என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அவர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்கு தெரியும் - அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பிரேமலதா கண்டனம்
    X

    அவர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்கு தெரியும் - அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பிரேமலதா கண்டனம்

    • தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
    • எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வின் 26-வது ஆண்டு கொடிநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனு இன்று கொடுத்திருக்கிறோம். இதே நாளில் தான் ஏற்கனவே 2011-ம் ஆண்டு விஜயகாந்த் அவரது விருப்ப மனுவை கொடுத்தார். இப்போது மீண்டும் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனுவை இன்று நான் கொடுத்திருக்கிறேன்.

    2-வது விருப்பமனுவை நான் கொடுத்திருக்கிறேன். 3-வது விருப்பமனுவை விஜய பிரபாகர் கொடுத்து உள்ளார். இன்று நிர்வாகிகள், தொண்டர்கள், பெருவாரியானோர் விருப்ப மனு கொடுத்து உள்ளனர்.

    இந்த தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நாங்கள் உழைப்பால் வெற்றி பெற்று வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்போம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நாங்கள் தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லும் போது, நாங்கள் 2 பக்கமும் பேசுவதாக தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியைதான் இந்த முறை நாங்கள் அமைப்போம்.

    தே.மு.தி.க.வை பொருத்த வரைக்கும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    கேள்வி: தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?

    பதில்: தே.மு.தி.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கும் தெரியும். அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனால் அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்ட கண்ணியமான கட்சி. யாருடைய கருத்தும் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

    கேள்வி: ஆட்சியில் பங்கு என்பதில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன?

    பதில்: ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது. அந்த உரிமையை பகிர்ந்தளிக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இதற்கான பதிலாக இருக்கும். இதுவரையில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறோம் என்பது யாருக்குமே தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×