search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayurveda"

    • கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும்.
    • நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும்.

    'சேற்றுப்புண்' தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் வரக்கூடியது. சேற்றுப் புண்ணை சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விட்டால் அது மேலும் அதிகமாகி வலியை உண்டாக்கி விடும். கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும். இதனால் நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வந்தால் விரைவில் ஆறவே செய்யாது என்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரே நாளில் சேற்றுப்புண் பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண முடியும்.

    ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும் சேற்றுப்புண் வர காரணமாக அமைகிறது. விரல் இடுக்குகளில் இருக்கும் பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மற்ற கால் விரல்களுக்கும் பரவி அதிகமாகிவிடும். இதனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது.

    இது சேற்றுப்புண் அல்லது 'அத்தலட்ஸ்' புண் என்று அழைக்கப்படும் 'டீனியா பெடிஸ்' என்னும் பூஞ்சை வகை நோய். இது வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு அதிகமாக வரும். கால் விரல் இடுக்குகளில் வெளுத்த நிறமுடைய புண் ஏற்பட்டு அரிப்பு, தினவு அதிகமாக இருக்கும். சொரிந்த பிறகு எரிச்சல் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) பறங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், கந்தக பற்பம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) சேற்றுப் புண் உள்ள பகுதிகளில் அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஒன்றைப்பூசி வர வேண்டும்.

    3) கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணைக்கழுவி வர வேண்டும். 4) புண்ணைக் கழுவுவதற்கு புளியந்தளிர் அவித்த நீர், படிகார நீர், வேப்பந்தளிர் அவித்த நீரையும் பயன்படுத்தலாம்.

    5) கால்களை காலை, இரவு வெந்நீரில் கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
    • சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும்.

    மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.

    இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும்.அடிவயிற்று பகுதியில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும். சில பெண்கள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் முதல் திருமணம் வரையிலும் கூட இந்த வயிறுவலியை தீவிரமாக உணர்வார்கள். இந்நாளில் சுருண்டு படுத்துவிடுவார்கள். இந்த வலியைதாண்டி சிலருக்கு அதிக உதிரபோக்கு, உடல் பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் கூட உண்டாகும்.

    மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, வாந்தி, முதுகுவலி இவற்றை 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhoea) என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்களுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது.இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.

    இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்: 1) புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும். 2)திரிகடுகு, ஓமம், இந்துப்பு, கழற்சி பருப்பு, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து 500 மி.கி. எடுத்து அதை ஒரு கிராம் நல்லெண்ணெய்யில் கலந்து கொடுக்க வலி தீரும். 3) குன்ம குடோரி மெழுகு 500 மி.கி. வீதம் காலை இரவு கொடுக்க வேண்டும். 4) குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

    கருப்பையை வலுப்படுத்த, உணவில் உளுந்தங்களி, வெந்தயக்களி, அத்திப்பழம், மாதுளம்பழம், வெண்பூசணி சாறு, சிவப்பு கொண்டைக்கடலை, நாட்டுக் கோழி முட்டை, நல்லெண்ணெய் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும்.
    • கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் மாறும். கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    1) பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    2) பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    3) இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும்.

    4) சந்திர தரிசனம்: இரவு உணவுக்குப்பின் ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்தமான நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனை (நிலவைப்) பார்ப்பது நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் இரு கை விரல்களை சேர்த்து சதுரம் போல செய்து அதன் மூலம் சந்திரனை சுமார் 20 நிமிட நேரம் பார்த்தல் 'சந்திர தரிசனம்' ஆகும். இது நமது சித்தர்கள் அரு ளிய வழிமுறையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.

    5) இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    6) தான்றிக்காய் தோல் பொடி 500 மி.கி. கிராம் வீதம் தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.

    7) தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.

    8) சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவைகளில் ஒன்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

    9) பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும்.

    10) இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும். அதிகாலை 4-5 மணிக்குள் எழ வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும்.
    • இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    உலக மக்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உலுக்கிய கொரோனா மூன்றாம் அலையிலிருந்து இந்தியா சிறிது காலம் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இன்புளூயென்சா வைரஸ் தொற்று மக்களிடையே பரவலாக காணப்பட்டு வருகிறது.

    சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளாக தென்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் ஆன்டிபயாட்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டிருக்கும் தருணத்தில் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேறு உடல் பாதிப்புகள் ஏற்படாதவாறு சித்த மருத்துவம் பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறது.

