என் மலர்
இந்தியா
- இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள்.
- அதில் நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள்தான் இருப்பார்கள் என்றார்.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர்ஜாதியினர்) ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இது தெரியும்.
நம் நாட்டில் தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்துப் பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள்தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.
காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ராகுல் காந்தி உயர்ஜாதியினரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
- இதையடுத்து தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை மறுதினம் அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால் சிறப்பு சடங்குகள் மூலம் பணமழை பொழிய வைப்போம் என ஆசைவார்த்தை.
- வங்கிகளில் டெபாசிஸ்ட் செய்ய முயன்றபோது ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோசடி அம்பலம்.
2000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால், விசேஷ சடங்குகள் நடத்தப்பட்டு பணமழை பொய்யும் என மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 10 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு புழக்கத்தில் இல்லை. இருந்தபோதிலும், இது குறித்து அறிந்திராத மக்களிடம் ஒரு குறிப்பிட்ட சீரியல் நம்பர் கொண்ட நோட்டுகளை இந்த கும்பல் சேகரித்துள்ளது. விசேஷ சடங்குகள் மூலம் பணமழை பொழியும் என ஆசைக்காட்டி இவ்வாறு செய்துள்ளனர். போலீசார் இந்த கும்பலிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.
குறிப்பிட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் அழித்து வேறு நம்பர் எழுதப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வங்கி கடந்த மாதம் புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி 40 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய முயன்றபோது, கப்பன்பெட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய இரண்டு கூட்டாளிகளை அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின் அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கியில் டெபாசிட் செய்ய அவர்கள் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அடுத்த நாள் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட M, N, O, P மற்றும் G சீரியல் நோட்டுகளை கேட்டு வாங்கியுள்ளனர்.
- பயணிகள் ரெயில் முன்னால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில்மீது மோதியது.
- இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.
இந்நிலையில், இந்த ரெயில் பாதையில் இன்று பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் ரெயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில்மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.
இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர்.
இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
- மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்
தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.
அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.
திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.
இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது
- தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
பாட்னா:
பீகாரில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் அரசியல் பகையால் பிரிந்து கிடக்கிறது. அவரது மகன்கள் தேஜ்பிரதாபும், தேஜஸ்வியும் எதிர் எதிராக களம் இறங்கிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தந்தை லல்லு பிரசாத் யாதவ்வை பிரிந்துள்ள அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் ஜன்சக்தி ஜனதா தளம் (ஜே.ஜே.டி.) என்ற கட்சியை தொடங்கினார். தேர்தலில் மஹீவா சட்டசபை தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் இவர் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவருக்கு எதிராக அவரது தம்பியும் முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் ரவுசான் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்தார். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு அவர் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் (தேஜஸ்வி யாதவ்) எனக்கு எதிராக பிரசாரம் செய்து இருப்பதால் அவர் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் நான் அதையே செய்வேன். கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
மஹீவா மக்கள் விரும்பினால் இந்த முறை நான் முதல்-மந்திரி ஆவேன். எனது கட்சி 20-ல் இருந்து 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்
ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பி இடையே நடந்து வரும் இந்த மோதல் பீகார் அரசியலை சூடாக்கி இருக்கிறது. தேஜ்பிரதாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் குடும்பத்தை விட்டும் அவர் பிரிந்தார். தற்போது அவருக்கு எதிரான விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
- அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான்.
அரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள நூலகத்திற்கு தினமும் படிக்க செல்வது வழக்கம். சிறுமியை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அவரும் நூலகத்திற்கு சென்று வருவார்.
இந்நிலையில் வழக்கம் போல் சிறுமி நூலகத்திற்கு வந்தார். அவர் வருவதை அறிந்து அங்கு காத்திருந்த அந்த வாலிபர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான். மன ரீதியாக என்னை துன்புறுத்தினான் என்று கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் வாலிபர் துப்பாக்கியை விட்டுச்சென்றுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர்.
அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது.
- காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும்.
இந்தியாவில் வேகமாக நகர்மாயமாகிய நகரங்களில் ஒன்று டெல்லி. காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் பெருக்கத்தால் தொடர்ந்து காற்று மாசு இங்கு அதிகரித்து வருகிறது. இது தற்போது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது. காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும்.
டெல்லியில் உள்ள நொய்டா, காஜியாபாத்தில் 329-கவும், அலிப்பூரில் 421-கவும், வஜீர்பூர் மற்றும் ஜகாங்கிர்புரியில் 404-கவும், உள்ளது. காற்றின் தரம் மோசமாக உள்ளதால் தொடர்ந்து மூடுபனி நிலவி வருகிறது. நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியாக உயர்ந்தது. பருவ கால வெப்பநிலை சராசரியை விட 1.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக டெல்லி மாசுகட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
- பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அதானி பவர் லிமிடெட் அமைக்கிறது.
- பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதானி பவர் லிமிடெட் நிறுவனம் பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இந்தத் திட்டத்திற்காக, பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தில் மின்சாரம் பீகார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.
இந்நிலையில், பீகார் அரசுக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் அரசு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்ற அதிகமான விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
2017-2024 க்கு இடையில் ஆர்.கே. சிங் மத்திய மின்சார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
- மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு 8 மணியளவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்பவர் ஆண் நண்பரை விரட்டிவிட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளதாக கூறி இருந்தார்.
அண்ணாமலை இப்படி பேசியதை வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்று பேட்டி அளித்ததாகவும், ஆனால் அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆதாரங்களை வழங்கவில்லை. எனவே இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதுதொடர்பாக நீதிபதி, நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. இதுபோன்று அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். ஞானசேகரன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தார். மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






