என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துகிறார்.
- ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதி.
சென்னை:
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்துகிறார்.
அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை தொடங்கி வைத்து, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் பணியாளர்களுக்கு கல்லூரியின் வளாகத்திலேயே 3 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 அடுக்ககத்தில் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
- எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க.வின் 26-வது ஆண்டு கொடிநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனு இன்று கொடுத்திருக்கிறோம். இதே நாளில் தான் ஏற்கனவே 2011-ம் ஆண்டு விஜயகாந்த் அவரது விருப்ப மனுவை கொடுத்தார். இப்போது மீண்டும் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனுவை இன்று நான் கொடுத்திருக்கிறேன்.
2-வது விருப்பமனுவை நான் கொடுத்திருக்கிறேன். 3-வது விருப்பமனுவை விஜய பிரபாகர் கொடுத்து உள்ளார். இன்று நிர்வாகிகள், தொண்டர்கள், பெருவாரியானோர் விருப்ப மனு கொடுத்து உள்ளனர்.
இந்த தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நாங்கள் உழைப்பால் வெற்றி பெற்று வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்போம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நாங்கள் தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லும் போது, நாங்கள் 2 பக்கமும் பேசுவதாக தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.
எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியைதான் இந்த முறை நாங்கள் அமைப்போம்.
தே.மு.தி.க.வை பொருத்த வரைக்கும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
கேள்வி: தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்: தே.மு.தி.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கும் தெரியும். அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனால் அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்ட கண்ணியமான கட்சி. யாருடைய கருத்தும் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.
கேள்வி: ஆட்சியில் பங்கு என்பதில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன?
பதில்: ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது. அந்த உரிமையை பகிர்ந்தளிக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இதற்கான பதிலாக இருக்கும். இதுவரையில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறோம் என்பது யாருக்குமே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது.
- தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. இளைஞரணி தலைவர் சியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது. வரும் காலங்களில் மதுபானக்கடைகளை முழுமையாக மூடுவதற்கு புதிய தமிழகம் கட்சி போராடும். தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது. முக்கிய துறைகளை கையாளும் 4 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
சமூக நீதி பேசும் அமைச்சர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர். வருகிற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறும். வருகிற தேர்தலில் கூட்டணி ஆட்சியே அமையும் அதில் புதிய தமிழகம் இடம்பெறும்.
எங்கள் கட்சி வருகிற தேர்தலில் தனித்தொகுதி மட்டும் பொதுத் தொகுதிகளில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்ப ஆட்சியும், குடும்ப வாரிசுகளும் செழித்து வளர்ந்து வருகின்றனர். இதற்கு வருகிற தேர்தலில் முடிவு கட்டப்படும்.
நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைப்பு.
- ஒலிப்பெருக்கியில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவில், படிப்பாதை, கிரிவலப் பாதை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தவறவிடும் உடமைகள், பொருட்கள், காணாமல் போகும் குழந்தைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவிப்புகளை மலைக்கோவில் அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் பேசினால் பழனி மலை மற்றும் அடிவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கிகளில் கேட்கும் விதமாக பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பழனி மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் உள்ள ஒலிப்பெருக்கியில் தனது செல்போனை இணைத்து அதில் த.வெ.க. பாடலை ஒலிக்கச்செய்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்களின் முக்கிய தேவை மற்றும் பிரச்சனைகள் குறித்து அறிவிக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் நிலையில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோவிலில் த.வெ.க. பாடல் ஒலிக்கப்பட்டு அது பழனி அடிவாரம் முழுவதும் கேட்டிருக்குமா? அல்லது குறிப்பிட்ட அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒலிபரப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கோவிலில் உள்ள ஒலிப்பெருக்கியில் செல்போனை இணைத்து த.வெ.க. பாடலை ஒலிக்கவைத்த இளைஞர் யார்? என்று அடையாளம் கண்டு, அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை பெருநகர மாநகராட்சி பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது எப்படி சாத்தியமானது?
- தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசு தந்திரமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வரும் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.
வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், என்றும் இல்லாத சாதனையாக நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது? இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசின் தந்திரமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்!
நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொழுத்தது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் மொத்தமாக கமிஷன் அடித்து, வாரி சுருட்டிக்கொள்ள தி.மு.க. அரசு திட்டமிடுவது என்றும் நிறைவேறாது! உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, கமிஷன் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி, விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பூட்டு போடுவர்! என்று கூறியுள்ளார்.
- தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
- முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று.
சென்னை கிண்டியில் 'CONVERSION CONCLAVE 2026' மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல், மக்கள் வளர்ச்சிக்கான மாடல்.
* தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கான பதில் இந்த மாநாடு.
* 'CONVERSION CONCLAVE 2026' மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களின் திறப்பு விழா நடந்துள்ளது.
* தொழில்துறையில் செய்த சாதனைகளை நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்து முறியடிப்போம்.
* தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறுவதை பார்த்து பார்த்து உறுதி செய்கிறோம்.
* முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்குமே இல்லாத ஒன்றை நடத்தி வருகிறோம்.
* தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
* இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 41 சதவீதமாக உள்ளது.
* முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று.
* அனைத்து தொழில்துறையினருக்கும் நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
* தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
* கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக உள்ளது.
* இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளை ஒட்டி கட்சிக்கொடியை ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த்.
- கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் பேச்சு.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளை ஒட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. உரிய நேரத்தில் அறிவிக்கும்.
* நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி.
* தே.மு.தி.க. எங்கள் கட்சி. என்ன முடிவு எடுக்க வேண்டும். எப்போது அறிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கழத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து பேசி உறுதியாக அறிவிப்பேன்.
இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
- த.வெ.க. தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
- அனுமதிச்சீட்டு பெறாதவர்கள் நேரில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுகோள்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி.
- ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் தகவல்.
ஓசூர்:
உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
பூக்கள் என்றாலே பெண்களுக்குப் பிடிக்கும். அதுவும் ரோஜா பூக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு ஏற்றார் போல காதலர் தினத்தில் காதலர்கள் முதலில் தன் காதலிக்குக் கொடுப்பது ரோஜா மலர்களேயாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக பேரிகை பகுதியில் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ரோஜா சாகுபடியாளர்கள் பல லட்சம் செலவில், பசுமைக்குடில்கள் அமைத்தும், தோட்டங்களிலும் மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், ஆண், பெண் தொழிலாளர்கள், ரோஜா மலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என சுமார் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் வகை சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பருவ நிலை மாற்றம் காரணமாக ரோஜா மலர் உற்பத்தி குறைந்து சுமார் 80 லட்சம் மலர்களே உற்பத்தி ஆனது. அதில் கடந்த 10-ந்தேதி வரை சுமார் 20 லட்சம் மலர்கள் ஏற்றுமதி ஆனது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பருவ நிலை மாற்றம், கடும் பனி மற்றும் குளிர்கால நோய்கள் ரோஜா செடிகளை தாக்கியதால், ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்து போனது. குறைந்த அளவிலான மலர்களே ஏற்றுமதி ஆன போதிலும் நல்ல விலை கிடைத்திருப்பதால், ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, காதலர் தினத்திற்கு மட்டுமின்றி, சுப நிகழ்ச்சிகள், மகாசிவராத்திரி உள்ளிட்ட மற்ற கொண்டாட்டங்களுக்கும் அதிகளவில் ரோஜா பூக்கள் தேவைப்படுவதால் உள்ளூர் சந்தையில், நல்ல வரவேற்பு கூடுதல் விலை மற்றும் உடனடியாக பணம் கிடைத்து வருவதால் உள்ளூர் விற்பனைக்கு, மலர் சாகுபடியாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பூ மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளன.
நேற்றைய நிலவரப்படி 20 மலர்கள் அடங்கிய கொத்து ரூ.650 முதல் ரூ.700 வரை விற்கப்பட்டது. ரோஜா மலர் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதால், ஒரு மலரின் விலை ரூ.25 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம், உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தரமான ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் கூறினர்.
- கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
- ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத் துறை தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு, கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், அருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாத முனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச் சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு 9 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
2025-2026-ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, "9 கோவில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோவில்கள் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
- குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
- கடும் குளிரால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் தயக்கம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், 'குட்டி காஷ்மீர்' போல் காட்சியளிக்கிறது.
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது.
அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப்புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.
தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகாலையில் ஏற்படும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு, பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னும் குறையாத உறைபனி தாக்கம் காரணமாக, ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- தண்டவாள பகுதிகளில் அமர்ந்திருப்பதோ, தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதோ வேண்டாம்.
- வாகன ஓட்டிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட அறிவுரை.
மேலசொக்கநாதபுரம்:
மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு தினசரி காலை, மாலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் இருந்து போடிக்கு மதுரை வழியாகவும், போடியில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இன்று தண்டவாளத்தின் அதிர்வு, அசைவு மற்றும் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிர்வு மற்றும் நகர்வு ஆய்வு ரெயில் இன்று மதுரையில் இருந்து போடிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனத்தில் ரெயில் என்ஜின் மற்றும் தண்டவாள அதிர்வு அறியும் கருவி பெட்டி ஒன்று, அதிகாரிகள் பணியாளர்கள் ஆய்வு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு வருகிறது.
காலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் மதுரையிலிருந்து போடிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓ.எம்.எஸ். ஆய்வு ரெயில் வரவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக 110 கிலோ மீட்டர் வேகம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து போடி வரை உள்ள தண்டவாள இருப்புப் பாதைகளில் அதிர்வுகள் மற்றும் நகர்வுகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆய்வு பரிசோதனை என்றாலும் 120 கிலோமீட்டர் வேகத்தில் வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் தண்டவாள பகுதிகளில் அமர்ந்திருப்பதோ, தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் பொழுது எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






