search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyanar"

    • மகா தீபாராதனை காட்டப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொறையாறில் பூரண புஷ்கலை திருமுடி அய்யனார் மகாசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நேற்று காலை நடை பெற்றது.

    முன்னதாக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது.

    பின்னர் விநாயகர், பூரண புஷ்கலையம்மன் அய்யனார், பிடாரி அம்மன், ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    குடமுழுக்கு விழாவில் பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.என்.ரூபேஷ்நாடார், டி.ஜி.ஆர். ஜெயக்குமார் நாடார், கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன், விஜயாலயன்ஜெயக்குமார் நாடார் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
    • இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வாரம் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன.

    முன்னதாக மூலவர் சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியருக்கு 26 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பிடாரி அம்மனுக்கும், சுப்பிரமணியன் வள்ளி தெய்வானைக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் மற்றும் பிடாரி அம்மன் சுப்பிரமணியன் வள்ளி தெய்வானையுடன் மலர் மாலை சூட்டி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், பட்டவராயன், தூசி மாடன், தளவாய் மாடன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்காக நேற்று காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் அரசு பஸ்களில் வந்து குவிந்தனர். இதனால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    சொரிமுத்து அய்யனார் கோவிலை சுற்றி மண்டபம் அமைப்பது மற்றும் கோவில் திருப்பணிக்காக ரூ.12 கோடி ஒதுக்கியதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதையில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரை உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார்.
    • அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது.

    திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில். இவரை அந்த பகுதி மக்கள் 'தலைமலை அய்யன்' என்றும் அழைப்பார்கள். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்போம்.

    இந்தியாவில் பல மலைகள் இருந்தாலும் இமய மலையும், பொதிகை மலையும் தான் தலைசிறந்த, புகழ்பெற்ற மலைகளாகும். சிவன் - பார்வதி திருமணத்திற்கு அனைத்து முனிவர்களும், ஞானிகளும் இமயமலைக்கு வந்ததால், வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு செல்லுமாறு சிவபெருமான் கூறினார். இதை ஏற்று பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், இங்கு தலைமலை அய்யனாரையும், ஆதிசங்கரியான அம்பாளையும், பிரம்ம சக்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவருடன் தேரையர் சித்தர், கோரக்கர், மச்சமுனி, கலைக்கோட்டு மாமுனி ஆகியோரும் அங்கு தங்கி இருந்து தலைமலை அய்யனாரை வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அடுத்த, காட்டு வழியே வந்த ராமனும், லட்சுமணனும் அகத்தியரை சந்தித்தனர். அப்போது அகத்தியர், இத்தல அய்யனாரை ராமர் வழிபடும் முன், அவர் குளிப்பதற்காக ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி தான் ராமநதியாகும். அந்த ராமநதியில் குளித்து விட்டு ராமரும், லட்சுமணரும் தலைமலை அய்யானாரை வழிபட்டனர். அப்போது அகத்தியர், அம்பாளின் சக்தியை திரட்டி, ராவணனை வெல்வதற்காக ஒரு அம்பு தயாரித்து கொடுத்து, "இலங்கைக்கு சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வருவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார்.

    ராமநதியில் புனிதநீராடி தலைமலை அய்யனாரை மனதார வேண்டினால், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தலைமலை அய்யனார் கோவில் அமைந்த வனப்பகுதிக்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி விறகு பொறுக்க வந்தாள். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே அந்தப் பெண், தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்குள் மழைக்காக ஒதுங்கினாள். அதே நேரம் அவளுக்கு பிரசவ வலியும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ஆண் கருவறைக்குள் இருப்பது, கர்ப்பிணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று எண்ணிய அய்யனார், கருவறையை விட்டு வெளியேறினார்.

    அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பெண்ணின் ரத்தவாடைக்கு, காட்டில் இருந்த கடுவாய் புலி அங்கு வந்தது. தாயையும், குழந்தையையும் அடித்து தின்ன முற்பட்டது. அப்போது அந்தப் பெண், 'அய்யனாரே' என்று சத்தம் போட்டாள். உடனே அய்யனார், கடுவாய் புலியை கல்லாக மாறும்படி சபித்தார். அந்த புலியின் கற்சிலையை இன்றும் ஆலயத்தில் காணலாம்.

    அதே போல் கர்ப்பிணிக்கு இடம் கொடுத்த தலைமலை அய்யனார், கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார். அவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது. ராமநதி அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பகுதி மக்கள் தலைமலை அய்யனார் கோவிலுக்கு சென்று வருண ஜெபம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் உடனடியாக மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.

