில் கண்டறிந்தால் சரி செய்ய இயலும்.

    உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தயங்காமல் அழையுங்கள்.

    இன்ஸ்டா ஹியரிங் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி. செல்: 9789334719.

    Mrs. தனலெட்சுமி M.Sc., Aud. (AIISH) (All India Insutitute of Speech & Hearing, Mysore)

    • வைட்டமின் டி3 குறைபாட்டை நிவர்த்தி செய்தால், குழந்தை பருவத்திலேயே கிட்டப்பார்வை பாதிப்பை குறைக்க முடியும்.
    • குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

    குழந்தைகள் தங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. செல்போனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மட்டும் காரணமில்லை. உடலில் சூரிய கதிர்வீச்சுகள் படாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள் வைட்டமின் டி3 குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் வைட்டமின் டி3 குறைவது கிட்டப்பார்வைக்கு மூலகாரணமாக அமையும் என்று அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

    இது தொடர்பான ஆய்வுக்கு 51 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 31 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் 8 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள். ஆய்வின் முடிவில் 38 பேருக்கு வைட்டமின் டி3 அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு கிட்டப்பார்வைக்கு வித்திடும். தினமும் உடலுக்கு தேவையான வைட்டமின் டி3 அளவை பெறுவதற்கு சூரிய ஒளி அவசியமானது. குழந்தைகள் தினமும் குறிப்பிட்ட நேரம் வெளிப்புற விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி3 அளவை சூரியக்கதிர்கள் மூலம் பெற்றுவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    ''வைட்டமின் டி3 குறைபாட்டை நிவர்த்தி செய்தால், குழந்தை பருவத்திலேயே கிட்டப்பார்வை பாதிப்பை குறைக்க முடியும். பார்வைக்குறைபாடு மட்டுமின்றி பிற உடல் நல சிக்கல்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு வழிவகுக்கும். அதனை தவிர்க்க குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அது விளையாட்டாகவோ, உடற்பயிற்சியாகவோ இருக்கலாம். குழந்தைகள் வெயில் படும்படியான சூழலில் போதுமான நேரத்தை செலவிடுகிறார்களா? என்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்'' என்கிறார், ஐதராபாத்தை சேர்ந்த கண் மருத்துவர் சவுமியா.

    • காது கேட்கும் திறன் குழந்தையின் பேச்சுக்கு மிக மிக முக்கியம்.
    • குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.

    ஐம்புலன்களில் செவிக்கும் மூளைக்கும் வாய்க்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒரு குழந்தை தெளிவாகக் கேட்டால், அதை மூளை சரியாக கிரகித்தால் எது தெளிவான பேச்சாக வெளியே வரும். காது மந்தமாக இருந்தால் பேச்சில் குறைபாடு இருக்கும்.

    ஒரு குழந்தை அம்மா என்ற ஒலியை காதில் உணர்ந்து, அந்த அதிர்வை மூளை வாங்கி, அந்த அதிர்வை தான் முதலில் 'அம்மா' என்று உணர்வை ஏற்படுத்தும். அதன் பின் அதை வார்த்தை வடிவில் அம்மா என்று அழைக்கும்.

    அடுத்தது குழந்தையின் மூளையைத் தூண்டி, பேச வைக்க ஆள் இல்லாதது பேச்சுக் குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் அருகில் அமர்ந்து பேசுவதற்கு அம்மா, அப்பா இருவருக்கும் இப்போது நேரம் இல்லை. தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் அருகில் இல்லை. பிரச்சனைக்கான காரணத்தை சரிவரக் கண்டறிந்தால் தீர்ப்பது சுலபம்.

    குழந்தைகள் பேச்சுக் குறைபாட்டிற்கான காரணங்கள்

    ஒரு குழந்தையின் மொழித்தொடர்பில் வரும் (Language delay) தாமதம் தான் மொழித்தொடர்பு தாமதம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தை தனது வயதிற்குத் தகுந்தாற்போல் வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ பேச இயலவில்லை என்றால் குறைபாடு இருக்கின்றது என்று அர்த்தம். குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.

    குறைபாட்டிற்கான அறிகுறிகள்:

    1. ஓரு குழந்தை 15 மாதத்திற்குள் வாய்க்குள் முணங்கவில்லை என்றால்.

    2. 2 வயதிற்குள் சில நூறு வார்த்தைகள் பேசவில்லை என்றால்.

    3. சின்ன சின்ன வாக்கியங்கள் 3 வயதிற்குள் பேசவில்லை என்றால்.

    4. நீங்கள் கூறும் வார்த்தைகள் /கட்டளை களை பின்பற்ற இயலவில்லை என்றால்.

