என் மலர்
உலகம்
- வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு
- அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.
இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்
இதையடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.
இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைக்கப்படும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வங்கதேசத்துடன் அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு மீதான வரியை 19% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
அதன்படி அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூற்பு இழைகள் மூலம் வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுரோட்டில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது.
- நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை இலக்காக கொண்டிருந்தார். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையிலான ஸ்டார்ஷிப் ரக விண்கலன்களை தவிர்த்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு பால்கன், ராப்டர் உள்ளிட்ட ராக்கெட்களை தயாரித்து கொடுத்து வருகிறது.
இந்தாண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலன் ஒன்றை அனுப்பி இதற்கான முயற்சியில் இறங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அந்த திட்டத்தை தற்போது தள்ளிப்போடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது. எனவே நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம். இந்தாண்டு இறுதிக்குள் அங்கு விண்கலன் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்கி மக்களை குடியேற செய்வோம்" என்றார். இந்தாண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- மேற்குக்கரையில் யூதக் குடிமக்கள் நிலம் வாங்குவதற்குப் இருந்த தடையை இஸ்ரேல் நீக்க உள்ளது.
- மதத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இஸ்ரேலிய அதிகாரிகள் பெறுவர்.
பாலஸ்தீன நாட்டின் முக்கியப் பகுதியான மேற்கு கரை 1967 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி தங்களுக்கே சொந்தம் என இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி வருகிறது.
அங்கு பூர்வீமாக உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நோக்கில் இஸ்ரேல் மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மேலும் விரிவுபடுத்த இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மேற்குக்கரையில் யூதக் குடிமக்கள் நிலம் வாங்குவதற்குப் இருந்த தடையை இஸ்ரேல் நீக்க உள்ளது.
இதுவரை யூதக் குடியேற்றவாசிகள் கட்டுமானங்களுக்கு உள்ளூர் நகராட்சி மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆகிய இருவரிடமும் அனுமதி பெற வேண்டியிருந்தது. இனி இஸ்ரேலிய அதிகாரிகளிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது.
பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் சில மதத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இஸ்ரேலிய அதிகாரிகள் பெறுவர்.
இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த நடவடிக்கை இஸ்ரேலிய மண்ணில் எங்களது வேர்களை ஆழமாக்கும் மற்றும் பாலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தைப் சிதைக்கும். மேற்குக்கரை நாட்டின் இதயம் போன்றது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது மேற்குக்கரையை இஸ்ரேலுடன் முழுமையாக இணைத்துக்கொள்ளும் முயற்சி என பாலஸ்தீன நிர்வாகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பல சர்வதேச அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெறிவித்துள்ளன.
- இது போர்ச்சுக்கல் அதிபர் தேர்தல் வரலாற்றில் 1976-க்குப் பிறகு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
- இவர் தற்போதைய அதிபர் மார்செலோ ரிபெலோ டி சூசா-வின் பின்னோடியாக பொறுப்பேற்பார்.
போர்ச்சுக்கல் நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 66.8% வாக்குகள் பெற்று ஆளும் மிதவாத இடதுசாரி சோசலிச கட்சியை சேர்ந்த அந்தோனியோ ஜோஸ் செகுரோ வெற்றி பெற்றுள்ளார்.
வலதுசாரியான Chega கட்சியின் வேட்பாளர் ஆன்ட்ரே வெஞ்சுரா 33.2% வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் செகுரோ சுமார் 3.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இது போர்ச்சுக்கல் அதிபர் தேர்தல் வரலாற்றில் 1976-க்குப் பிறகு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
வரும் மார்ச் 9 அன்று அந்தோனியோ ஜோஸ் செகுரோ புதிய அதிபராகப் பதவியேற்பார். இவர் தற்போதைய அதிபர் மார்செலோ ரிபெலோ டி சூசா-வின் பின்னோடியாக பொறுப்பேற்பார்.
வலதுசாரிகள் பெரிய வித்தியாசத்தில் தோற்றபோதும் முந்தய தேர்தல்களை விட அவர்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் வலதுசாரிகள் வலுப்பெற்று வருவதை குறிக்கிறது.
- 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
- ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அன்று முதல் ஹாங்காங் சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஜனநாயகத்துக்கு எதிரான குரல்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில் ஹாங்காங்கின் பிரபல ஊடக தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்மி லாய் தொடங்கிய 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
2021-ல் அரசின் அழுத்தங்கள், சொத்துக்கள் முடக்கம் மற்றும் ரெய்டுகள் காரணமாக இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நீடித்தன.
