ஏப்ரல் 2-ந்தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது.
ஏப்ரல் 2-ந்தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
Published on

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப் புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள். உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டிசம் நோயல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே.

இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம். இந்தியாவில் 20 லட்சம் பேர் இந்த குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

மேலும் இந்த அளவானது ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. இவர்களுக்கு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அதை சிறந்த பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் முழு பொறுப்பு.இந்த குழந்தைகளின் பிரதான பிரச்சினை மற்றவர்களோடு பழகுவது தான். மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும். குழந்தை பிறந்தவுடன் ஆட்டிசம் உள்ளதா? என்பதை முகபாவனை உணராமை, சத்தங்களை உணர முடியாமல் இருப்பது, கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, தனியாக இருப்பதை விரும்புதல், சொற்களை திரும்ப திரும்ப பேசுதல், பேசுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியான காரணங்கள் குறைவு தான். சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வது, மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது.

நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை அளிக்கும் சிகிச்சைகள் உள்ளன. முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இவர் களுக்கென தனி சிறப்பு பள்ளிகள் உள்ளன. அரசின் சார்பில் இவர்களுக்கு அனைத்து தெரபிகளும் வழங்கும் மையங்கள் மருத்துவ கல்லூரிகள் என்ற அளவில் தான் உள்ளது. அரசானது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆட்டிசத்துக்கான சிகிச்சையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் சிகிச்சைகளும் எளிமையாகும், விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com