என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன்.
    • நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை.

    கோபி:

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

    கட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் வரும் 5-ந் தேதி மனம் திறந்து பேசுகிறேன். முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என செங்கோட்டையன் கூறினார்.

    இதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 5-ந் தேதி செங்கோட்டையன் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பண்ணாரி, 16 ஒன்றிய செயலாளர்கள், 13 பேரூர் கழகச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களை சந்தித்த செங்கோட்டையன், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறி சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை செங்கோட்டையன் தோட்ட வீட்டிற்கு முன்னாள் எம்.பி. சத்திய பாமா வந்து செங்கோட்டையனை சந்தித்து பேசினார். நாளை மறுநாள் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.

    அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தோட்டத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது செங்கோட்டையனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது செங்கோட்டையன் கூறும் போது,

    செப்டம்பர் 5-ந்தேதி கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன். அன்றைய தினம் மனம் திறந்து விளக்கமாக பேசுகிறேன்.

    என்னுடைய கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்க போகிறேன். இன்றைய தினம் எந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை. தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்.

    அப்போது நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கூடுவதாக தகவல் வந்துள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய செங்கோட்டையன், 5-ந் தேதி அது உங்களுக்கே தெரியும்.

    நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை. அவர்களாகவே வந்தனர் என்று கூறி காரில் கிளம்பி சென்றார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்கள் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

    இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 27-ந்தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

    50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக ஓட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    * பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    * உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    * தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம்.

    * ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் சீனாவிற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக ஜெர்மனி தெரிவித்தது. ஜெர்மனி, பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய புதின், "ரஷ்யா ஒரு நாள் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் என பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை தான் எப்போதும் எதிர்த்ததில்லை" என்று தெரிவித்தார். 

    படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் எள ராஜமௌலி அறிவித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக ராஜமௌலி வலம்வருகிறார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டியது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் (சுமார் 500 கோடி ரூபாயை தாண்டி) எடுக்கப்பட்டது.

    தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கு வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்டாததால் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. பிரமாண்ட இயக்குனர், முன்னணி கதாநாயகன் இணைவதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் என்பதால் இரண்டு பகுதியாக வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வந்தது.

    இந்த நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது இரண்டு பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. 120 நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டால், தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைக்கும்.

    படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்தார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் மற்றும் பல முன்னணி நகடிர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

    • கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
    • கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 46,473 இந்தியர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

    இலங்கையின் முக்கிய வருவாயாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இலங்கைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

    கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட அதிகமாகும். அதில் 46,473 பேர் இந்தியர்கள் ஆவர். பிரிட்டன் (17,764) ஜெர்மனி (12,500) சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
    • தி கிங் படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் நடிக்கிறார்.

    பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான் நடிக்கிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான போலீஸ் புகாரில் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக சுஹானா கான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டிலும் சில முக்கிய தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
    • தமிழக பா.ஜ.க.வினரிடையே இன்னும் ஒருங்கிணைப்பு இல்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷா நேரடியாக சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி சென்றார்.

    இந்த கூட்டணி அமைந்த பிறகு அடுத்த கட்டமாக தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி 7 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த முடிவு செய்து உள்ளது. முதல் மாநாடு நெல்லையில் நடந்து முடிந்துள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகிறது.

    தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம் சாட்டி ராகுல் காந்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார். பீகாரில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினும் பங்கேற்றார். தமிழகத்திலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜ.க. அணிக்கு எதிரான அலையை உருவாக்க இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் முதல் கட்டமாக வருகிற 7-ந்தேதி வாக்கு திருட்டுக்கு எதிரான மாநாட்டை காங்கிரஸ் கட்சி நெல்லையில் நடத்துகிறது.

    எனவே தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரங்களை முறியடித்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி? இந்த கூட்டணி வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது எப்படி? என்பதை தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை அறிந்து மேற்கொள்ள டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது.