    5. முறையான உச்சரிப்பு இல்லாமை

    பேச்சு குறைபாட்டிற்கான காரணங்கள்

    1. காது கேளாமை

    மேற்கண்ட தென்படின் மிக முக்கியமாக செய்ய வேண்டியது செவித்திறன் பரிசோதனை துல்லியமான காது கேட்கும் திறன் குழந்தையின் பேச்சுக்கு மிக மிக முக்கியம். குழந்தையின் கேட்கும் திறன் BERA, OAE, ASS போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

    கேட்கும் திறனில் நிரந்தரமாக குறைபாடு இருப்பின், சரியான காது கருவிகள் (Hearing Aids) பொருத்துவதன் மூலம் பேச்சுக் குறைபாட்டை சரி ெசய்ய முடியும்.

    பிறந்தவுடன் செவித்திறன் பரிசோதனை (New Born Screening) யாருக்கு அவசியம்?

    1. எடை குறைந்த பிறப்பு

    2. குறை பிரசவக் குழந்தை

    3. ரத்த உறவுக்குள் திருமணம் செய்தவர்கள்

    4. கருவுற்றிருக்கும் போது மஞ்சள் காமாலை வந்தவர்கள்.

    5. பல காரணங்களால் இன்குபேட்டரில் வைக்ப்பட்ட குழந்தை

    6. பிறந்தவுடன் அழாத குழந்தைகள்.

    7. பரம்பரைக் குறைபாடு உள்ளவர்கள்.

    இன்ஸ்டா ஹியரிங் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி. செல்: 9789334719.

    Mrs. தனலெட்சுமி M.Sc., Aud. (AIISH) (All India Insutitute of Speech & Hearing, Mysore)

    • சில அறிகுறிகள் மூலம் கணித்துவிட முடியும்.
    • மலச்சிக்கலும் குழந்தையின் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம்.

    இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களின் துணை இல்லாமல், குழந்தையைத் தனியாக பராமரிக்கும் நிலை பல இளம் தாய்மார்களுக்கு உள்ளது. குழந்தை திடீரெனெ அழும்போது, அதற்கு காரணம் என்ன? என்று தெரியாமல் திணறுபவர்கள் இதில் அதிகம். குழந்தையின் அழுகைக்கு பசி, அசவுகரியம், வயிற்று வலி போன்ற பல காரணம் இருக்கும். இதில் வயிற்று வலி முதன்மையானது. குழந்தைகளின் அழுகை வயிற்று வலியால்தான் என்பதை, சில அறிகுறிகள் மூலம் கணித்துவிட முடியும். அது என்ன என்பதை பார்க்கலாம்.

    குழந்தையின் அழுகை, வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், சில நேரங்களில் அழுதாலும் பசியாறிய பிறகு அமைதியாகிவிடுவார்கள். அதனால் அழுகையின் காலத்தைக் கவனியுங்கள். குழந்தைகள் பால் குடித்த உடனே அதை துப்புகிறார்களா, வாந்தி எடுக்கிறார்களா அல்லது பால் குடிக்க மறுக்கிறார்களா என்பதையும் கண்காணியுங்கள். வழக்கத்துக்கு மாறான வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் குழந்தைகள் மலம் கழிக்கும்போது முகத்தை சுளித்து அழுவார்கள். தசைகளை இறுக்குவார்கள். அசையாமல் இருப்பார்கள். இவையெல்லாம் குழந்தைக்கு வயிற்று வலி இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

    குழந்தையின் வயிற்றை உங்கள் கைகளால் தொட்டுப் பாருங்கள். வயிறு பூப்போன்று 'மெத்'தென்று இருந்தால், வயிறு வலி பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். வயிறு கடினமாகச் சற்று அழுத்தமாக இருந்தால், அது வயிற்று வலியாக இருக்கலாம். சில நேரங்களில் மலம் கழித்தவுடன் வயிறு இயல்பாக மாறிவிடும். ஆனால், சில சமயங்களில் மலம் கழித்தாலும் குழந்தையின் வயிறு கனமாக, அழுத்தும்போது கடினமாக இருக்கும்.

    இதுவும் வயிற்று வலியின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தையின் வயிறு பெருத்து இருந்தால், வயிற்றில் வாயு அதிகரித்திருக்கலாம். வாயு பிரச்சினை ஏற்பட்டாலும், அது வயிற்று வலியை உண்டாக்கலாம். மலச்சிக்கலும் குழந்தையின் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம். குழந்தை, பிறந்த சில வாரங்கள் வரை ஒரு நாளுக்கு 12 முறை வரை மலம் கழிக்கலாம்.

    ஆனால், முதல் சிலவாரங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறையும். பிறகு திடப்பொருட்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது தான் மலம் கழிப்பது அதிகரிக்கும். அதனால், குழந்தை மலம் கழிக்கும் முறைகளைக் கண்காணிப்பதன் மூலம், வயிறு வலிக்கு மலச்சிக்கல் காரணமா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

    பவுடர் பால் தரும்போது, சில நேரங்களில் அதை ஏற்றுக்கொள்ளாமல் குழந்தைகள் வயிற்றுக் கோளாறுகளை எதிர்கொள்ளலாம். இணை உணவு கொடுக்கும் போது, அவையும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். அவ்வாறு இருந்தால் வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தாலே வயிறு வலி என்பதை உணர்ந்துவிடலாம். தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

    ×