    இன்புளூயென்சா எனப்படுவது புளூ என பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் பல்வேறு வகை உண்டு. இதில் ஏ, பி, சி, டி என நான்கு வகையான வைரஸ் காணப்பட்டாலும், முதல் மூன்று வகை மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன.

    இன்புளூயென்சா வைரஸ் தொற்று இருக்கும் நபர்களில் ஏறக்குறைய 33 சதவீதம் நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை, வெளியில் தெரிவதும் இல்லை.

    இன்புளூயன்சா நோய் தாக்கினால் அதிக காய்ச்சல் (100 முதல் 103 பாரன்ஹீட்), மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, தசை வலி, தலைவலி, தொடர் இருமல், உடல் சோர்வு, அசதி, கைகால் தளர்ச்சி, வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

    வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    இந்த நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் அதன் வழியாக வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும்.

    தொண்டை சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் தொற்று நோய் பாதிப்பை உறுதிப்படுத்தப் படலாம். சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் என்ன நோய் என்று எளிதாக கணிக்க முடியும். விரைவு பரிசோதனை விரைவில் குணமடைய உதவும்.சித்த மருத்துவத்தில் இன்புளூயன்சா காய்ச்சல், இருமல் சளி தீர்க்கும் எளிய மருந்து மாத்திரைகள் உள்ளன. நம் உடலில் இரண்டு வகை நோய் எதிர்ப்பு திறன் உள்ளன. அதில் இன்னேட் இம்யூனிட்டி என்பது இயல்பாகவே நம் உடலில் உள்ளது. அக்கொயர்டு இம்யூனிட்டி என்பது நோய் தொற்றினால் உண்டாவது.

    இந்த இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். செல்வழி நோய் தற்காப்பு, எதிர்ப்பு பொருள் வழி நோய் தற்காப்பு. உடலில் நோய் தொற்றினாலோ, தடுப்பூசிகளினாலோ இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை இந்த வைரஸ் கிருமிகள் திசை திருப்புவதால் செல்வழி நோய் தற்காப்பை நாம் அதிகரிக்க வேண்டும்.

    இதற்கு சித்த மருத்துவத்தில் அநேக மருந்துகள் உள்ளன. அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 1.அமுக்கரா சூரணம்-மாத்திரை, 2.நெல்லிக்காய் லேகியம், 3.திரிபலா சூரணம்-மாத்திரை.

    காய்ச்சல், சளி, இருமலுக்கு 1.பிரம்மானந்த பைரவ மாத்திரை, 2.பாலசஞ்சீவி மாத்திரை, 3.வசந்த குசுமாகர மாத்திரை, 4.சாந்த சந்திரோதய மாத்திரை, 5.தாளிசாதி சூரணம், 6.திரிகடுகு சூரணம், 7.சீந்தில் சூரணம், 8.நிலவேம்பு குடிநீர், 9.கபசுர குடிநீர், 10.திப்பிலி ரசாயனம், 11.பூரண சந்திரோதயம், 12.முத்து பற்பம், 13.பவள பற்பம், 14.முத்து சிப்பி பற்பம், 15.ஆடாதோடை மணப்பாகு முதலிய மருந்துகள் முக்கியமாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கும் கைகொடுக்கும், குணப்படுத்தும் பக்க விளைவு இல்லாத, விலை குறைந்த மருந்துகளாகும்.

    எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் மிகச்சிறந்த மருந்து. இது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். நோயாளர் வயது, குறிகுணங்கள், நோயின் வகை, நோயின் தீவிரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து சித்த மருத்துவர் மருந்துகளை தேர்ந்தெடுத்து வழங்கி இவ்வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்து நோயாளர் விரைந்து குணமடைய வழிவகை செய்வர். மேலும் நோய் வராமல் தடுக்க தொற்றியிருந்தது பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமச்சீர் உணவுகளை அதாவது சத்தான அறுசுவை உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல், வேண்டிய அளவு நீர் அருந்துதல், மலத்தை சரியான நேரத்தில் காலை மாலை அடக்காமல் வெளியேற்றுதல், தூக்கத்தை அடக்காமல் இருப்பது, நேரத்தில் தூங்குதல், எல்லா காலங்களிலும் தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் குடிப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றுடன் மாறுபட்ட குறிகுணங்கள் உடலில் தோன்றியதுமே உடனே மருத்துவரிடம் சென்று சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இச்சமயங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் குறிகுணங்களைக்கூறி தயவுசெய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பணத்திற்காக மருந்தை விற்பதுடன் விலை மதிப்பில்லா உயிரோடு விளையாட வேண்டாம்.

