search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Benjamin Netanyahu"

    • காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 22-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.

    இந்நிலையில், ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    மேலும் எதிரிகளை தோற்கடிப்பதும், நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
    • பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு இன்று சந்தித்தனர். சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடையே உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    அப்போது பேசிய அவர், "அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. உலக வரலாற்றிலேயே 9/11 தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற மிகக் கொடூர தாக்குதலாக இது அமைந்தது. இந்த தாக்குதல் கிட்டத்தட்ட இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமமான ஒன்று ஆகும். ஹாலோகாஸ்ட்-ஐ தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட மிகக் கொடூர தாக்குதல் இது."

    "ஹமாஸ் குழந்தைகளை கொன்று, அவர்களின் தலையை துண்டாக்கினர், பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஈடுபட்டனர். மேலும் பிணைகளை கடத்திச் சென்றுள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ்-ஐ அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம். ஹமாஸ்-ஐ முழுமையாக வேரறுப்போம்."

    "ஹமாஸ்-இன் பயங்கரவாதத்தை அழித்து, அதன் அரசியல் கட்டமைப்பை உடைத்தெறிவோம். எங்களின் பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

    • பிரதமர் நேதன்யாகு காசாவில் ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்தார்.
    • காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

    • இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்த நிலையில் 2,300 பேர் காயம்
    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 3 லட்சம் வீரர்களை திரட்டியுள்ளது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற யோம் கிப்பர் போருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ராணுவ வீரர்களை முதல்முறையாக இஸ்ரேல் திரட்டியுள்ளது.

    இருதரப்பிலும் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    இந்த நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:-

    இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும்'' என்றார்.

    ஏற்கனவே, இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எலான் மஸ்க் உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் ஆவார்
    • மஸ்கை இஸ்ரேலில் முதலீடு செய்ய அழைக்கிறார் நேதன்யாகு

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பு நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்கு செல்லும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார்.

    தனது பயண திட்டத்தில் ஜோ பைடன் தவிர உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான அமெரிக்கர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.

    இது குறித்து எக்ஸ் கணக்கில் நேதன்யாகு தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எனது பயணத்தை தொடங்க போகிறேன். இந்த நவீன காலகட்டத்திற்கான அதிசயத்தக்க மாற்றங்களின் தலைவரான எலான் மஸ்கை சந்திக்க போகிறேன். அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். இஸ்ரேலில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவேன். மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்ற கூடிய பயணத்தை மஸ்க் முன்னெடுத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    "செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சி மனித குல வாழ்வியலுக்கான மிக பெரும் ஆபத்து. அத்துறையில் விளைவுகளை சிந்திக்காமல் மேம்படுத்தி கொண்டே போவது சாத்தானை வரவேற்பதற்கு சமம்" என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

    இத்துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு போட்டியாக மஸ்க், எக்ஸ்ஏஐ எனும் நிறுவனத்தை கடந்த ஜூலையில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாக கூறி உள்ளார்.
    • நோயாளியின் இதயம் மிக மெதுவாகத் துடிக்கும்போது, இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் ரமத் கானில் உள்ள ஷேபா மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேசன் செய்து பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிரதமர் நேதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சீர்திருத்தம் ஜனநாயகத்தை சிதைக்கும் என அரசின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.

    முன்னதாக நேதன்யாகு வெளியிட்ட வீடியோவில் எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி உள்ளார். துணை பிரதமர் லெவின்தான் இந்த நீதித்துறை மாற்றத்தின் மூளையாக இருக்கிறார்.

    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பான தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று இரவு இஸ்ரேல் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தி ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமுக்குள் அணிவகுத்து சென்று பாராளுமன்றத்திற்கு அருகில் முகாமிட்டனர்.

    பாராளுமன்றம் சென்று தீர்மானம் மீது வாக்களிக்க ஏதுவாக சரியான நேரத்தில் பிரதமர் நேதன்யாகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    நோயாளியின் இதயம் பலவீனமாகி மிக மெதுவாகத் துடிக்கும்போது மயக்கம் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதயத்திற்கு மின் துடிப்புகளை அனுப்புவதன் மூலம், இந்த சாதனம் ஒரு நபரின் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்கும். பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்ட நோயாளிகள், சில நாட்களுக்குள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறைக்காக மருத்துவமனையில் குறைந்தது ஒருநாள் தங்கியிருக்க வேண்டும். பேஸ்மேக்கரின் செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்து உறுதி செய்தபின் வீடு திரும்பலாம்.

    • நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    • சுட்டெரிக்கும் வெயிலில் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக இருந்த நிலையில், அங்கு சென்ற நேதன்யாகுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    நேற்று அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து அவரை டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்திற்கு சென்று பரிசோதனை செய்யும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நேதன்யாகு அலவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, ஒரு வீடியோ பதிவில், சுட்டெரிக்கும் வெயிலில் நெதன்யாகு தனது மனைவியுடன் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார். எனினும் இது நல்லது அல்ல என்று கூறிய அவர், அனைவரும் வெயிலில் நிற்பதை குறைக்க வேண்டும் என்றும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    பிரதமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாராந்திர இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
    • பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. மக்களின் போராட்டத்தை அடுத்து புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேதன்யாகு ஒப்புதல் அளித்தார்

    இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டில் 75-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், சுதந்திர தினம் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாளில் எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எனது இதயபூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு செயல்பட்டு வருகிறார். இவர்மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நேதன்யாகு தலைமையில் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டம் அமலாகும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் குறையும். மேலும், கோர்ட்டின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கும். அதேபோல், நீதிபதிகள் நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இது நீதித்துறையை முடக்கும் செயல் எனக்கூறி இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்கள் போராட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அந்த வகையில் போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்தனர். இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும், நீதித்துறை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெ ர்சாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்தார். போராட்டக்காரர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    • நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் முடிவை எதிர்த்து இஸ்ரேலில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
    • எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு நியமிக்கும் 9 பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும்.

    முன்னதாக நீதிதுறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்திருந்தார்.

    இதையடுத்து, இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல் அவிவ்வில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஏராளமான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சூழலில் நீதித்துறை அதிகாரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை இந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரதமர் நேதன்யாகு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியானது.

    • இஸ்ரேல் பிரதமராக 6-வது முறையாக பெஞ்சமின் நேதன்யாகு பதவியேற்றுக் கொண்டார்.
    • நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    இஸ்ரேலில் கடந்த நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, இஸ்ரேல் பிரதமராக 6-வது முறையாக பெஞ்சமின் நேதன்யாகு பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமராக நேதன்யாகு பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தனது நல்ல நண்பருடன் பேசுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. நேதன்யாகுவின் அற்புதமான தேர்தல் வெற்றிக்காகவும், ஆறாவது முறையாக பிரதமரானதற்காகவும் பிரதமர் மோடி அவரை வாழ்த்தினார். இந்தியா, இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை ஒன்றாக முன்னேற்றுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார் என பதிவிட்டுள்ளது.

    • பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
    • டெல்அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    யாயிர் லாபிட் தலைமையிலான கூட்டணி 51 இடங்களை பிடித்தது. அந்நாட்டின் நான்கு ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் இதுவாகும். கடந்த 4 முறை நடந்த தேர்தல்களில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இந்த தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நெதன்யாகு வெற்றி பெற்று கடந்த 29-ந்தேதி பிரதமராக பதவியேற்றார்.

    இந்த நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. டெல்அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஜனநாயகம், சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. பாசிசம் மற்றும் நிறவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம் உள்ளிட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் கொண்டு வந்து இருந்தனர்.

    டெல் அவிவ் நகரில் மத்திய மற்றும் தெற்கு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போராட்டக்காரர்கள் கூறும்போது, எங்கள் நாடு ஜனநாயகத்தை இழக்க போகிறது என்று நாங்கள் உண்மையில் பயப்படுகிறோம். சட்ட விசாரணையில் இருந்து விடுபட விரும்பும் ஒருவருக்காக நாங்கள் சர்வாதிகாரத்துக்குள் செல்கிறோம் என்றனர்.

    இஸ்ரேலில் சில ஆண்டுகளாக நிலையான அரசு அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நெதன்யாகு தலைமையில் அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×