search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "review petition"

    எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் சசிகலா சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala
    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

    இந்தநிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் வி.கே.சசிகலா தரப்பில் நேற்று அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.



    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தபோது, பெரும்பான்மை என்னிடம் (சசிகலாவிடம்) இருந்தது. ஆனால் தேர்தல் கமிஷன் பெரும்பான்மையை கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்கியது. முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொண்டது.

    இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியின் விதிமுறைகளை சட்டவிரோதமாக மாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என 2 பதவிகளை உருவாக்கினார்கள். தேர்தல் கமிஷன் இதனையும் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொண்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்த எங்கள் புகார்களை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளவில்லை. டெல்லி ஐகோர்ட்டும் மேற்கண்ட அம்சங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

    கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தையும் தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை.

    எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala 
    சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராடிய நிலையில், கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், இன்று தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பத்மகுமார், சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தேவசம் போர்டின் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தை அணுக முடிவு எடுத்துள்ளதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதன் மூலம், போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, கேரளாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. #Sabarimala #KeralaGovt #DevaswomBoard
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை கேரள அரசும் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் கோர்ட்டின் தீர்ப்பை அரசு அமல்படுத்தும் என்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரும் தேவசம் போர்டு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ஐயப்ப பக்தர்கள், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், சபரிமலை தந்திரிகள் போராட்டத்தில் குதித்ததால் சபரிமலை விவகாரம் தீவிரம் அடைந்தது.

    இதனால் கேரள அரசு சார்பில் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுத்து விட்டு சமரச பேச்சு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்று கூறி பேச்சு வார்த்தையை மன்னர் குடும்பத்தினர் உள்பட அனைவரும் புறக்கணித்து விட்டனர்.

    அடுத்த கட்டமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 16-ந்தேதி நடந்த இந்த கூட்டத்தில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர், சபரிமலை கோவில் தந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    சுப்ரீம் கோர்ட்டில் உடனே மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீது தீர்ப்பும் வரும் வரை ஏற்கனவே உள்ள நடைமுறையை சபரிமலையில் பின்பற்ற வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் சபரிமலை விவகாரத்தில் நடைபெற்று வரும் போராட்டமும் கேரளாவில் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு எந்த முடிவையும் இந்த பிரச்சினையில் சுயமாக எடுக்கலாம் என்றும் அந்த முடிவை கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.

    இந்த பிரச்சினையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தயார் என்று தேவசம் போர்டு கூறி உள்ளதை வரவேற்பதாகவும், எந்த பிரச்சினையும் இன்றி ஐயப்பனை பக்தர்கள் வணங்கிச் செல்ல தேவசம் போர்டு எடுக்கும் முடிவை வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

    இதுபற்றி தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும் போது, மாநில அரசு தேவசம் போர்டு முடிவில் தலையிடாது என்று அறிவித்துள்ளது. தேவசம் போர்டு சுயமாக முடிவு எடுக்கலாம் என்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை கோவில் தந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் கேரளாவில் நடைபெற்று வரும் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். #Sabarimala #KeralaGovt #DevaswomBoard

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaProtests
    புதுடெல்லி:

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என கூறிவிட்டது. எனவே, அவசர சட்டமாவது இயற்றி இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டம் என தொடர்ந்து இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களை அங்கு செல்ல விடாமல் போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தடியடியும் நடத்தப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள அனைத்து பிராமணர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.



    அதில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் ஏற்கனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SabarimalaVerdict #SabarimalaProtests #BrahminAssociation #ReviewPetition
    மகாத்மா காந்தி கொலை சதி பற்றி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் ஆராய்ச்சியாளர் ஒருவர் மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். #MahatmaGandhi #ReviewPetition #SupremeCourt
    புதுடெல்லி:

    தேசப்பிதா மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா மாளிகையில், 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் நாதுராாம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த படுகொலையில், மிகப்பெரிய அளவில் வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டதாக கூறி, இது தொடர்பாக முழுமையாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரும், அபினவ் பாரத் அறக்கட்டளையின் அறங்காவலருமான பங்கஜ் குமுத்சந்திர பத்னிஸ், கடந்த ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கை அப்போது நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.



    இந்த நிலையில் அவர் புதிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் படியேறி வழக்கு தொடுத்து உள்ளார்.

    அதில், மகாத்மா காந்தி உடலில் இருந்த காயங்கள் தொடர்பான படங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை மற்றும் சில புத்தக தகவல்களை புதிய ஆதாரங்களாகக் கொண்டு மகாத்மா காந்தி படுகொலையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார்.

    லாரன்ஸ் டி சல்வேடார் எழுதி 1963-ம் ஆண்டில் வெளியான ‘காந்தியை கொன்றது யார்?’, மவுண்ட் பேட்டன் பிரபுவின் மகள் பமீலா மவுண்ட் பேட்டன் எழுதி வெளியான ‘இந்தியா நினைவூட்டியது’ ஆகிய 2 புத்தகங்களில் உள்ள தகவல்களை வழக்கில் அவர் ஆதாரமாக சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த புத்தகங்கள் மூலம், மகாத்மா காந்தி கொலை சதியில் அப்போது உயர்ந்த அதிகாரத்தில் இருந்த நபர் அல்லது நபர்கள் உடந்தையாக இருந்ததாக முடிவுக்கு வர முடிகிறது என கூறி உள்ளார்.

    மேலும், மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாளில் முக்கிய நாளிதழ் ஒன்றில் வெளியான படத்தில் அவரது நெஞ்சில் 4 காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும், அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் அறிக்கையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #MahatmaGandhi #ReviewPetition #SupremeCourt 
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு பகுதியை கேரளா அரசின் பாணசுர சாகர் என்ற திட்டத்தின் கீழ் வரக்கூடிய குத்தியாடி திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று சீராய்வு மனுவை கேரளா அரசு மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தங்கள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நேற்று விசாரித்தனர். ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    ×