இந்நிலையில் ஏற்கனவே மோசடி வழக்கில் ஜிம்மி லாய் 5 ஆண்டு 9 மாத தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்கு தற்போது 78 வயது ஆவதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனைக்கு சமமாகும்.
தாம் சீனாவின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும்பாலும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய் உடல்நிலை மோசமாக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
- சந்தன் குமார் டொராண்டோவில் ஒரு கன்னட சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்துள்ளார்.
- நாடு திரும்பிவிடுமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை.
கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
37 வயதான சந்தன் குமார் கர்நாடகாவின் பெங்களூரு புறநகப் பகுதியான நெலமங்களாவின் தியாமகொண்ட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 6-7 ஆண்டுகளாகக் கனடாவில் பிராம்ப்டன் பகுதியில் ஐ. டி. ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் உள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த சந்தன் குமார், மீட்கப்பட்டபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தன் குமார் டொராண்டோவில் ஒரு கன்னட சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சங்கத்தை அமைத்ததே அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

சாந்தன் குமாரின் தந்தை தந்தை நந்தகுமார் பேசுகையில், "கனடா சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், நாடு திரும்பிவிடுமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டோம்.
ஆனால் அவர் கேட்கவில்லை. இப்படி ஒரு கொடுமை நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் உடலை இந்தியா கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- லெபனானில் பாழடைந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன.
- கடந்த மாத இறுதியில் இதேபோல் திரிபோலியில் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது.
இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான பெண் உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மீட்பு உபகரணங்கள் பெரிய அளவில் இல்லாததால் மீட்புப் படையினர் அடிப்படை உபகரணங்கள் மற்றும் வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை பொதுமக்கள் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகளுக்கு உதவவும், இடிந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை, பக்கத்து வீடுகளில் தங்க இடம் வழங்கி உதவுமாறும் அதிபர் ஜோசப் அவுன் கேட்டுக்கொண்டார்.
லெபனானில் பாழடைந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. மக்கள் வசிக்கும் பல கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இங்குள்ள கட்டிடங்கள் பல சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளன.
குறிப்பாக 1975-1990-ம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போரின் போது, வீட்டு உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அனுமதியின்றி புதிய தளங்களைச் சேர்த்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் இதேபோல் திரிபோலியில் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. லெபனானின் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடுகள் பழுது பார்ப்பு அல்லது மாற்று வீடுகளை வாங்குவதற்கான வழிகளை அரசு செயல்படுத்த தவறிவிட்டது. தற்போது நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உடனடியாக மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
- கோவிட்-19 காலக்கட்டத்திலும் அவர் மரபை மீறவில்லை.
- ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று நடைபெறவிருந்த ராணுவ விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பைத் தவிர்த்துள்ளார். 1989-ல் தலைமை பொறுப்பை ஏற்றதுமுதல் கமேனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தார். கோவிட்-19 காலக்கட்டத்திலும் அவர் அந்த மரபை மீறவில்லை.
இந்நிலையில் 37 ஆண்டுகளில் இந்தாண்டு முதல்முறையாக கூட்டத்தை புறக்கணித்துள்ளார். கமேனிக்குப் பதில் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதற்கு ஈரானிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இதற்கு அமெரிக்காவுடனான பதற்றம்தான் காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தை கமேனி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மறுதரப்பினர் 86 வயதாகும் கமேனியின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அதன் காரணமாகவே அவர் கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றன.
1979-இல் ஈரானிய விமானப்படை அதிகாரிகள் அயதுல்லா கொமேனிக்கு விசுவாசப் பிரமாணம் செய்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8-ம் தேதி இந்த முக்கியச் சந்திப்பு நடத்தப்படுகிறது.
- உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
லாரி நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்தாததுதான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
- நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். தற்போது அவரது கவனம் தேர்தல் மீது சென்றுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறிருப்பதாவது:- அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்ய போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.
* சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் ஓட்டளிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
* அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
* மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.
இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும், பின்பற்றுவதற்காக போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- ஜப்பானில் உள்ள கீழ் சபைக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.
- வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதியளித்தார்.
இதையடுத்து, ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார்.
அபார வெற்றி பெற்ற சானே தகைச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.






