என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sisters Dead"

    • அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்

    தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

    அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.

    திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.

    இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.

    இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது

    • வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
    • விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (வயது 67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 66).

    இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார்.

    அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள், தங்கை மீது மோதியது. இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சித்தி ரெயிலில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×