search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi birthday"

    • கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன.
    • என் மீதும், என் செயல்மீதும், வகிக்கும் பொறுப்பு மக்கள் சேவைக்கு எனும் என் உளப்பாங்கின் மீதும் கொண்ட நம்பிக்கையினால் இந்த வரலாற்றுச் சிறப்பைக் கருணாநிதி அன்று செய்தார்.

    தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள் எனும் தத்துவச் சொற்றொடர் உண்மைதான் என்று என் உள்ளம் உணர்த்துகிறது. திராவிட வரலாற்றின் திசைகளை வென்ற சூரியன், காவியம் போற்றும் நாயகர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியை நினைக்கிற போதெல்லாம் என் நெஞ்சம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்குகிறது.

    தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாகவும் வாய்க்கப்பெற்று, வளர்ந்து, திராவிடப் புரட்சியின் சித்தாந்தமாக நிலைபெற்றிருக்கிற கருணாநிதியின் சாதனைகளையும், தமிழ்ச்சமூகத்திற்காய் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற சரித்திர சட்டங்களையும் ஏட்டில் உரைக்க முடியாது. அவரது இமயச் செயல்திட்டங்களை எண்ணிக்கையில் அளக்க முடியாது.

    எழுத்தையும், பேச்சையும், திராவிடத் திசைகள் எங்கும் கந்தக வெடிமருந்தாய் காட்சிப்படுத்தியவர். அடிமையின் கயிற்றை அறுத்து, தமிழினத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சிப்படுத்தியவர். அவரால் நான் கற்ற, பெற்ற அனுபவப் புதையல்களும், பொதுவாழ்வின் லட்சியக் கனவுகளும் ஏராளம், ஏராளம். அவர் பல்கலைக்கழகமாய் இருந்தார். அதை தூரத்தில் நின்றே தரிசிக்கும் ஒரு ஏழைச் சிறுவனாய் நான் இருந்தேன். அவர் சூரிய விளக்காய் சுடர்விட்டு ஒளிர்ந்தார். அந்த வெளிச்சக் கதிரில் ஒரு விதைபோல் நான் கண்விழித்தேன். அவர் வானமாய் இருந்தார். ஒரு துண்டுமேகம் போல் நான் அவர் தோள்பற்றிக் கொண்டேன்.

    கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன. அவர் ஒரு வேட்டிகட்டிய தாய்போல் எம்மை அரவணைத்தார். கண்டிப்பு நிறைந்த தந்தைபோல் நான் அரசியல் தொண்டாற்ற தடம் அமைத்தார். 1974-ம் ஆண்டு சைதாப்பேட்டை தியாகி அரங்கநாதன் சுரங்கப்பாதையை திறந்து வைப்பதற்காக கருணாநிதி வருகை தந்திருந்தார். 15 வயது சிறுவனாக இருந்த நான் என் அன்பு தந்தையுடன் அந்த நிகழ்வைக் கண்டுகளிக்கச் சென்றிருந்தேன். கட்டுக்கடங்காத கூட்டம் கடல்போல் ஆர்ப்பரித்தது.

    தந்தையின் விரல்பிடித்து ஒரு ஓரமாய் நெரிசலில் நின்றபடி, கருணாநிதியின் திருமுகம் காண ஆவலாய் நின்றிருந்தேன். என் கண்கள் கருணாநிதியை கண்டது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினேன். கருணாநிதி கையசைத்த காட்சி என் கருத்தில் பதிந்து மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றியது. அவரின் அந்த 'கையசைப்பு' கழகப் பணி செய்ய வா! தம்பி! என்று என்னை கட்டளை இட்டதாய் அந்த சிறுவயதிலேயே நான் எண்ணிக்கொண்டேன். அந்த மாமேதையின் புன்முறுவல் என்னை மக்கள் பணி செய்ய வா! என்று அழைத்ததாய் நான் உள்வாங்கிக்கொண்டேன்.

    பிஞ்சு வயதில் பசுமரத்தாணிபோல் என் நெஞ்சில் பதிந்த இந்த நிகழ்வுதான் கருணாநிதியின்பால், இன்றைய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின்பால் ஈர்க்கப்பட்டு அரசியல் தொண்டுக்கு என்னை அணியமாக்கியது என்றால் அதில் மிகையொன்றுமில்லை.

    சமத்துவமும், சமூகநீதியும் இரு கண்களாய் ஏற்று, ஏழை எளியவர் ஏற்றம் பெற, இன்னலுற்ற தமிழ்நாடு மாற்றம் பெற, நொடிதோறும் உழைத்தவர் நம் கருணாநிதி. தம்பிகளைத் தாயாகத் தாங்கவும், தடந்தோள் கொண்ட கழக வீரர்களை மேன்மை பெற வைத்து அவர்தம் துயர்கள் நீங்கவும், நெடுங்காலம் பாடாற்றிய நெஞ்சுக்கு நீதியின் நிறைகுடம் கருணாநிதி.

    கருணாநிதியின் விந்தைமிகு ஆற்றலுக்கு என்னளவில் நிகழ்ந்த மற்றொரு சம்பவமும் என் மனதில் நிழலாடுகிறது. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான ஓர் அற்புதக் காவியம் 'கண்ணம்மா' என்கிற திரைப்படம். அப்படத்தை இயக்கியவர் பாபாவிக்ரம். 'கண்ணம்மா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இளைஞனே இளைஞனே எழுந்து வா...' எனும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் பாடல் காட்சியில் வெண்சீருடை அணிந்த 200 இளைஞர்களை அதில் பங்கேற்க செய்ய சென்ற நேரத்தில், நம்மையும் இறுதியாக வில்லன் கதாபாத்திரத்தை கைது செய்யும் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுக்கொண்டபடி நான் ஒப்புக்கொண்டேன்.