    தலைமலை சாஸ்தா அருகில் வனபேச்சி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் தனியாக கோவில் உள்ளது. ராமநதியில் குளித்துவிட்டு இங்குள்ள கருப்பசாமியை 9 கடைசி வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். இந்த அய்யனாரை வழிபட்டு வேண்டுதல் நிறைவேறிய பின்னர், பக்தர்கள் அவருக்கு மணி செய்து கட்டுகிறார்கள். இதனால் கோவில் மரம், மண்டபம் முழுவதும் மணிகளாகவே காட்சி அளிக்கிறது. இந்த கோவில் அருகில் தோரணமலை முருகன் கோவில், சூட்சமுடையார் சாஸ்தா கோவில், வில்வவனநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கடையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் ராமநதி அணை உள்ளது. அணை வரை கார், வேன், ஆட்டோ செல்லும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் கோவிலுக்கு செல்லவேண்டும். பாவூர்சத்திரத்தில் இருந்து தோரணமலைக்கும், ராமநதி அணைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்ேவறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்திருந்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • காயாமொழி அருகே உள்ளது தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்.
    • இன்று காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதையொட்டி மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று (புதன்கிழமை 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • 31-ந்தேதி பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
    • வருகிற 1-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, நவகிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    31-ந் தேதி காலை 9 மணிக்கு 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • 26-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
    • ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னேற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து காரையாறு வரை 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியார் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பொருட்களை கோவிலில் இறக்கி வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்த பின்னர் இரவில் தங்காமல் வாகனங்களில் கீழே இறங்கி வந்து விட வேண்டும். கோவிலில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.

    மேலும் ஏற்கனவே அறிவித்தது போன்று நாளை (திங்கட்கிழமை) பக்தர்கள் தனியார் வாகனங்களில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. தனியார் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் விட்டு விட்டு, அரசு பஸ்களின் மூலமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவில் அருகில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள்.

    இதையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக பாபநாசம் வனத்துறை அலுவலகத்தில் உதவி கலெக்டர் ரிஷப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அரசு பஸ்களில் மட்டும் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. தினமும் 120 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 545 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் களக்காடு, அம்பை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வன கோட்டங்களில் இருந்து வனத்துறை ஊழியர்கள் 250 பேர் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து வனப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் வருகிறவர்கள் பழைய பாபநாசம் சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு பாபநாசத்துக்கு நடந்து சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தனியார் பேருந்துகள் பாபநாசம் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், வனச்சரகர்கள் ஸ்டாலின், கருப்பையா, கிருத்திகா (பயிற்சி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த 12-ந் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது.
    • அகஸ்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பழங்குடி இன மக்கள் வசித்து வரும் மயிலாறு காணி, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளும் உள்ளது.

    பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையாறு அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 12-ந் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது. இதனால் இந்த சாலை பணிகள் நேற்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதாவது வருகிற 24-ந் தேதி வரை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது.
    • இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    நெல்லை மாவட்டம் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் பொறுப்பாளர் சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கமாக இக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு விழா நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அகஸ்தியர்பட்டியில் இருந்து நாள் ஒன்றுக்கு 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல காணிக்குடியிருப்பில் இருந்து இரவு 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிகமாக மொத்தம் 400 சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கோவிலின் சார்பில் வைக்கப்படும் கடைகளில் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. முக்கியமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது. ஓட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவில் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 45 தண்ணீர் குழாய்கள் வைக்கப்படுகிறது. ஆடு வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது ஆற்றுத்தண்ணீரில் ஆட்டின் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சன்னதிக்கு முன் சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 28-ந்தேதி நடக்கிறது.
    • வருகிற 17-ந்தேதி கால்நாட்டு விழா நடைபெறுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் காரையார் அணை, சேர்வலாறு அணை, பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பழங்குடி இன மக்கள் வசித்து வரும் மயிலாறு காணி, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையார் அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதமடைந்து மோசமாக காணப்பட்டது.

    அந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் அந்த சாலையில் வருகிற 20-ந் தேதி வரை போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என போக்குவரத்து மற்றும் வனத்துறையினருக்கு நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். அதன்படி பாபநாசம் வனச்சோதனை சாவடிக்கு மேலே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், அகஸ்தியர் அருவி, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. அதற்காக வருகிற 17-ந்தேதி கால்நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ×