search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer heat"

    • வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
    • வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மே மாதத்தில் அக்னிநட்சத்திரத்தின் போது அதிக அளவு மழைப்பொழிவு இருந்தது. மேலும் கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. மேலும் கோடை விழா மலர் கண்காட்சியிலும் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்தனர்.

    இருந்தபோதும் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிக அளவு வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற 6ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் 10ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.


    தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இருந்தபோதிலும் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட இடங்களில் தற்போது இதமான சீதோசனம் நிலவி வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கும் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன.
    • அகழ்வாராய்ச்சி பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு ராட்சத பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரலாறு சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் சோழர்கள் வாழ்ந்த அரண்மனை பகுதி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    தற்பொழுது தமிழக அரசின் உத்தரவுன்படி தொல்லியல் துறை சார்பில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகின்றன. இதில் சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு காசுகளை உருவாக்க அச்சு சுடுமணன் ஆன முத்திரை என அரிய வகையான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் சாலைகள் அமையப் பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன.

    மேலும் இந்த அகழ்வாராய்ச்சி பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு ராட்சத பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் பந்தல் அடியோடு சாய்ந்தது.

    இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ராட்சத பந்தலை சரிசெய்ய வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 39 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கோட்டயத்தில் 838.7, வயநாட்டில் 266.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக கோட்டயம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.

    இரண்டரை மணி நேரத்தில், இடுக்கியில் உடும்பன்னூரில் 167 மி.மீட்டர் மழையும், கோழிக்கோடு உறுமியில் 132 மி.மீட்டர் மழையும் பெய்ததாக பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து வரும் 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா புளியன்மலையில் மாநில நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடுபுழா-கட்டப்பனா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள நாடு காணி பகுதியில் நிறுததப்பட்டிருந்த 2 கார்கள் மீது மண் சரிவுகள் விழுந்ததால் அந்த கார்கள் சேதம் அடைந்தன. மழையின் காரணமாக மூலமட்டம் பகுதியில் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் மலங்கரை அணையின் 4 ஷட்டர்களும் இன்று தலா 2 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மூவாட்டுப்புழா, தொடுபுழா,மீனச்சில் மற்றும் மணிமாலா ஆறு களில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. எனவே பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உளளன. பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே இரவுநேர பயணத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    சூறாவளி சுழற்சி காரணமாக கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும். இன்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், தெற்கு கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் கர்நாடாக கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படவில்லை.

    இதற்கிடையில் கேரளாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 39 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயத்தில் 838.7, வயநாட்டில் 266.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. மொத்தத்தில் கேரளாவில் 500.7 மி.மீட்டர் கோடை மழை பெய்துள்ளது.

    • மத்திய மற்றும் வடமாவட்டங்களில் மழையின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கும் காலத்திற்கு முன்பாக, நேற்றே தொடங்கி விட்டது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.

    வயநாடு, ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கண்ணூர் அய்யன்குன்று பகுதியில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. அங்கு 80 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. தற்போது பருவ மழையுடன் தென்கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி சுழற்சியும் உருவாகி உள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக மத்திய மற்றும் வடமாவட்டங்களில் மழையின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தெற்கு கோழிக்கோடு கடற்கரையில் நேற்று இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு கடல் நீர் அடங்கிய பீப்பாய்களை லாரியில் ஏற்றிய அஷ்ரப், அனில், ஷெரீப், முனாப், சுபைர், சலீம், அப்துல் லத்தீப் ஆகிய 7 பேர் மின்னல் தாக்கி காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோழிக்கோடு கடற்கரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    • வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவானது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    வேர்வை, புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்பட்டனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மோர், இளநீர், கரும்பு பால் போன்றவற்றை மக்கள் விரும்பி பருகினர். இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் கொழுத்த தொடங்கியது. இதனால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அஞ்சி இருந்த நிலையில் திடீரென பரவலாக மழை பெய்து தொடங்கியது.

    கிட்டத்தட்ட இரண்டு வாரமாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. வழக்கம் போல் காலை 8 மணி அளவில் வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி அடைந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு நேற்று ஈரோடு மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. வீடுகளில் மீண்டும் புழுக்கம் நிலவுகிறது. சாலைகளில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது.
    • காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.

    காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது. குளிர் மற்றும் மழை காரணமாக மக்கள் சீக்கிரம் தூங்கச் செல்கின்றனர். இதனை பயன்படுத்தி மர்மநபர்கள், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மழையின் போது வீடுகளுக்கு வெளியே குழந்தைகள் அழுவது, குழாயில் தண்ணீர் ஓடுவது போன்று வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டால் பொதுமக்கள், வீட்டு கதவுகளை திறக்க வேண்டாம்.

    அக்கம் பக்கத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்து உஷாராக வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.  அது கொள்ளையர்களின் நவீன யுக்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை நிறைவடைவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்கும், சூரியன் மறைவதை பார்ப்பதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் சூரிய உதயம் மற்றும் மறைவதை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒரு கடற்கரையில் குவிந்திருந்தனர்.

    ஆனால் இன்றும் சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையை கண்டுகளிக்க சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவியிலும் இன்று சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பத்மநாபபுரம் அரண்மனையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சொத்தவிளை பீச், முட்டம் பீச், சங்குத்துறை பீச், வட்டக்கோட்டை பீச் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நெல்லை:

    மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கடந்த 17-ந்தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி முதல் நேற்று வரை 10 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமை யர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,500 நாட்டு படகுகள் மூலம் மீன வர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை முழுமையும் காற்றின் வேகத்தால் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் கேரளாவில் இருந்து தான் மீன் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளதால் இனி விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடி, வேம்பார், பெரியதாழை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3,600 நாட்டுப் படகுகளில் 20 ஆயிரம் மீனவர்கள், 10 ஆயிரம் தொழிலாளர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    • தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.
    • பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 3 மாதத்தில் குமரி மாவட்டத்தில் 451.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 281.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் அதிகமான அளவு மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும், சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பாசன குளங்களும் மாவட்டம் முழுவதும் நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து இருந்த நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்தது.

    இதுபோல் தக்கலை, இரணியல், கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, திற்பரப்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.20 அடியாக இருந்தது. அணைக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.80 அடியாக உள்ளது. அணைக்கு 424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.43 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். இன்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குளித்து மகிழ்ந்தனர். மழையும் அங்கு பெய்து கொண்டிருந்த நிலையில் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    • மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது.
    • பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது. நேற்று காலை நாகர்கோவில், இரணியல் மற்றும் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் தூறலாகவே மழை இருந்தது. அதிக பட்சமாக முள்ளங்கினா விளையில் 16.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. அடையாமடைல் 6.2, குருந்தன்கோட்டில் 5.2, பெருஞ்சாணியில் 3.4 மில்லிமீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 44.97 அடி நீர்மட்டம் உள்ளது. மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.25 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 434 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.4 அடியாக உள்ளது.

    • தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும்.
    • கேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும்.

    தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெய்வது வழக்கம். கேரளாவை மையமாக வைத்து இந்த பருவ மழை தொடங்கும். கேரளாவில் 5 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவக்கூடும்.

    தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும்.

    மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும். அதன்படி தமிழகத்திலும் படிப்படியாக பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வப்போது கேரளாவில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், அதனுடைய தாக்கம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் இதனுடைய தாக்கமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது. அப்படி வெளியேறும் யானைகள் ரோட்டை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிகளில் வெயில் காரணமாக கடும் வரட்சி நிலவியது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கிடந்தது.

    அதே போல் வெயில் கொளுத்தியதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. இதனால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்பட்டது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வந்தது.

    இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதே போல் தொடர்ந்து வனப்பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை தூறு கொண்டே உள்ளது.

    இதனால் தாளவாடி வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதே போல் தாளவாடி வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பச்சை பசேலென இருக்கிறது.

    தொடர் மழையால் தாளவாடி வனப்பகுதிகளில் உள்ள வன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் வன விலங்குகளில் அங்கு உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் பெரும்பாலான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்தது. ஆனால் ஒரு சில யானைகள் மட்டுமே வனப்பகுதியை விட்டு வெளியேறினாலும் அவை அமைதியான முறையில் ரோட்டை கடந்து சென்று விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் தொல்லையின்றி சென்று வருகிறார்கள்.

    இதே போல் அநதியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகளிலும் யானைகள்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியேறி வந்தன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அந்த பகுதிகளில் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவது குறைந்து உள்ளது.

    ×