search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் தாக்குதல்"

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் காசாவில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காசா போரில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அஜித் தோவலிடம் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார் என்று கூறியுள்ளது.

    நேதன்யாகுவுடனான சந்திப்பின்போது உடனிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்கி ஹளக்பியையும் சந்தித்து பேசினார்.

    காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மேலும் காசா போர் தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
    • சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.

    முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய, தெற்கு காசாவிலும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, வடக்கு பகுதியில் ஹமாசின் ராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம்.

    தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

    மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். தெற்கு காசாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மத்திய, தெற்கு காசாவில் ஹமாசை அழித்து ராணுவம், வேறு வழிகளில் செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 8 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தெற்கு காசாவின் கான்யூ னிஸ் நகரில் ஒரு குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்.

    • காசா பகுதியில் இதுவரை 21,800 பேர் வரை உயிர் இழந்து விட்டனர்.
    • போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல் ராணுவம்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தொடங்கி 3 மாதத்தை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. ஹமாசை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இதையடுத்து தற்போது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசா முழுவதும் இடைவிடாமல் வான்வெளி வழியாக குண்டுகளை வீசி வருகிறது. பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க பதுங்கு குழிகளை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இஸ்ரேல் ராணுவத்தின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஏராளமானவர்கள் பலியாகி விட்டனர்.

    காசா பகுதியில் இதுவரை 21,800 பேர் வரை உயிர் இழந்து விட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடும் சண்டைக்கு மத்தியில் உயிருக்கு பயந்து ஏராளமான பொதுமக்கள் எகிப்தின் ரபா எல்லையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நேற்று புதிதாக வான் வெளி தாக்குதலை நடத்தினர். அந்த பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 35 பேர் பலியாகி விட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சூழ்நிலையில் காசாவில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    இஸ்ரேல் மீது சுமார் 20 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

    மேலும் வடக்கு இஸ்ரேல் நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ஏவிய 2 டிரோன்களை இஸ்ரேல் படை சுட்டு வீழ்த்தியது. இதனால் தற்போது போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சண்டை தீவிரமடைந்து இருப்பதால் ஹமாசுக்கு எதிரான போர் முடிவுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • இஸ்ரேல் ராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபட்டுள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். போரால் காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசா மீதான போரை உடனே நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, 'காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும். இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    காசாவில் இன்னும் பிணைக் கைதிகளாக உள்ள அனைத்து இஸ்ரேலியர்களையும் வீட்டிற்கு அழைத்து வர உறுதியளிக்கிறேன். இஸ்ரேல் ராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபட்டுள்ளது. அதன் இலக்குகளை அடைய நேரம் தேவை. ஹமாஸ் அகற்றப்பட்டு பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் பல மாதங்களுக்கு தொடரும். காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று நாங்கள் உத்தரவாதம் அளிப்போம். நாங்கள் படிப்படியாக ஹமாசின் திறன்களை அழித்து வருகிறோம். அந்த அமைப்பின் தலைவர்களையும் ஒழிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
    • இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல் திவிரமடைந்து வருகிறது. காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.

    இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

    காசாவில் ஏராளமான கட்டிடங்கள், குண்டுவீச்சில் தரைமட்டமாகின. மேலும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளை இஸ்ரேல் குறி வைத்து உள்ளதாக காசாவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வானி ஆஸ்பத்திரியை இஸ்ரேலின் டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன. ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தளங்கள் சேதமடைந்து உள்ளன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 90 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. அங்கு புல்டோசர்கள் மூலம் கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    காசாவில் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.


    காயம் அடைந்தவர்களுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கணக்கான நேபாளிகள் உள்ளனர்.

    மேலும் புதிதாக காயம் அடைந்தவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் இஸ்ரேல் தாக்குதல் வளையத்துக்குள் உள்ளது. இதனால் நோயாளிகள் தஞ்சமடைந்து பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    ரஹிதா என்பவரும் அவரது மகள் சமரும் நடந்து சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தேவாலய வளாகத்துக்குள் மற்றவர்களை பாதுகாக்க முயன்றமேலும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் தேவாலய வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இருந்த 3 இஸ்ரேல் பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றதை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பிடம் இருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர்.
    • கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள்.
    • செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடந்து வரும் போரில் ஹமாசுக்கு பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக வரும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.

