search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழா: தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது
    X

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழா: தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது

    • கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவில் அருகில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள்.

    இதையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக பாபநாசம் வனத்துறை அலுவலகத்தில் உதவி கலெக்டர் ரிஷப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அரசு பஸ்களில் மட்டும் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. தினமும் 120 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 545 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் களக்காடு, அம்பை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வன கோட்டங்களில் இருந்து வனத்துறை ஊழியர்கள் 250 பேர் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து வனப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் வருகிறவர்கள் பழைய பாபநாசம் சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு பாபநாசத்துக்கு நடந்து சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தனியார் பேருந்துகள் பாபநாசம் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், வனச்சரகர்கள் ஸ்டாலின், கருப்பையா, கிருத்திகா (பயிற்சி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×