என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்.
    • மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர். தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர். மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

    மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

    மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. வெங்கடாசலம், திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

    • மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
    • புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:-

    சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.

    வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று வீசும்.

    புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    இப்போதைக்கு புயலாக இருந்தாலும் நகர்வை பொருத்துதான் மழை எங்கு, எவ்வளவு பெய்யும் என்பது தெரியும்.

    இருப்பினும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
    • விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.

    அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.

    இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

    இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.

    இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.

    • கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பந்தமாக தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் 9 குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.

    அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனயடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம், நவ.27-

    சேலம் எருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சந்தானகுமார் (38). இவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் போதுமான வருமானமும் இன்றி தவித்து வந்தார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தானகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    தூத்துக்குடி:

    வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.

    இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.
    • புயல் உருவானதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்

    வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

    தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.

    இந்த புயலுக்கு 'டிட்வா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களாகும்.

    புயல் உருவானதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    29-ந்தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும்.

    சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

    • தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.
    • அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது பேசிய தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

    * தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.

    * அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.

    * த.வெ.க.வு.க்கு 20% வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது.

    * எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவுடன் இணைந்து மாற்றம் கொண்டு வந்தவர் அண்ணன் செங்கோட்டையன்.

    * வெற்றி, தோல்வி, பல இழப்புகளின் போதும் கட்சியுடன் துணைநின்ற அனுபவத்துடன் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன்.
    • கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:

    * அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி.

    * த.வெ.க. எனும் கொள்கை கூட்டத்தில் முக்கியமான மாமனிதர் சேர்ந்திருக்கிறார்.

    * கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.

    தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.

    இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை.

    தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

    ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 



    • இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
    • 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது:

    * அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    * இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.

    * செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.

    * 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
    • வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. 

    ×