search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வெள்ளைப்படுதல் பிரச்சனையும்... சித்த மருத்துவத்தீர்வும்...
    X

    வெள்ளைப்படுதல் பிரச்சனையும்... சித்த மருத்துவத்தீர்வும்...

    • பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
    • கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.

    இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்பு உறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும். இதில் லேக்டிக் அமிலம் இருப்பதால் அது தொற்றுகளிலிருந்து பிறப்பு உறுப்பை பாதுகாக்கிறது. உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினை முட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயற்கையான ஒன்றாகும்.

    சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

    ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றத்துடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்றவை சேர்ந்து காணப்பட்டால், அது பெண்களின் பிறப்புறுப்பு நோய்களை காட்டுவதாகும்.நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

    சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.

    வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்: கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases), சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல், உடலுறவின் மூலம் பரவும் நோய்கள் (Sexually Transmitted Diseases - syphilis and gonorrhoea), பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா (Bacterial vaginosis), மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் (Candidiasis, Trichomonas vaginalis), கருப்பை கழுத்து உஷ்ணம் (Cervicitis), நெடுநாட்களாக கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களை எடுக்காமல் இருப்பது, கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervicalcancer). இதுபோன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.

    வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1) கீழாநெல்லி சூரணம் 1 முதல் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்,

    2) வெண் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும். அல்லது சோற்றுக்கற்றாழை ஜெல்லை 7 முறை தண்ணீரில் கழுவி மோரில் இஞ்சி சேர்த்து, நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்,

    3) ஓரிதழ் தாமரை சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு பாலில் குடித்து வரவேண்டும்,

    4) திரிபலா சூரணம் ஒரு கிராம், படிகார பற்பம் 100 மி.கி., சிலாசத்து பற்பம் 100 மி.கி. காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின்சாப்பிட வேண்டும்,

    5) வெண் பூசணி லேகியம் 1 முதல் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும், 6) படிகார நீர் வைத்து பிறப்புறுப்பை கழுவ வேண்டும்,

    7) நீங்கள் உட்காரும் அளவுள்ள பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெதுவெதுப்பான வெந்நீர் எடுத்துக்கொண்டு அதில் திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதை ஆங்கிலத்தில் சிட்ஸ் பாத் (Sitz Bath) என்பார்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    Next Story
    ×