    மறுநாள் பொங்கல் திருநாளில் கருணாநிதியை பார்த்து வாழ்த்து பெற அவர் இல்லம் சென்றபோது, நான் திரைப்படத்தில் நடித்த செய்தியறிந்த அவர் நான் பேசி நடித்த வசனங்களைச் சொல்லச் சொன்னார். நானும் வசனங்களை ஒப்பித்தேன். ஒப்பித்து முடித்தவுடன் 'இடையில் ஒரு வரியை விட்டுட்டியே' என்று சொல்லி விடுபட்ட வரியைச் சொன்னார். நான் ஆச்சரியத்தில் உரைந்து போனேன். 4, 5 மாதங்களுக்கு முன் தன்னால் எழுதி வழங்கப்பட்ட வசனத்தில் விட்டுப்போன வரியைக்கூட இன்னமும் நினைவில் வைத்து திருத்தும் அவரது நினைவாற்றல் கண்டு நெஞ்சம் வியந்து போனேன்.

    அதுமட்டுமன்று அப்படத்தின் வசனத்தையும் நானே 'டப்பிங்' பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நான் ஒப்புக்கொண்டு விடைபெற்று என் வாகனத்தை நோக்கி நடந்து சென்றபோதே, இயக்குனர் பாபாவிக்ரம் என்னை அலைபேசியில் அழைத்து, 'வசனத்தை தாங்களே பேசி விட வேண்டும்' என கருணாநிதி சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்து, ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வரச்சொன்னார். அப்போது வியப்பில் திகைத்துப் போனேன். அவருக்கு கிடைக்கும் கணங்களிலும் செயலையும், எடுத்த காரியத்தையும் முடிக்கும் கருணாநிதியின் ஆற்றலை எண்ணி பெருமிதம் அடைந்தேன். அதுவே எனக்கான தாரக மந்திரமாகவும் இன்றுவரை ஏற்று முடிந்தவரை செயலாற்றி வருகிறேன். கருணாநிதியின் உறுதிக்கும், ஒப்பிலா ஆற்றலுக்கும், தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்புக்கும் இன்னொரு நிகழ்வையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருள் பொதிந்ததாய் இருக்கும் எனக் கருதுகிறேன்.

    'நான் மேயராக பொறுப்பேற்று 2, 3 மாதம் முடிந்திருந்த நிலையில் 99 கவுன்சிலர்கள் புகாருக்கு உட்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் ஜெயலலிதா அன்று ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை மாநகராட்சி மன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றாமல் இருப்பது நல்லது என்று எடுத்துரைத்திருந்தனர்.

    இது சம்பந்தமாக பா.ஜ.க.வின் அன்றைய மாநில தலைவர் இல.கணேசன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிக்கை விடுத்திருந்தனர். அதைக் கண்ட கருணாநிதி உடனடியாக 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்ய அறிவுறுத்தினார். அதன்படி நான் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்துவிட்டு, அன்று மாலை கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது எனக்கு ஆறுதல் சொன்ன அவர், மீண்டும் அப்பொறுப்புக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை தாய் உள்ளத்தோடு கூறினார். அப்போது அங்கிருந்த வக்கீல் 'இல்லை, இல்லை அது சாத்தியமில்லை அய்யா. ஏற்கெனவே தளபதி மு.க.ஸ்டாலினை மனதில் வைத்து இரு சட்ட மசோதாக்களை ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார். அதில் ஒன்று, ஒருவர் 2 முறை பதவி வகிக்க முடியாது என்றும், இன்னொன்று இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்கின்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    உடனடியாக குறுக்கிட்ட கருணாநிதி, அதனால் என்ன?, நாமும் சட்டத்தை திருத்தலாம் என்றுக்கூறி உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து நான் இரண்டாவது முறை மேயர் பொறுப்புக்கு நிற்பதற்கான வாய்ப்பை அளித்து, தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றி பெற்றபின், எம்மை இரண்டாம் முறையாய் 'மேயர் பொறுப்பில்' நியமித்து அழகுப் பார்த்தார்.

    என் மீதும், என் செயல்மீதும், வகிக்கும் பொறுப்பு மக்கள் சேவைக்கு எனும் என் உளப்பாங்கின் மீதும் கொண்ட நம்பிக்கையினால் இந்த வரலாற்றுச் சிறப்பைக் கருணாநிதி அன்று செய்தார். எந்த வசதி வாய்ப்பும், அரசியல் பின்புலமும் இல்லாத வறுமைப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்பைச் சார்ந்த எனக்காக அவர் செய்த இந்த சரித்திர நிகழ்வு என் வாழ்நாள் எல்லாம் நினைத்துப் பெருமை கொள்ளத்தக்கதாகும்.

    இவை மட்டுமன்று கருணாநிதியோடும், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடும் நான் கற்றறிந்த சேதிகளும், நிகழ்வுகளும் ஆயிரம், ஆயிரம் உண்டு. அவை எல்லாம் இன்னும் எம்மை களப்பணியாற்ற, மக்கள் பணி செய்ய முடுக்கி விடும் கருவிகளாய் எண்ணி செயல்படுவேன்.

    14 வயதில் தந்தை பெரியாரின் கோட்பாட்டுக் கோட்டைக்குள் அடியெடுத்து வைத்து, திருவாரூர் தெருக்களில் கொடியேந்தி கொள்கைக் களமாடிய ஓய்வறியாச் சூரியன் கருணாநிதிக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு சாதனைகளை போற்றும் வண்ணம் அமைந்திருக்கிறது.

    5 முறை நாடாண்ட அருந்தமிழ்ச் சூரியன் கலைஞர் கருணாநிதியின் அளப்பரிய செயல்களை, அரசியல் மேன்மையை, ஆளுமையை, எழுத்தாற்றலை, இதிகாசம் போற்றும் சாதனைகளை, வரலாற்று முன்னெடுப்புகளை நினைவுகூரும் இந்த ஆண்டில், அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதிலும், அவர் அமைத்துத் தந்த 'திராவிட இயல்' பாதையில் பார் போற்றப் பயணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்திட்டங்களை நிறைவேற்றவும் எப்போதும் உறுதுணையாகவும், சிறு துரும்பாகவும் இருப்பேன் என இந்த நூற்றாண்டு தொடக்க நாளில் சூளுரைக்கிறேன். வாழ்க கலைஞர் கருணாநிதி புகழ்! வெல்க சமூகநீதி!! ஓங்குக என்றென்றும் திராவிட மாடல் ஆட்சி!!!

    - மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

    • உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள், தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனையும் தட்டி எழுப்பின.
    • தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓடி... ஓடி... அவர் உழைத்தபோது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார்.

    கலைஞர்...

    தமிழ் பேசும் மக்கள் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ... அங்கெல்லாம் ஒலிக்கும் மந்திர சொல். தமிழ்நாட்டின் அரசியல் வரலாறை, இவர் பெயரைக் குறிப்பிடாமல் யாருமே எழுத முடியாது.

    அரசியலில் கருணாநிதி அளவுக்கு ஆழம் கண்டவர்கள் இந்த உலகிலேயே நிச்சயமாக யாரும் கிடையாது. அரசியலில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் வரலாறாக மாறியது. அரசியல் ரீதியிலான அவரது கொள்கை முடிவுகள், அவரை நாடே போற்றும் "ராஜதந்திரி" என்று பேச வைத்தது.

    அரசியல் வானில் அவர் இமயம். அந்த இமயத்தை எந்த ஒரு சக்தியாலும் இன்று வரை நெருங்க இயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    அவர் காட்டிய வழியில் தமிழகம் மிளிர்ந்தது. இன்று இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தனித்துவம் கொண்டதாக உள்ளதென்றால், அதற்கு கருணாநிதி செய்த அளப்பரிய சேவைகளே அடித்தளமான காரணமாகும்.

    அந்த அடித்தளம் இருக்கும் வரை அரசியலில் கருணாநிதி பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    தமிழ் இலக்கிய உலகம், இவர் எழுத்துக்களை தவிர்த்து விட்டு, நிச்சயம் இயங்க முடியாது. கை வலிக்க... வலிக்க அவர் எழுதினார். அந்த எழுத்துக்கள் எல்லாம் பூமாலையாக மாறி மணம் வீசின, வீசிக் கொண்டிருக்கின்றன.

    அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கியபோது அவை கருணாநிதியின் உயரத்தை விட அதிகமாக இருந்தன. இதில் இருந்தே அவர் எழுத்தின் ஆற்றலை உணரலாம்.

    உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள், தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனையும் தட்டி எழுப்பின. இது தமிழக தலைவர்கள் யாருமே செய்ய முடியாத சாதனை.

    காலத்துக்கு ஏற்ற கற்பனை வளம், கட்டுக்கடங்காத வேகம் ஆகியவற்றை அவரது ஒவ்வொரு வரியிலும் காண முடியும். கலைஞரின் பலமே இந்த எழுத்து என்றால் மிகையாகாது.

    இலக்கியம் தவிர திரை உலகில் அவர் செய்த சாதனைகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. எப்போதும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பம்பரமாக சுழன்ற அந்த மனிதருக்கு எப்படி இப்படி பல துறைகளில் சகலகல வல்லவனாக முத்திரை பதிக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியம் அகல நீண்ட நேரம் பிடிக்கும்.

    அரசியல், சினிமா, பத்திரிகை என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கலைஞரின் சாதனை... இன்று கலங்கரை விளக்காக மாறி நிற்கிறது.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓடி... ஓடி... அவர் உழைத்தபோது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார்.

    வயோதிகம் காரணமாக அவர் சில காலம் அமைதியாக இருந்தார். அளவற்ற அருமைகளையும் அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆழ்கடல் எப்போதுமே அமைதியாகத்தான் இருக்கும். கலைஞரும் அத்தகைய பெருமை பெற்றவர்.

    94 வயது காலம் வாழ்ந்த அந்த பன்முக வித்தகருக்கு எத்தனையோ தனித்துவமான சிறப்புகள் அமைந்திருந்தாலும், அவர் 'தமிழாக வாழ்ந்த தலைவர்' என்ற சிறப்பு மணி மகுடமாக உள்ளது. தமிழ் அவரிடம் குறைவின்றி நிறைந்திருந்தது. அதனால்தான் அவர் தமிழோடு ஆடினார், பாடினார், விளையாடினார், தமிழையே மூச்சாக சுவாசித்தார். கடைசி மூச்சு உள்ள வரை தமிழாகவே வாழ்ந்தார்.

    அவர் தமிழாக வாழ்ந்ததால்தான் இன்றைய அறிவியல், மாபெரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப புரட்சிக்கு மத்தியிலும் இளைய தலைமுறையினர் தமிழ் உணர்வுகளுடன் திகழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்தது. இந்திய அரசியல் தலைவர்களில், எந்த தலைவராலும் நினைத்துப் பார்க்க முடியாத, ஏற்படுத்த முடியாத நிகரற்ற சாதனை இது.

    இந்த மாபெரும் சாதனையின் பின்னணியில் கலைஞரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு... முயற்சி, முயற்சி, முயற்சி, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை அடங்கியுள்ளது. இவையெல்லாம் ஒன்றிணைந்து கொடுத்த பலன்களால் தமிழ் சமுதாயத்தின் தடமே மாறியது. இதை போற்றும் வகையில்தான் கலைஞருக்கு சட்டசபையில் படத்திறப்பு விழா நடத்தப்பட்டது.

    இது கலைஞருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை.

    தமிழ் வளர்ச்சிக்கு செய்த தெண்டு

    தமிழ்நாட்டில் தமிழ் மொழி செழுமை பெற கருணாநிதி செய்துள்ள சேவை ஏராளம். வடமொழி ஆதிக்கத்தை முறியடித்த அவர் தமிழர்களோடு தமிழ் இரண்டற கலப்பதற்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். அதோடு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு சிறப்புகளை மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வதற்காக அடையாள சின்னங்களை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றிய ஒரு கண்ணோட்டம்.

     * மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடலை 1970- ம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்தார்.

    * 1974-ம் ஆண்டு "அகர முதலி" திட்டத்தை கொண்டு வந்து தமிழ்ச்சொற்கள் தொகுப்பதற்கு வழிவகுத்தார்.

    * வயது முதிர்ந்த தமிழர்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    * சென்னை பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழி கல்வியை தமிழில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

    * மாவட்டங்களில் அரசு அருங்காட்சி யகங் கள் தொடங்கி பண்பாட்டு பொருட்களை பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

    * ஆசியவியல் நிறுவனத்தை தொடங்கி தமிழியல் ஆய்வுக்கு உதவினார்.

    * தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மொழி கருத்தரங்குகள் நடத்தினார்.

    * தமிழ்நாடு முழுவதும் இசைப்பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டார்.

    * அய்யன் திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என அறிஞர்கள் வரையறுத்த முடிவின்படி, 1971- ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசிதழிலும் திருவள்ளுவராண்டு எண்ணை குறிக்கச் செய்தார்.

    * சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். குமரிமுனையில் உலகம் வியக்குமாறு 133 அடி உயர அய்யன் திரு வள்ளுவர் சிலை நிறுவினார்.

    * ஆண்டு தோறும் பொங்கல் விழாவிற்கு அடுத்த நாளில் திரு வள்ளுவர் நாள் கொண்டாடும் வழக்கத்தை கொண்டு வந்தார்.

    * தைத்திங்கள் முதல் நாளே, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் என சட்டமியற்றி நடைமுறைப்படுத்தி தமிழ் பண்பாட்டு பெருமைகளை தரணியில் உயர்த்தினார்.

    * பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் வடித்தார்.

    * தமிழ் மன்னர்களுக்கும், புலவர்களுக்கும், சான்றோர் களுக்கும் திரு உருவச் சிலைகள், மணி மண்டபங்கள், நினைவிடங்கள் அமைத்தார்.

    * தமிழ்மொழி வளர்ச்சிக் கெனத் தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

    * பள்ளிகளிலும், கல்லூரி களிலும் முதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுவதுடன் இன்று தமிழகத்தில் உள்ள 53 ஆயிரத்து 548 பள்ளிகளின் வாயி லாக பயிலும் 1 கோடியே 49 லட்சம் மாணவ-மாணவி யரில் ஏறத்தாழ 75 விழுக்காடு, அதாவது 1 கோடியே 10 லட்சம் மாணவ- மாணவியர் தமிழ் வழிக் கல்வி கற்கும் சூழ்நிலைகளை மேலும் மேம்படுத்திட, பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் கொண்டு வந்தார்.

    * தமிழறிஞர்களை ஊக்குவித்திட தமிழறிஞர்களின் பெயர்களில் அரசு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

    * பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர், திரு.வி.க., மறைமலை அடிகள், புலவர் குழந்தை முதலான 110 தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கினார்.

    * ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதுவதற்காக தமிழ் மொழி வரலாறு நூல் எழுதி வெளியிடச்செய்தார்.

    * இயல், இசை, நாடக மன்றம் உருவாக்கி நலிந்த கலைஞர்களுக்கு உதவ வைப்பு நிதி ஏற்படுத்தினார்.

    * புதிய இலக்கண நூலை வல்லுனர் குழு ஒன்று அமைத்து எழுதி வெளியிடச்செய்தார்.

    * உலக தமிழர் அமைப்புகளை ஒருங்கி ணைத்தார்.

    * மொரிசியஸ், சிங்கப்பூர், யாழ்ப்பாணம் உள்பட 22 நாடுகளுக்கு தமிழ் நூல்களை வழங்கினார்.

    * உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதிகளை வாரி வாரி வழங்கினார்.

    * வாகனங்களில் பதிவு எண் பலகைகளில் தமிழில் எழுதிக்கொள்ள அனுமதித்தார்.

    * கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் பட்டியலை தமிழில் தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

    * நாடகக் கலை களஞ்சியம், தமிழ் இசை களஞ்சியம், மருத்து கலை களஞ்சியம் ஆகியவற்றை தமிழில் எழுதி வெளியிடச் செய்தார்.

    * ரூ.10 லட்சம் செலவில் குழந்தைகளின் கலை களஞ்சியம் தயாரிக்க செய்தார்.

    * மெட் ராஸ் என்னும் பெயரை சென்னை என 30.9.1996 அன்று மாற்றி னார்.

    * தமிழ் தட்டச் சுக்கள் பரவ செய்தார்.

    * தமிழ் சுருக்கெழுத்து நூலை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டார்.

    * தமிழ் வளர்ச்சி துறைக்கு கூடுதல் அலுவலர்களை நியமித்தார்.

    * சென்னை அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி வளாகம் ஏற்படுத்தினார்.

    * தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவர 15 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.64 லட்சம் கொடுத்தார்.

    * தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    * மருந்து சீட்டுக்களை தமிழில் எழுத உத்தரவிட்டார்.

    * சிறப்பு சொல் துணை அகராதி கொண்டு வந்தார்.

    * தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கவும், ரெயில்களுக்கு தமிழில் பெயர் சூட்டவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றார்.

    * வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு செய்து தமிழர்களின் பாரம்பரிய சிறப்பை வெளிப்படுத்த உதவினார்.

    * விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி நூல் வெளியிட உதவினார்.

    * சேலம், தஞ்சை, விருதுநகர், காஞ்சீபுரத்தில் மண்டல கலை பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தினார்.

    * மழலையர் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக சொல்லித்தர உத்தரவிட்டார்.

    * மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார்.

    * தமிழக வரலாறு முழுவதையும் ஒரே தொகுதியாக வெளியிட்டு சாதனை படைத்தார்.

    * வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதற்காக 515 சொற்கள் அடங்கிய நூல் வெளியிட்டார்.

    * கொல்கத்தா, மும்பையில் தமிழ் மையம் அமைத்தார்.

    * திருவனந்த புரத்தில் நூலக கட்டிடம் ரூ.10 லட்சம் செலவில் கட்டினார்.

    * மலேசிய பல்கலைக் கழகத்தில் ரூ.50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை நிறுவ உதவினார்.

    * வானொலியில் நாளொன்று பிறக்க சொல்லொன்று அறிவோம் என்ற நிகழ்ச்சியை தொடங்க உறுதுனையாக இருந்தார்.

    * தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்த சிவலிங்க னாருக்கு நிதியுதவி செய்தார்.

    * மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்ட உதவினார்.

    * தமிழ் அறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடினார்.

    * தமிழ் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரது குடும்பங்களுக்கு நிதியுதவி செய்தார்.

    * தமிழ் அறிஞர்களின் பெயரில் விருதுகள் உருவாக்கினார்.