    அதன் படி கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் நாட்டு தொழில் அதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை அவர்கள் நடுக்கடலில் வழிமறித்து கடத்தி சென்றனர். இந்த நிலையில் செங்கடல் மற்றும் பாப்-அல் மண்டப் கடற்பகுதிகள் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.

    நேற்று இஸ்ரேல் நோக்கி பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அந்த டிரோன்களை பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் இடைமறித்து தாக்கி வீழ்த்தியது. இதனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த டிரோன்கள் ஏமன் நாட்டு கடற்பகுதியில் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தால் செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    • மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    காசா:

    காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உள்பட 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் வடக்கு காசா பகுதி முற்றிலும் நிர்மூலமாகி விட்டது.

    இதற்கிடையே காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபா அருகே தாக்குதல் நடக்கிறது. ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாகவும், ஆஸ்பத்திரியின் கீழே ஹமாசின் சுரங்கங்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காசாவில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. அல்-புரேஜ் அகதி முகாம், ரபா, காசா சிட்டி மற்றும் பிற பகுதிகளில் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது.

    வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசியன் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதுபோல் மற்ற ஆஸ்பத்திரிகள் பகுதிகளிலும் தாக்குதல் நடக்கிறது.

    இதனால் ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள், தஞ்சம் அடைந்த பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள்.

    போதுமான எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குறை பிரசவத்தில் பிறந்த 28 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காசா ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் குழந்தைகள் ஏற்றப்பட்டு ரபா எல்லை வழியாக எகிப்துக்கு சென்றடைந்தன.

    பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.

    காசா:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45- வது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது முதலில் வான்வெளி வழியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    காசாவில் மிகப்பெரிய மருத்துவ மனையாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது போர்களமாக பயன்படுத்தி வருவதாகவும், உள்ளே ஏராளமான சுரங்க பாதைகள் அமைத்து பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் மறுத்து வருகிறது.

    இதையடுத்து அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கிருந்து பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பொது மக்கள் வெளியேறி விட்டனர். ஆஸ்பத்திரி முழுவதும் இஸ்ரேல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்குள் மிகப்பெரிய அளவில் 10 மீட்டர் ஆழத்தில் 55மீட்டர் நீளத்துக்கு சுரங்கபாதைகள் இருப்பதை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த சுரங்க பாதையை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக வீடியோவினை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதே போல பல பதுங்குகுழிகளை கண்டுபிடித்து அழித்து விட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து ஆஸ்பத்திரி முழுவதும் சுரங்கபாதைகள், பதுங்கு குழிகள், பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரேல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 நாட்களில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி இருக்கும் 240 பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இது தவறான தகவல் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.

    • ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.
    • பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். தரைப்படையினர் காசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.

    காசா நகர் மீது இஸ்ரேல் படையினர் மும்முனை தாக்குதல் நடத்தி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறி வைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதில் ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருவதால் போர் ஒரு மாதத்தையும் கடந்து தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் மனிதாபிமான உதவிகள் அளிக்கும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியது. ஆனாலும் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. ஹமாஸ் பிடியில் இருக்கும் 239 பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வருதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.


    அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜோபைடன் காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த பகுதியில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தினமும் 4 மணி நேரம் காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது.

    அதன்படி காசாவில் 4 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து போர் நடந்து வரும் வடக்கு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். நடந்தும், கழுதை வண்டிகள் மூலமாகவும் அவர்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் சில மணி நேரங்களில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நாங்கள் விரும்புகிறோம். மனிதாபிமான உதவிகளை நாங்கள் ஊக்குவித்து அதை செயல்படுத்தி வருகிறோம். இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் காசவை ஆள முயலவில்லை. பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை. சிறந்த எதிர்காலத்தை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் காசாவில் உள்ள 3 பெரிய ஆஸ்பத்திரிகள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது.
    • ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்- ஹமாஸ் படை இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேறும் படி அந்நாடு உத்தரவிட்டது.

    இஸ்ரேலில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் தொடங்கியதும் இவர்களின் பணி உரிமத்தை இஸ்ரேல் ரத்து செய்து விட்டது. உடனடியாக அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட்டனர்.

    இதையடுத்து வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கட்டுமான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இஸ்ரேல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேலிடம் இருந்து ராணுவ படைகளுக்கான ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இப்படி இந்தியாவுடன் நட்புணர்வோடு திகழ்ந்து வரும் இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனர்களுக்கு பதில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதால் இருதரப்புக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

    ×