    இதற்காக ஆலோசனை நடத்த தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு உறுப்பினர்களை அவசரமாக டெல்லிக்கு அழைத்து உள்ளது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பொன். ராதா கிருஷ்ணன், அண்ணாமலை, எச் ராஜா, கேசவ விநாயகன் ஆகியோர் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று உள்ளார்கள். இன்று நண்பகலில் தமிழக குழுவினருடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இந்த குழுவில் ஏற்கனவே டெல்லியில் இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகன், அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கனவே வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிக்க பா.ஜ.க.வும் அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டுகளை எப்படி அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது பற்றிய ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் தமிழ்நாட்டிலும் சில முக்கிய தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு தொகுதியில் சுமார் 19000 வாக்குகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் நடத்தியுள்ள முறைகேடுகளையும் ஆதாரத்துடன் வெளியிட்டு அவர்களின் பிரசாரங்களை முறியடிக்கவும் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக குழுவினருடன் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் பா.ஜ.க.-அ.தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் கூட்டணியில் மாற்றம் வரும் என்று பரப்பப்படும் வதந்திகளையும் முறியடிப்பது தொடர்பாக அமித்ஷா ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க.வினரிடையே இன்னும் ஒருங்கிணைப்பு இல்லை. கோஷ்டி பூசல் இருக்கிறது என்ற விபரமும் டெல்லி தலைமைக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அமித்ஷா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென்று தமிழக குழுவினரை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா பேசு இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 14ஆம் தரவரிசையில் உள்ள பாம்ப்ரி ஜோடி, 4ஆம் தரவரிசையில் உள்ள ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது.
    • ஜெர்மனி ஜோடி கடந்த வருடம் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    14ஆம் தரநிலை ஜோடியான பாம்ப்ரி- வீனஸ், தரநிலையில் 4ஆம் நிலை ஜோடியான ஜெர்மனியின் டிம் புட்ஸ்- கெவின் கிராவிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி ஜோடி கடந்த அமெரிக்க ஓபனில் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    காலிறுதியில் நிகோலா மெக்டிக் (குரோசியா) - ராஜீ ராம் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.

    • ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
    • நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

    நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?

    கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.

    மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார். 

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி சசிகலாவை சந்தித்துள்ளார்.
    • செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

    இதனால் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும்பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க.வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி அவரை சந்தித்துள்ளார். செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியுள்ள செங்கோட்டையன், சந்திப்பின்போது அணிகள் இணைப்பு பற்றியே பேச வாய்ப்பு உள்ளது.

    சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.விற்குள் கொண்டுவர செங்கோட்டையன் காய் நகர்த்துவதாகவும், சசிகலாவுடனான செங்கோட்டையனின் நெருக்கமே இ.பி.எஸ். கோபத்திற்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

    சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பை அறிந்தே இ.பி.எஸ். புறக்கணித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன்.
    • வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது.

    பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் 10ம் வகுப்பு வரை தான் படித்திருந்தாலும், தனக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் சிறுக சிறுக சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி இருக்கிறார்.

    ரூ.1 கோடி சேர்த்ததாக ரெட்டிட் தளத்தில் நபர் ஒருவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    அந்த பதிவில், "2000களில் மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன். 20 வருடங்களுக்கு பிறகு ஓய்வு பெறும் போது ரூ.63,000 சம்பளம் வாங்கினேன். இப்போது வங்கியில் ரூ.1.01 கோடி சேர்த்துள்ளேன். அதில் இருந்து எனக்கு வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது. சரியான நிதி திட்டமிடலே இதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

    கடன் எதுவும் இல்லாமல் ரூ.1 கோடி சேர்த்த நபரின் பதிவு இணையத்தில் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. 

    • ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என முடிவு எடுத்த நிழைலயில் ILT20 ஏலத்தில் பெயர் பதிவு செய்துள்ளார்.
    • ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என அறிவித்தார். இந்திய அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடாத வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி20 (சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடுவது உறுதியானது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ டோட் க்ரீன்பெர்க், அஸ்வினுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் பிக் பாஷ் லீக்கில் விளையாட முன்வந்தால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவது முதல் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார்.

    ×