    * மாணவ-மாணவிகளுக்காக குறள் பரிசு அறிமுகம் செய்தார்.

    * சிறந்த படைப்பிலக்கிய செம்மல் ஒருவருக்கு குறள் பீட விருது ரூ.2 லட்சம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    * கல்வி மொழி வளர்ச்சிக்கு உதவும் இளம் எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

    * அரசு அறிவிப்பு பலகைகளில் திருக்குறள் எழுத உத்தரவிட்டார்.

    * தமிழ் அறிஞர்களின் வீடுகளை நினைவகங்களாக மாற்றினார்.

    * தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்களுக்கு சிலை அமைத்தார்.

    * காந்தி மண்டபம் வளாகத்தில் மொழிப்போர் காவலர்களுக்காக மணி மண்டபம் கட்டினார்.

    * தமிழில் ஆகம நூல்கள் வெளியிட உத்தரவிட்டார்.

    * தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக தமிழ் போற்றி நூல்களை வெளியிட செய்தார்.

    * தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டார்.

    * தமிழில் சிவவேள்வி நடத்திட அறிவுறுத்தினார்.

    * தமிழ்நாடு முழு வதும் 75 கோவில் களில் திருக்குறள் வகுப்புகள் நடத்த புதிய திட்டம் கொண்டு வந்தார்.

    * 1999-ல் உலக இணைய தமிழ் மாநாடு நடத்தினார்.

    * கணினி தமிழ் வளர்ச்சிக்கு உலக இணைய தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.

    * தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு முத்திரை சாதனையாக தமிழ் செம்மொழி என்பதை மத்திய அரசு ஏற்று அறிவித்திட செய்தார்.

    * செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையிலேயே அமைக்கின்ற முயற்சியில் வெற்றி பெற்றார்.

    * வெளிநாடுகளிலும், இந்திய அளவிலும் புகழ் பதித்துள்ள தமிழ் அறிஞர்களுக்கு குடியரசு தலைவரின் "குறள் பீட விருது", "தொல் காப்பியர் விருது" ஆகியவை வழங்கிட வகை செய்தார்.

    * செம்மொழித் தமிழின் சிறப்பினை நிலை நாட்டிடும் வகையில், கோவை மாநகரில் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் நோக்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்தினார்.

    காலத்தை வென்றவர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    காலத்தை வென்றவர் தலைவர் கலைஞர்! சூரியன் உதிக்கும் முன் விழித்தெழுந்து, ஓயாது உழைக்கும் ஓய்வறியாச் சூரியன் தலைவர் கலைஞர்.

    அரசியலில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். தனக்கெனத் தனி பாணியை எழுத்திலும், பேச்சிலும் வகுத்துக் காட்டியவர்.

    தலைவர் கலைஞர், ஈடுஇணையற்ற பேச்சாளர், கட்டுரையாளர், வலிமையான எழுத்தாளர், சிறந்த கவிஞர் பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், இலக்கியப்படைப்பாளி, திரைப்படத்துறை வித்தகர், சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாதி, நூலாசிரியர்-அரசியல் ஞானி-மிகச் சிறந்த நிர்வாகி எனப் பல துறைகளில் சிறந்து விளங்குபவர். அவர் தொடாத துறையில்லை. தொட்டுச் சிறப்படையாத துறையும் இல்லை.

    "தன் பிறந்த நாள்-தன் திருமண நாள்-தான் முதன் முதலாக அருமைத் தலைவர் அண்ணாவைச் சந்தித்தநாள்-மொழிகாக்கும் போரில் முதன் முறை யாகச் சிறையேகிய நாள், அத்தனையும் தனக்கு இன்பம் தருபவை. நினைத்து மகிழத்தக்கவை" எனத் தலைவர் கலைஞர் அவர்களே, குறிப்பிட்டுள்ளார்கள்.

    தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது, "எனக்குத் தாய், தந்தை, மனைவிகள், பிள்ளைகள், சகோதரர்கள் என்றிருந் தாலும், அவர்களில் சிலர் என்னை விட்டுபிரிந்தாலும், அல்லது என்னுடன் வாழ்ந்தாலும் நான் குடும்பம் என்று கருதுவது என்னையும் ஓர் அங்கமாகப் பிணைத்துக்கொண்டிருப்பதும், இந்த இயக்கம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை" என நெஞ்சுக்கு நீதி கட்டுரையிலே தலைவர் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

    "The Pen is Mightier than the Sword" என்பார்கள். தலைவர் கலைஞர் அவர் களின் பேனா முனை, வாள் முனையை விட வலியது. அதனால் தான் கழக உடன் பிறப்புகள் தலைவரிடம் கட்டுண்டு கிடக்கின்றனர்.

    வாள் முனை, பேனா முனை என்ற வலிமையான சக்தியையெல்லாம் தன் நாவன்மையால் வென்று காட்டியவர் தலைவர் கலைஞர். தோல்வியே காணாத வரலாறு படைத்தவர் தலைவர் கலைஞர். ஐந்தாவது முறையாக, தமிழக முதல்- அமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்று, அதில் இந்தியாவுக்கு பாராட்டு கின்ற தலைவராக கலைஞர் விளங்கிக்கொண்டிருக்கிறார்.

    "நான் கழகத்தின் வரலாற்றின் முற்பகுதியை எழுதுகிறேன். அதன் பிற்பகுதியை தம்பி கருணாநிதி தொடர்வார்" எனத் தீர்க்கதரிசி போல் பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே குறிப்பிட்டார்.

    கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள்:-

    * அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

    * ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

    * இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

    * வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

    * மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.

    1970-ம்அண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் தலைவர் கலைஞர் இந்த முழக்கங்களை பிரகடனம் செய்தார். அவற்றைச் செயல்படுத்திக்காட்டி வெற்றி கண்டவர் தலைவர் கலைஞர்.

    இந்திய வரலாற்றில் கண்டிராத அளவில் தன் நெடிய பயணத்தில் சட்டமன்றப்பொன்விழா கண்டவர் தலைவர் கலைஞர்.

