என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
- கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
- ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத் துறை தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு, கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், அருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாத முனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச் சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு 9 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
2025-2026-ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, "9 கோவில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோவில்கள் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.