    உடல், உயிர் பாதிப்பிற்கு நாம் காரணமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு கடிக்காத வண்ணம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளுக்கு இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன.

    உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.

    இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காய்ச்சல் இல்லாமல் சாதாரண இருமல் மட்டும் இருந்தால், இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

    சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி. வீதம் காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி. வீதம் இரவு வேளை சாப்பிடலாம்.

    வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

    குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும்.

    2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
    • கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.

    இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்பு உறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும். இதில் லேக்டிக் அமிலம் இருப்பதால் அது தொற்றுகளிலிருந்து பிறப்பு உறுப்பை பாதுகாக்கிறது. உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினை முட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயற்கையான ஒன்றாகும்.

    சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

    ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றத்துடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்றவை சேர்ந்து காணப்பட்டால், அது பெண்களின் பிறப்புறுப்பு நோய்களை காட்டுவதாகும்.நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

    சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.

    வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்: கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases), சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல், உடலுறவின் மூலம் பரவும் நோய்கள் (Sexually Transmitted Diseases - syphilis and gonorrhoea), பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா (Bacterial vaginosis), மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் (Candidiasis, Trichomonas vaginalis), கருப்பை கழுத்து உஷ்ணம் (Cervicitis), நெடுநாட்களாக கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களை எடுக்காமல் இருப்பது, கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervicalcancer). இதுபோன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.

    வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1) கீழாநெல்லி சூரணம் 1 முதல் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்,

    2) வெண் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும். அல்லது சோற்றுக்கற்றாழை ஜெல்லை 7 முறை தண்ணீரில் கழுவி மோரில் இஞ்சி சேர்த்து, நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்,

    3) ஓரிதழ் தாமரை சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு பாலில் குடித்து வரவேண்டும்,

    4) திரிபலா சூரணம் ஒரு கிராம், படிகார பற்பம் 100 மி.கி., சிலாசத்து பற்பம் 100 மி.கி. காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின்சாப்பிட வேண்டும்,

    5) வெண் பூசணி லேகியம் 1 முதல் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும், 6) படிகார நீர் வைத்து பிறப்புறுப்பை கழுவ வேண்டும்,

    7) நீங்கள் உட்காரும் அளவுள்ள பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெதுவெதுப்பான வெந்நீர் எடுத்துக்கொண்டு அதில் திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதை ஆங்கிலத்தில் சிட்ஸ் பாத் (Sitz Bath) என்பார்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது.
    • ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.

    இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது. பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை (Bronchi) என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் (Bronchioles) என்றும் பெயர். இந்த காற்றுக் குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகளுக்குள் நிரம்புகிறது. இந்தச்சிறிய காற்றுப் பைகளுக்கு 'ஆல்வியோலை' (Alveoli) என்று பெயர். இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன. இதற்கு 'பிராங்கோஸ்பாசம்' (Bronchospasm) என்று பெயர். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.

    நோய் காரணங்கள்: 1) பாரம்பரியம், 2) காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப்பொருட்கள், சில ரசாயனப் பொருட்கள்), 3) புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள், 4) ஹிஸ்டமின் (Histamine), அசைட்டைல் கோலைன் (Acetyl choline) போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும் போது, 5) உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் 'இம்யூனோகுளோபுலின் ஈ' அதிகரித்து இருப்பது, 6) தீவிர உடற்பயிற்சி, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, தீவிர இதய மற்றும் சிறுநீரக நோய், நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது. இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

    சித்த மருந்துகள்: 1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது.

    சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் தீர்வு உள்ளதாக வேலூரை சேர்ந்த பி.பீ.ஆர். மருத்துவமனை நிறுவனரும், 30 ஆண்டு அனுபவமிக்க ஓமியோபதி மருத்துவரும், தென்னிந்திய ஓமியோபதி மருத்துவ சங்க மாநில தலைவருமான பி.பீ.ஆர். என்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நமது உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்கு சிறுநீரகங்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. நமது உடலில் இருக்கும் நச்சு கழிவுகள் சிறுநீரில் வெளியேற்றப்பட்டால் தான் உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயல்படும். இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.

    ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது. இந்த ஓமியோபதி மருத்துவம் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். கோடைக்காலம் தொடங்கி விட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பலருக்கு சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது.

    துரித உணவுகள்

    சிறுநீரக பாதையில் அமார்பஸ் பாஸ்பேட் உப்பு அல்லது கால்சியம் ஆக்சலேட் உப்பு போன்ற தாதுக்கள் சிறிய வடிவில் நெருஞ்சி முள் போன்ற உருண்டையாக உருவாகிறது. உடலில் உருவாகும் தேவையற்ற அதிகப்படியான கால்சியம் போன்ற வகை உப்புகள் சிறுநீர் வழியாக வெளிறே வேண்டும். சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால் இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்துக் கொண்டு நிற்கும்போது அவை படிமங்களாக படிந்து நாளடைவில் கற்களாக உருவாகிறது. அவை நகர்வதால் கடுமையான வலி வருகிறது. இதனை சிறுநீரக கல் நோய் என்று கூறுகிறோம்.

    அவ்வாறு உருவாகும் கற்களில் பல வகைகள் உண்டு. ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், மன அழுத்தம், தைராய்டு சுரப்பி நீர் கோளாறு, சரியாக குடிநீர் அருந்தாமை, உடல் பருமன், தூக்கமின்மை, கிருமி தொற்று போன்ற காரணங்களாலும் இந்த கல் உருவாகிறது.

    கல் இருப்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம். மேலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சி.டி. ஸ்கேன் செய்வதன் மூலம் கற்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.

    திரவ ஆகாரம்

    கற்கள் பெரிதாக இருக்கும்போது வலி முதுகுபுறத்தில் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். சிலருக்கு வயிற்றில் கடுமையான வெட்டும் வலி, வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை அறிகுறிகளாகும். கற்கள் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திரவ ஆகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டருக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு இணையான பழச்சாறுகளும், அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். தினமும் இளநீர், பார்லி வேகவைத்த நீர், நீர்மோர் போன்றவை நன்மை பயக்கும். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச்சாறு குடிக்கலாம். சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, திராட்சை, வாழைப்பழம், அன்னாசி பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதும், எலுமிச்சை சாறு சேர்ப்பதும் நல்லது.

    மதுஅருந்தக் கூடாது

    கல் பிரச்சினை இருப்பவர்கள் உலர் பழங்கள், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தினை வகையில் கேழ்வரகு, கீரையில் பசலை கீரை இவற்றை தவிர்ப்பது நல்லது. ஐஸ்கிரீம், சாக்லேட் வகைகளையும், செயற்கை குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

    கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் சிறுநீரக கல் இருப்பது உறுதியானால் மருத்துவர் ஆலோசனையுடன், அவரது பரிந்துரையின் பேரில் அதை தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பினை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. எடை அதிகமாக இருப்பது கூட சிறுநீரக கற்கள் உண்டாக காரணமாக அமைகிறது. எனவே அதிகளவு கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.

    மதுவுக்கு சிறுநீரக கற்கள் உருவாக்கத்தில் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மை மதுவுக்கு உண்டு. ஆல்கஹாலில் இருக்கும் பியூரின், யூரிக் அமில கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம்.

    20 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களையும் ஓமியோபதி மருந்துகள் மூலம் அறுவை சிகிச்சையின்றி கரைத்து விடலாம். ஓமியோபதி மருத்துவத்தில் உணவு பத்தியம் இல்லை. பெண்கள் கர்ப்பகாலத்திலும் ஓமியோபதி மருந்துகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஓமியோபதி மருந்துகளை உட்கொள்ளலாம். சிறுநீரக கற்கள் திரும்ப வராமல் நிரந்தரமாக தடுக்க ஓமியோபதி மருத்துவம் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. பின்விளைவுகள் அற்ற மருத்துவமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
    • சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன.

    பொதுவாக மக்களுக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தண்டு வட வலி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரண வலி என்று விட்டு விடக்கூடாது. இவைகள் தண்டு வட நரம்புகள் பாதிப்படைய (Radiculopathy generation) காரணமாகி விடும்.

    நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். முதலில் பத்தியத்துடன் மருந்துகள் கொடுத்து வீக்கம், வலி குறைந்து இளக்கம் கண்டபின் எளிய பயிற்சிகள் கொடுப்பதோடு தண்டு வட புற சிகிச்சை முறைகள், தண்டு வடம் சீராகவும், ஜவ்வுகளின் அழுத்தங்களை குறைத்து வலுப்பெற செய்கிறது.

    மேலும் எலும்பு மூட்டுக்கள் உறுதி பெற மூட்டுக்களில் எண்ணெய் பசை சீராவதற்கான ரசாயனங்கள், லேகியங்கள், பஸ்பங்கள் முதலிய சக்தி வாய்ந்த மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமல்லாமல் புற மருத்துவ சிகிச்சைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று தான் 'மசாஜ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புற சிகிச்சை முறை. இதற்கு சித்த மருத்துவத்தில் தொக்கணம் என்று பெயர்.

    தொக்கண முறைகள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசையில் தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சியை தரும். உடல் முழுவதும் நிணநீர் ஓட்டத்தை சீராக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலின் மென்தசைகள், மூட்டுகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு வலிமை தரும். நெடுந்தூரம் தினமும் மோட்டார் சைக்கிள் அல்லது பஸ்களில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் தொக்கணம் செய்தால் உடல் சோர்வு மாறும்.

    இவ்வாறு நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தொக்கணம் எனப்படும் புற சிகிச்சை மிகவும் அவசியம்.

    குமரி மண்ணில் 7-வது தலைமுறையில் சித்த மருத்துவ சேவையாற்றி வருகிறோம் என டாக்டர்கள் குணசிங்க வேதநாயகம், பிரசாந்த் சிங் தெரிவித்தனர்.

    ஆனக்குழி ஆசான், டாக்டர் குணம் மருத்துவமனை, ஆனக்குழி, பாலப்பள்ளம் அஞ்சல்-629159. தொடர்புக்கு: 04651 226354. 227827 செல் எண்: 91 97867 77828.

    • மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து.
    • தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

    கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. 

    சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். 

    தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

    மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். 

    பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். 

    பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

    • சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
    • உதட்டின் கருமைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன.

    பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.

    அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

    இதனை கவனிக்கமால் விட்டால் இன்னும் கருப்பாக மாற்ற வாய்ப்பு இருக்கும். இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும். 

    தற்போது உதட்டு கருமை நீக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

    இதற்கான மருத்துவம்: பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ கரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கருப்பு நீங்கும். பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருப்பு நீங்கும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும்.
    • அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.
    பெண்களுக்கு சாதாரணமாக 3 முதல் 7 நாட்கள் இருக்கும் மாதவிடாய் காலங்களில் சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்தக் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு 'பெரும்பாடு' (மெனோரேஜியா-Menorrhagia) என்று அழைக்கப்படுகிறது.

    மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும். மேலும் கை, கால் வலி, உடல் சோர்வாக இருக்கும். ஒரு சிலருக்கு அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.

    காரணங்கள்: கருப்பை சளிக்கவசம் கருப்பை உள்ளுறுப்புகளில் வளருதல் (Endometriosis), கருப்பை தசையான மயோமெட்ரியத்தில் எண்டோமெட்ரியம் வளருதல் (Adenomyosis), கருப்பையில் வளரும் சாதாரண தசைக் கட்டிகள் (Fibroid uterus), சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் (PCOD), சாக்கலேட் கட்டிகள் (Chocolate cyst), கருப்பை தசை கடினமடைதல் (Adenomyomas), பெண்மைக்குரிய ஹார்மோன்களான புரஜஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் இவைகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள், கருத்தடைக்காக வைக்கப்படும் காப்பர்-டி போன்ற உபகரணங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது. இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப்போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை தகுதியான மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப மருத்துவம் பார்ப்பது சிறந்தது.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) திரிபலா சூரணம் ஒரு கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.

    2) கொம்பரக்கு சூரணம் ஒரு கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்,

    3) திரிபலா சூரணம் ஒரு கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இருவேளை ஏழு நாட்கள் உண்ணவும்.

    4) வாழைப்பூ வடகம் ஒன்று அல்லது 2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்,

    5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை இரவு இருவேளை சாப்பிடலாம்,

    6) இம்பூறல் மாத்திரை ஒன்று அல்லது 2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

    7) உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை சாதம், முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×