    80 ஆண்டு காலத்திற்கும் மேலாக சமூகப்பணி, பொதுப்பணிக்கு சொந்தக்காரர். 70 ஆண்டு காலம் கழகத்தைக் கட்டிக்காத்து வருகின்ற பெருமைக்குரியவர். 60 ஆண்டு காலம் சட்டமன்றப் பணியாற்றியவர்.

    சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தி.மு.கழகத்தலைவராக வீற்றிருப்பவர்.

    13 முறை சட்டமன்ற உறுப்பினர், 18 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நடத்துபவர். 5-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பெருமையும் பெற்றவர். தேர்தல்களில் வெற்றி மட்டுமே கண்டவர்-தோல்வியே காணாத வரலாறு படைத்த தலைவர்.

    பேரறிஞர் அண்ணா ஏற்றிய லட்சிய தீபத்தைக் கையில் ஏந்தி, நாட்டில் அரசியல் நெருக்கடிகள் பல ஏற்பட்டபோது அந்த லட்சிய தீபத்தை அணையாது காத்து, தமிழ் மக்களை வழி நடத்திச் செல்லும் தகுதிமிக்கத் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் தலைவர் கலைஞர். கழகம் எனும் இயக்கத்தை சிதறாமல், கட்டிக்காத்து வழிநடத்தி வருபவர் தலைவர் கலைஞர் ஆவார்.

    வள்ளுவர் கோட்டம்- குமரியில் வான்புகழ் வள்ளுவர்க்குச்சிலை-இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியவர். தனது ஆட்சிக் காலத்தில் சரித்திரச் சாதனைகளாகப் படைத்து வருகிறார். புதிய வரலாறு படைத்தவர்! ஏழைகளின் ஏந்தல்! வருங்காலம் வாழ்த்தும்! எக்காலமும் வாழ்வார்!

    தலைவர் கலைஞர் அடியொற்றிக் கடமையாற்றிட உறுதி ஏற்போம்.

    (கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் முன்பு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது)

    கலைஞரைக் கவர்ந்த ஐந்து

    தமிழ்நாட்டின் நிகரற்ற முதல்வராக திகழ்ந்த டாக்டர் கலைஞருக்கும், 5-ம் எண்ணில் வருகிற பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைஞரின் வெற்றிப் பின்னணியில் உள்ள பெரும்பாலான பெயர்களின் கூட்டுத் தொகை எல்லாமே ஐந்தாகவே வரும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    தாயைத் தெய்வமாகக் கருதும் கலைஞரின் அன்னையின் பெயர் 'அஞ்சுகம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞரின் பெயர் 'கருணாநிதி'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    கலைஞர் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் 'குடியரசு'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் திராவிட கழகத்தில் இருந்து விலகிய ஆண்டு 1949 (1+9+4+9=23=2+3=5) இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி 'குளித்தலை'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி 'தஞ்சாவூர்'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    தி.மு.க. தேர்தல் நிதிக்காக அவர் நடத்திய நாடகம் 'காகிதப் பூ'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    தி.மு.க. அமோக வெற்றி பெற்று கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆன ஆண்டு 1967. இதன் கூட்டுத் தொகையான 23&ன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    கணக்கு கேட்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். வகித்த பதவி 'பொருளாளர்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    தி.மு.க. அமைச்சரவை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆண்டு '1976'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஏறக்குறைய 23 ஆண்டு காலம் கலைஞரின் எதிர்ப்பை பெற்ற அரசியல் கட்சியின் பெயர் 'காங்கிரஸ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    1989 மற்றும் 1991-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்ற தொகுதி 'துறைமுகம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருடன் கூட்டணி சேர்ந்து மாபெரும் வெற்றி அடைந்த தேசிய தலைவர் 'மூப்பனார்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் ஆசிரியராக இருந்த ஒரு பிரபல வார இதழின் பெயர் 'முத்தாரம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    திரை உலகில் கலைஞருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திரைப்படங்களான, 'பராசக்தி', 'பூம்புகார்', 'மர்மயோகி', 'ராஜகுமாரி' இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    'தென்பாண்டி சிங்கம்' என்ற இலக்கியத்திற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கலைஞருக்கு வழங்கிய விருதின் பெயர் 'ராஜராஜன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் சேவை செய்த ஆண்டுகளின் எண்ணிக்கை 50. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    திரை உலகம் அவரது கலை உலக சேவையைப் பாராட்டி வழங்கிய தங்க 'எழுதுகோல்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் எப்போதும் விரும்புகின்ற ஒரே பாடல் வரி 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'. இதன் கூட்டுத் தொகை 14=1+4=5.

    கோவலன், கண்ணகிக்காக கலைஞர் கலைக்கூடம் அமைத்த கடற்கரை நகரத்தின் பெயர் பூம்புகார். இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகத்தின் பெயர் 'அண்ணாமலை'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    மிகவும் உணர்ச்சி வசப்படும் நிலையில் கலைஞர் உபயோகிக்கும் வார்த்தை 'சும்மா இரு'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் தன் உயிர் மூச்சாகக் கடைப்பிடிக்கும் கொள்கை 'திராவிடம்' இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருக்கு பிடித்த கிரேக்க அறிஞர் 'சாக்ரடீஸ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞரை கவர்ந்த சோழநாட்டு மன்னன் 'கரிகாலன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஒருமுறை தேர்தலில் தனது 100 சதவீத ஆதரவை கலைஞருக்கு வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் 'சிவாஜிராவ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ரஜினிகாந்த் சார்பில் கலைஞரிடம் தூது சென்ற பத்திரிகையாளர் 'சோ.ராமசாமி'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    தி.மு.க.வின் மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தவர் ஜெயலலிதா. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஜெயலலிதாவை பர்கூரில் வென்ற தி.மு.க. வேட்பாளர் 'சுகவனம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஒரு தேர்தலில் முதல் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை வழங்கிய தொகுதி 'துறைமுகம்', இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    அதில் வென்ற பேராசிரியர் அன்பழகன் சட்டசபையின் முன்னவர் ஆக இருந்தார். இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    நான்காவது முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்ற மாளிகையின் பெயர் 'ராஜ்பவன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் என்ற பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த நாடகம் 'தூக்கு மேடை'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு 'கிரிக்கெட்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    நாடே திரும்பிப் பார்க்கும் நலத் திட்டங்கள்

    பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், கண்ணொளி திட்டம், முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டம், கைரிக்ஷாக்களை ஒழித்தது, குடிசை மாற்று வாரியம், குடும்ப நலத்திட்டம், பெண்களுக்கும் சம சொத்துரிமை சட்டம், ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 20,000 திருமண உதவி, கலப்புத் திருமணத்திற்கும் விதவைத் திருமணத்திற்கும் ஊக்கத் தொகை, ஏழைப் பெண்களுக்கு பிரசவ உதவி, ஏழைப் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, ஆதி திராவிடர் இலவச வீட்டுத் திட்டம், பிற்பட்டோர் நலனுக்கு தனித்துறைகளைத் தோற்றுவித்தது.

