என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை டி.ராஜா இன்று வெளியிட்டார்.
    • 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    பாராளுமன்ற தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * புதுச்சேரி, டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

    * புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    * 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    * கவர்னர் பதவி நீக்கப்படும்

    * சிஏஏ சட்டம் ரத்து

    * மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்

    * பிஎம் கேர்ஸ் நிதி விவரங்கள் வெளியிடப்படும்.

    * சமூக நல மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்

    * நிதி ஆயோக் குழு கலைத்துவிட்டு திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

    *நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

    * சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை

    * நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.

    * பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்

    • அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா?
    • அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!

    சென்னை :

    தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

    53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என நமது சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு ஒன்றிய அரசுக்கு இணையான - ஒன்றிய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது நமது அரசு.

    அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்து வந்திருக்கிறோம். ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.


    ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும் – அ.தி.மு.க.வின் வரலாறும் எப்படிப்பட்டது?

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து - அசிங்கப்படுத்தி - எள்ளி நகையாடி- அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி.

    இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

    தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!

    அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அ.தி.மு.க.வால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும் – துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே! அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!

    எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் - அடக்குமுறை செய்ததும்தானே அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம்! அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!

    இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?

    ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும் – துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை!

    பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து – கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து – நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.

    மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும் – ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும் - தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதனால்தான், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.

    அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான்!

    "உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்" என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன்.

    இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

    எனவே, தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம் – பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம்!

    அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்…

    நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன்- தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

    எனவே, "திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்" என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.

    இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

    • இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.
    • காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்ளை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன்மூலம் இன்றைய காங்கிரஸ் இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதேநிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் விசித்திரமானது. அனைத்து தொகுதிக்கான வேட்பாளர்களை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.

    ஸ்திரதன்மையற்ற அல்லது நிலையற்ற என்ற மற்றொரு பெயராகியுள்ளது இந்தியா கூட்டணி. இதனால்தான் அந்த கட்சி சொல்லும் ஒரு விசயத்தை கூட நாட்டு மக்கள் இன்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை இரண்டு சிறுவர்கள் (Two Boys- do ladke) என்ற படம் படுதோல்வி அடைந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது அந்த படம் இவர்களால் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை இரண்டு சிறுவர்கள் என மறைமுகமாக தாக்கினார்.)

    எத்தனை முறை இந்த இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மரப்பானையை தீ மீது வைப்பார்கள் எனத் தெரியவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நகினா (எஸ்சி), மொராபாபாத், ராம்பூர், பிலிபிட் ஆகிய 8 தொதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.

    2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

    • 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    • வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

    திருவனந்தபுரம் தொகுதியில் 22 பேர், அட்டிக்கல் தொகுதியில் 14 பேர், கொல்லம் தொகுதியில் 15 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 10 பேர், மாவேலிக்கரை தொகுதியில் 14 பேர், ஆழப்புழா தொகுதியில் 14 பேர், கோட்டயம் தொகுதியில் 17 பேர், இடுக்கி தொகுதியில் 12 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 14 பேர், சாலக்குடி தொகுதியில் 13 பேர், திருச்சூர் தொகுதியில் 15 பேர், ஆலத்தூர் தொகுதியில் 8 பேர், பாலக்காடு தொகுதியில் 16 பேர், பொன்னானி தொகுதியில் 20 பேர், மலப்புரம் தொகுதியில் 14 பேர், கோழிக்கோடு தொகுதியில் 15 பேர், வயநாடு தொகுதியில் 12 பேர், வடகரா தொகுதியில் 14 பேர், கண்ணூர் தொகுதியில் 18 பேர், காசர்கோடு தொகுதியில் 18 பேர் என 20 தொகுதிகளில் மொத்தம் 290 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. அதில் திருவனந்தபுரம் தொகுதியில் 9 பேர், அட்டிக்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 3பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 2பேர், மாவேலிக்கரை தொகுதியில் 4பேர், ஆழப்புழா தொகுதியில் 3பேர், கோட்டயம் தொகுதியில் 3பேர், இடுக்கி தொகுதியில் 4 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 4பேர், சாலக்குடி தொகுதியில் ஒருவர், திருச்சூர் தொகுதியில் 5பேர், ஆலத்தூர் தொகுதியில் 3 பேர், பாலக்காடு தொகுதியில் 5 பேர், பொன்னானி தொகுதியில் 12 பேர், மலப்புரம் தொகுதியில் 4 பேர், கோழிக்கோடு தொகுதியில் 2 பேர், வயநாடு தொகுதியில் 2பேர், வடகரா தொகுதியில் 3பேர், கண்ணூர் தொகுதியில் 6பேர், காசர்கோடு தொகுதியில் 4பேர் என 20 தொகுதிகளில் மொத்தம் 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    ராகுல்காந்தி, ஆனி ராஜா, சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், முன்னாள் மந்திரி சைலஜா, முன்னாள் முதல்-மந்திரி கருணாகரணின் மகன் முரளிதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட 204 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகும். சுயேட்சை வேட்பாளர்ளுக்கு சின்னங்களும் அன்றைய தினம் ஒதுக்கப்படும்.

    • முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும்.
    • பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தொகுதியில் சிறப்பான பல திட்டங்களை என்னால் கொண்டு வர முடியும். விருதுநகருக்கும் -டெல்லிக்கும் நான் பாலமாக இருப்பேன். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அடுத்த பிரதமர் மோடிஜி தான் என உறுதியாக கூறுகின்றனர். 400-க்கும் மேற்பட்ட எம்.பி. தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும். இந்த தொகுதியில் வெற்றி பெற்று நான் எம்.பி.யாக பாராளுமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

    இப்பகுதியின் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி சிகரெட் லைட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பிரச்சனையை தீர்க்க கோரிக்கை வைத்தனர். அவர் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் எடுத்துக் கூறி இறக்குமதி செய்யப்படும் சீன லைட்டர்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க செய்தார். அதனால் தற்போது லைட்டர் விற்பனை முடக்கியது.

    இப்போது சிவகாசி தீப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் இவ்வளவு நாள் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. முதல் முறையாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள். யாருக்காக இவர்கள் இரண்டு பேரும் ஓட்டு கேட்கின்றனர்? எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழக பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார். அவர் யாரை சந்திப்பார்? யாரிடம் முறையிடுவார்? ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் பீஸ் ஆகிவிட்டார். இனி அவர் என்ன செய்யப் போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
    • நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர்.

    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது தேனி மாவட்டம். தற்போது மீண்டும் அவரது ஆசிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் இங்கு போட்டியிடுகிறார். தமிழகத்தில் போதை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தி.மு.க.வினரே இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வருவதுதான் கொடுமை.

    மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதனை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அதனை அடியோடு நிறுத்திவிட்டனர். தாலிக்கு தங்கம் வழங்காததால் பல பெண்களின் திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது 1 பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தால் அந்த தங்கம் பெண்களுக்கு கிடைத்திருக்கும. மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்குவதாக தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பெண்களை தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என அவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர். தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பதிவு கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்திவிட்டனர். விலைவாசி கடுமையாக உயர்ந்த பிறகு ரூ.1000 கொடுத்து என்ன பயன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.

    காரைக்குடி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் தங்கள் கொள்கைகளுக்கு முரணான பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.

    நோய் நாடி நோய் முதல் நாடி என்பது வள்ளுவர் வாக்கு. அதற்கு ஏற்ப ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்வதற்கு பதிலாக செஸ் வரியை சீரமைத்தாலே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகளை வெகுவாக குறைக்கலாம்.

    மாநிலத்திலும் மத்தியிலும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைவது மிகவும் அபூர்வம். தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.

    ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.
    • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். கல்பாக்கம் ஈணுலையை அகற்ற வேண்டும் என்பது உள்பட 74 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் வைகோ கூறுகையில், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது.

    சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6 ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்றார்.

    • தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
    • கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

    கோவை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமியை ஆதரித்து வருகிற 12-ந்தேதி கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசாரத்தின் போது முதலமைச்சருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அன்றைய தினம் மாலையில் கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தி எம்.பியும் ஒன்றாக இணைந்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்திற்காக எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்படுகிறது.

    இதுதவிர கூட்டத்திற்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணி தற்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், வி.சி.க உள்பட கூட்டணி கட்சியினர் என 1½ லட்சம் பேர் திரள்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தி எம்.பியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பது இந்தியா கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட உள்ளது.

    • தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.
    • 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரம் செய்த போது முதியோர் உதவித்தொகை உயர்த்துவது குறித்து பேசினார்.

    இதுதொடர்பாக தேர்தல் துறை கவனத்துக்கு சென்றது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி மானியம், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.

    எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல பா.ஜனதா சமூகவலைதள விளம்பரம் தொடர்பாக கட்சியின் பொது செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

    ×