என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
    • தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    ஆட்சியில் பங்கு என அறிவித்தும் கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லையே என்ற கேள்விக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னதாக த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஒரு வலிமையான தேர்தல் அறிக்கையை உருவாக்கத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு அமைப்பிற்கும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பிரசார குழுவின் மிக முக்கிய உறுப்பினராக செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையன் ஒரு குழுவிற்கு தலைமையாக உள்ளார். கட்சியில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் இருப்பதால், அவர் தனித்து ஒன்றும் இல்லை. அவர் கட்சியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விஜய் திகழ்கிறார். ஒரு தலைமை என்பது தானாகவே உருவாக வேண்டும். மற்றவர்கள் சொல்லி உருவாகக்கூடாது.

    தற்போதைய சில கூட்டணிகள் மேலிடத்து அழுத்தம் மற்றும் டெல்லியின் உத்தரவு காரணமாகவே இணைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஆன்லைன் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மக்கள் குறைகளை தலைவர் விஜய் பெற்று வருகிறார்.

    தி.மு.க. ஒரு "தீய சக்தி". அந்த சக்தியை வீழ்த்துவதே த.வெ.க.வின் முதன்மை இலக்கு. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எங்களது கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது.

    தி.மு.க. சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்.

    வேலூரில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் "முதல்-அமைச்சர் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இவ்வாறு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவது முறையல்ல.

    ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தவெகவின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எண்ணி அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது.
    • சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் தென்மண்டல மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளார்கள். தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் போது தி.மு.க. அரசு புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது. புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை முகம் சுழிக்கும் அளவில் தான் உள்ளது.

    தமிழக மக்கள் மீண்டும் தி.மு.க.விடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது. விஜயின் த.வெ.க.வுக்கு கட்சிக்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என சொல்லி வருகிறார்கள். யாரும் 10 சதவீதம் குறைவாக சொல்லவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சி தான் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தேசிய அளவில் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, த.மா.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம் என்றார்.

    • கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது.
    • இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன்.

    இதில் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார்.

    மேலும் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளிக்கப்படும்.

    இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16-ந்தேதி அலுவல் ஆய்வு குழு எனது தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.

    சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதுவரை சட்டமன்றம் கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சிறப்பு தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

    கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது.

    கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார்.
    • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்

    "தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்" எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர்.

    செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார்.

    இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
    • முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

    கோவை:

    தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்ததிட்டம், வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதனை முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 454 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.
    • கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 240 ஏக்கர் நிலம் தனிநபர்களிடம் இருப்பதாகவும் அதனை மீட்டு கோவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர சென்னையை சேர்ந்த வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோவில் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி தாமதமானதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து 21 நாட்களுக்குள் கோவில் நிலங்களை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து நிலத்தை மீட்க வந்தனர்.

    அப்போது, தற்போது நிலங்களை வைத்திருப்பவர்கள், விவசாய சங்கத்தினர், சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகம் எடுத்து வந்த அறிவிப்பு பலகைகளை உடைத்து, பேனர்களை கிழித்து வாக்குவாதம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் முன்னதாக சுமார் 40 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று கோர்ட்டை நாடி உரிய உத்தரவு வாங்கி வர நேற்று வரை கால அவகாசம் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்ததால் நிலங்களை மீட்க நேற்று இரவு அதிகாரிகள் ஆலோசித்தனர்.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் அருகில் திருப்போரூர்-நெம்மேலி செல்லும் சாலையில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் கார்த்திகேயன், ராஜலட்சுமி, ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோவில் ஊழியர்கள் உதவியுடன், காலை 6 மணிமுதல் ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.

    இன்று காலை மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சுமார் 240 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.700 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை.
    • காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும்.

    புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லை அது தான் உண்மை. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி பேச முயன்றபோது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சி தலைவரை கூட பேச அனுமதிக்கவில்லை. பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அது குறித்து விசாரிக்க ஏன் இதுவரையில் குழு அமைக்கவில்லை? அது போன்ற பிரச்சினை ஏதும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.

    தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் தான் இரண்டு பேரும் வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து. இரண்டு மாதங்களாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பேசி வருவதும், குழப்பமான நிலை நீடிப்பதற்கும் தி.மு.க. குழு அமைக்காதது தான் காரணம்.

    தி.மு.க., காங்கிரஸ் இடையே இப்போது உள்ள மணக்கசப்பிற்கு தி.மு.க.வே காரணம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் ஒருபோதும் வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தை குழுவை தி.மு.க. அமைக்க வேண்டும். இல்லையென்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத் தான் செய்யும்.

    ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் அதன் பிறகும் கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு முடிவை தி.மு.க. உடனடியாக எடுக்க வேண்டும். தி.மு.க குழு அமைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

    1967-க்கு பின்னர் நாங்கள் ஆட்சியில் இல்லை தான், தனித்து நிற்க கூடிய பலம் இல்லை தான். அதேவேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும். அப்போதுதான் தி.மு.க. மதசார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும். எங்களை கூட்டலாக பார்க்க கூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க அரசு ஒருவேளை அமைந்தால், அது அ.தி.மு.க. அரசாக இருக்காது, பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று ரசிகர்கள் உள்ளனர்.

    அந்த ரசிகர்கள் தொண்டர்களாக மாறலாம், தொண்டர்கள் வாக்களிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்திற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும், விஜய்க்கு ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை.

    அந்த வாக்குகளால் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அது சீட்டாக மாறுமா என்பது கேள்விக் குறிதான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. விஜய் மீது வருமான வரி துறையின் தீர்ப்பு என்பது தேர்தலை எந்த விதத்திலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

    இது ஊழல் கிடையாது, வரி கட்டவில்லை என்று தான் கூறுகிறார்கள். வரியை கட்டிவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அவருக்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
    • வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.

    ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

    விஜய் போட்டியிட போகும் தொகுதி பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். விஜய் கட்சி தொடங்கும் போதே வெற்றியை குறிக்கும் வகையில் முதல் எழுத்தான 'வி'யில் தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.

    அதன்படி விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள வி.சாலையில் தான் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது.

     

    மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் இந்த கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயனிக்கும் பலர் வி.சாலை வழியாக அங்கு சென்று கொடிக்கம்பத்தை பார்வையிட்டும் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்தும் செல்கிறார்கள்.

    த.வெ.க. வரலாற்றில் முதல் முத்திரை பதித்த இந்த தொகுதியையே விஜய் முதல் தேர்வாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தொகுதியில் போட்டியிட்டால் தனது தொகுதியில் பிரசாரம் செய்வதோடு மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் எளிதாக பிரசாரம் செய்ய சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. 103 ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.

    2011 தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி செயல்பட்டு வருகிறது.

    • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.
    • சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1200 கனஅடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1500 கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
    • பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

    மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும்.

    தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்பட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, உயிரி பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை அமைத்து நடத்தி வருவதாலும், சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ கோழிப்பண்ணை சம்மந்தமான முட்டை, தீவனம் போன்ற பொருட்கள் போக்குவரத்து நடைபெறுவதில்லை.

    இதனால் நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்பில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே நீர்வரத்தாக இருந்து வந்தது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது. வைகை அணையில் இருந்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் 300 கன அடி வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 45.80 அடியாக உள்ளது. வரத்து 442 கன அடி. இருப்பு 1489 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3004 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.36 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது.

    • தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது.
    • தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது.

    நேற்று தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது. தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது. மீண்டும் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

    02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    04-02-2026- ஒரு கிராம் ரூ.320

    03-02-2026- ஒரு கிராம் ரூ.300

    02-02-2026- ஒரு கிராம் ரூ.300

    ×