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீடு. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, சிறுபான்மை யினருக்கு தனி இட ஒதுக்கீடு.

    பெரியார் நினைவு சமத்துவபுரம், உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், வருமுன் காப்போம்.

    ரூ.2-க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி. இலவச எரிவாயு அடுப்பு. ஏழைகளுக்கு இலவச நிலம், சத்துணவில் வாரம் மூன்று முட்டை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை.

    • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும்.
    • தொடக்க விழா மட்டும் வருகிற 4-ந்தேதி (ஞாயிறு) தொடங்குகிறது.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டு இலக்கிய திருவிழாவாக சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டாடப்படுகிறது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எத்திசையும் புகழ் மணக்கும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை பாராண்டு தமிழ் செய்த நூறாண்டு தலைவருக்கு ஓராண்டு முழுவதும் விழா கொண்டாடுகிறோம்.

    கவியரங்கம், கருத்தரங்கம்-இசையரங்கம், இனிய தமிழ்ப் பாட்டரங்கம், சொல்லரங்கம், வல்லரங்கம், தெம்மாங்குத் தேனரங்கம், பட்டிமன்றம்-பாவையர் மன்றம், பட்டொளிவீசும் பகுத்தறிவு மன்றம், மாண்பு நிறை மாணவர் மன்றம், கான மன்றம், கானா மன்றம், கவிதை மன்றம், கருத்தியல் மன்றம், அறிவுடை மன்றம், ஆன்மீக மன்றம், இனஎழுச்சி மன்றம், எழுத்தாளர் மன்றம்.

    பாவைக்கூத்து, தெருக்கூத்து, மண்ணிசைப் பொழிவு, மக்களிசைப் பொழிவு, கரகாட்டம், ஒயிலாட்டம், நடன மேடை, நகைச்சுவை மேடை, கருத்தைக் கவரும் கவின்மிகு மேடை... என வருடம் நெடுக வசந்த விழாக்கள் நடைபெறும்.

    மொத்தம் 53 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும். தொடக்க விழா மட்டும் வருகிற 4-ந்தேதி (ஞாயிறு) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) நிறைவு பெறும்.

    தொடக்க நாள் நிகழ்ச்சி இன்முகத் தலைவரை பாடும் இசைபடு கவியரங்கம் என்ற தலைப்பில் குருநானக் கலைக்கல்லூரி அரங்கில் நடக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல்களை பாடகர்கள் அனந்து, ஸ்ரவன், ஹரித்தா, விஜயலட்சுமி, டாக்டர் கற்பகம் ஆகியோர் பாடுகிறார்கள். இசை பரத் வாஜ்.

    13-ந்தேதி (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் கலைஞரின் நிலைத்த புகழுக்கு காரணம் தாராள மனமே, போராடும் குணமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு கலைஞர் வழங்கியது ஒளிரும் தன் மானமே, மலரும் நலத்திட்டங்களே என்ற தலைப்பில் பட்டிமன்றத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

    இதுதவிர கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பொதுக்கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், சேவை திட்ட முகாம்களும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ந்தேதி சென்னையில் இரண்டாவது முறையாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூன் 3-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

    பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200- க்கும் அதிக வகையிலான மலர்களால் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மலர் கண்காட்சிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கக்கூடிய வகையில் மலர் அலங்காரங்கள், இரண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அலங்காரங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர், தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்தார்.

    “ஓய்வறியா சூரியன்” என்ற பெயருக்கு ஏற்ப ஓயாத உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த கலைஞர், அரசியல் மட்டுமின்றி, எழுத்து, பேச்சு, சினிமா, இலக்கியம் என பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டவர். 

    ஆளுமையாக இருக்கட்டும், ஜனநாயகப் பண்பாக இருக்கட்டும், உரிமைக் குரலாக இருக்கட்டும், கொள்கைப் பிடிப்பாக இருக்கட்டும் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். டெல்லியை தமிழகம் உற்றுநோக்கிய காலத்தை மாற்றி, டெல்லியே தமிழகத்தை உற்றுப்பார்க்கும் அளவுக்கு நிலைமையை மாற்றிய தலைவர் கலைஞர். 

    தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளியான அவரது பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 

    கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்

    நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன்3-ம் தேதி முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் கருணாநிதி. பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 

    நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது வயதில், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

    அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக கல்லக்குடி போராட்டம் அமைந்தது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் கல்லக்குடி ரெயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர். அதன்பின்னர் தீவிரமாக இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். தனது அயராத உழைப்பு மற்றும் தீர்க்கமான முடிவுகளால் கட்சியை வளர்த்ததுடன், தானும் வளர்ந்தார். 

    திமுக முதன்முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில், குளித்தலை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டார். மிகப்பெரிய தொகுதியான குளித்தலையில், கடும் சவால்களுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தை 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் கருணாநிதி. அதன்பின்னர் அவர் போட்டியிட்ட 12 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தோல்வியையே சந்திக்காத தலைவர் என்ற பெருமையை பெற்றார். 

    1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர், தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்தார். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். 

    கலைஞர் கருணாநிதி

    அவரது பதவிக்காலத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார். 

    இடையறாத அரசியல் பணிகளுக்கு மத்தியிலும், எழுத்துப் பணியை தொடர்ந்தவர் கருணாநிதி. 10 நாவல்கள், 24 நாடகங்கள், 4 வரலாற்று புனைவுகள், 9 கவிதை நூல்கள், 39 சிறுகதைகள், தன் வரலாறு என்று ஏராளமாக எழுதினார். இதுதவிர தொண்டர்களுக்கு ‘உடன்பிறப்பே’ என்ற தலைப்பில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதி உள்ளார். 75 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    புராணங்கள், இலக்கியங்கள் என பழங்கால கதைகளையே மீண்டும் மீண்டும் படமாக எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பல்வேறு சமூக கருத்துகள் கொண்ட படங்களை வழங்கி, சினிமா மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் கலைஞர் மு.கருணாநிதி. அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான படங்களில் திராவிடக் கொள்கைகள் பிரதிபலிக்கும். 

    முதன்முதலில் சினிமாவில் திரைக்கதை எழுதிய படம் ராஜகுமாரி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமூக பிரச்சனைகள் மற்றும் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டும் வகையில் அவரின் ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களில் கருணாநிதியின் வசனங்கள் இன்றும் தமிழர்களின் இதயங்களில் கர்ஜிக்கிறது.

    2009-ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) மாநாட்டில் உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது  கலைஞருக்கு வழங்கப்பட்டது. 

    1970-ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010-ஆம் ஆண்டு,  ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரப்பூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார். 

    தமிழர்களின் இதயங்களில் குடிகொண்ட ஓய்வறியா சூரியன், 2018 ஆகஸ்ட் 7ம் தேதி உறங்கச் சென்றது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

    மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடக்கிறது.

    தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை இன்று காலை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் மலர் கண்காட்சியை அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த கண்காட்சியில் 128 வகைகளை கொண்ட 4 லட்சம் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

    மலர்கண்காட்சி


    இந்த வண்ண மலர்கள் வெவ்வேறு உருவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிங்கம், கரடி, முயல், மான் போன்ற வடிவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான், தமிழ் பாரம்பரிய பண்பாட்டை விளக்கும் வகையிலும் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    மலர்களின் அருகில் நின்று செல்பி எடுக்கும் பகுதிகள், மலர் வளைவுகள், மலர்களால் ஆன பஸ், தேர், இருக்கைகள், மலர் தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த மலர்கள் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூர், புனே போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

    கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி


    மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாய பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நறுமணப் பொருட்களான கிராம்பு, ஏலக்காய் மூலம் உருவாக்கப்பட்ட மாடு, விவசாயிகளின் உருவம் போன்றவையும் உள்ளன.

    இந்த கண்காட்சியில் உள்ள மலர்கள் வாடாமல் இருக்கவும், அதன் தன்மை மாறாமல் இருக்கவும் கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

    கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி

    இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறுவர்களுக்கு ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளன்று வழங்கப்படும்.

    அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன். அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, ‘தினத்தந்தி’ குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி சிறப்பித்தார்.

    உதவி ஆசிரியராக தினத்தந்தியில் பணியை தொடங்கிய ஐ.சண்முகநாதனின் பத்திரிகை பணி முழுவதும் தினத்தந்தியிலேயே இருந்தது. தினத்தந்தி பத்திரிகை ஆசிரியராக நீண்ட நெடிய ஆண்டுகளாக பணியாற்றியுள்ள அவர், தினத்தந்தி பணியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்.

    கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசியலில் மிக சோதனையான காலக்கட்டத்தில் அன்னை இந்திரா காந்தியோடு கூட்டணி அமைக்க சென்னை கடற்கரையில் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைப்பு விடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட 1980-ல் அரசியல் வியூகம் வகுத்தவர் கலைஞர். அதேபோல, வகுப்புவாத சக்திகளின் ஆட்சியை மத்தியில் அகற்றிட 2004-ல் அன்னை சோனியா காந்தியை ‘தியாகத்தின் திருவிளக்கே’ என்று அழைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய பெரும் துணையாக இருந்தவர் கலைஞர்.

    எந்த முடிவெடுத்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு உறுதியாக எடுத்து அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்தவர். தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக் காவலராக விளங்கியவர் கலைஞர்.

    மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், நிர்வாக பயிற்சி பெற்று இன்றைக்கு தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அனைவரும் போற்றுகிற வகையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியின் மூலம் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஓராண்டில் பத்தாண்டு கால பணிகளை செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொடர்ந்து நிலைத்திட அவர் பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    அகில இந்திய அளவில் இன்று கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக்கில் டிரெண்டிங் ஆனது. ஏராளமானோர் அவரது பிறந்தநாளையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் இருந்தே பம்பரமாக சுழன்று பங்கேற்று அசத்தினார்.

    தமிழகம் முழுவதிலும் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய அளவில் இன்று கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக்கில் டிரெண்டிங் ஆனது. ஏராளமானோர் அவரது பிறந்தநாளையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.
    சென்னை:

    தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

    இந்த குழு 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கான பல நூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாசை (வயது90) தேர்ந்தெடுத்தது.

    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.

    அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி கவுரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தி.நகரில் உள்ள ஆரூர்தாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

    அங்கு ஆரூர்தாசுக்கு பொன்னாடை போர்த்தி, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவித்தார்.

    அப்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், செய்தித்துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

    அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு உள்பட முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.

    இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் மலர்தூவி வணங்கினார்.

    இதன் பிறகு சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரயாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டு வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    வீட்டின் உள்ளேயும் கருணாதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார். மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உதயநிதி ஸ்டாலின், அமிர்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதன் பிறகு ஓமந்தூரார் தோட்டத்தில் கடந்த 28-ந் தேதி துணை ஜனாதிபதியால் திறக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்.

    அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் சிலையை வடிவமைத்த மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    அந்த பகுதியில் நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

    ஏழைகளுக்கு அறுசுவை உணவு, பிரியாணியும் வழங்கப்பட்டன. கருணாநிதியின் சாதனை விளக்க பாடல்களும் ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டன.
    முதலமைச்சரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    டிரோன் மூலமாக கருணாநிதியின் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டன. முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.

    இதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    ×