என் மலர்
திருவண்ணாமலை
- கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் திருவூடல் விழா முக்கியமானது.
ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் இந்த விழா நடக்கும். அதன்படி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு அருளாசி வழங்கினார். பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்தார்.
இதையடுத்து, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வரும் வைபவம் நடந்தது.
பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. அப்போது சுந்தரர் தூது சென்றார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு திரும்பினார்.
அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.
ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோன்று வருடம் தொடக்கத்தில் இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்தார். கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். பகல் 11 மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார்.
தொடர்ந்து, சாமியுடன் அம்பாள் சமாதானம் அடையும் மறுவூடல் உற்சவம் கோவில் 2-ம் பிரகாரத்தில் நடக்கிறது.
- மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
- திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி வருகிற 13-ந்தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 4.46 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆருத்ரா தரிசன வழிபாடும் 13-ந்தேதி நடைபெற உள்ளது. அப்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
- தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக, மிக கேள்விக்குறியாக உள்ளது.
- கேப்டன் விஜயகாந்த் கூறுவதைப் போல தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.
வேங்கிகால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் இன்று ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பார்வையிட உள்ளோம். மேம்பாலம் கட்டப்பட்ட 3 மாதத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி திருவண்ணாமலையில் இன்று மாலை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக, மிக கேள்விக்குறியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முதல், விக்கிரவாண்டியில் பச்சிளம் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கூறப்படுவது வரை சிறிய குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை எந்த பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசு சட்ட ஒழுங்கை கையில் எடுத்து எல்லோருக்கும் பாதுகாப்பை உருவாக்கி தர வேண்டும். இது அரசின் கடமை. ஏற்கனவே உள்ள கட்சிக் கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்ந்து உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைந்தால் 234 பகுதிகளிலும் தே.மு.தி.க. கூட்டணி வெற்றி பெறும்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது மிகவும் காலதாமதம். இந்த சோதனை முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும். லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது. நானும் வேலூர் மாவட்டம் தான். அங்கு என்ன என்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்.
யாரை சரி கட்டுவதற்காக அமைச்சர் டெல்லி போகிறார் என்பது தெரியவில்லை.
அந்த அளவிற்கு ஆளும் கட்சியில் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது.
அமைச்சர் வீட்டில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு "உள்ளங்கையில் நெல்லிக்கனியாய்" தெளிவுபடுத்த வேண்டும்.
சோதனையின் போது என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரிவதில்லை.
கேப்டன் விஜயகாந்த் கூறுவதைப் போல தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும். உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும்.
லஞ்சம், ஊழல் மட்டுமின்றி கனிம வள கொள்ளை மற்றும் மணல் கொள்ளை தலைவிரித்து ஆடுகிறது. இதை தடுக்கக்கூடிய வகையில் இந்த சோதனை அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அலங்கார ரூபத்தில் சாமி அம்பாள் எழுந்தருள, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.
மாட்டு பொங்கல் தினத்தன்று சாமி அம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி தந்து மாட வீதியில் வலம் வருவர். மாடவீதியில் 3 முறை வலம் வந்த பின்னர் மாலையில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும்.
மாட்டுப் பொங்கல் தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமான் பலகாரங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருவார்.
- வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
- தரிசனத்துக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக, வெளிமாவட்ட மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது.
அதோடு, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
நேற்று மாட வீதி வரை 1 கி.மீ. தூரம் நீண்டிருந்தது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்தனர்.
பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ. 50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. விரைவு தரிசனத்துக்காக ஒற்றை வழி தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், கிளி கோபுரம் நுழைவு வாயில்களில் நெரிசல் காணப்பட்டது.
தரிசனத்துக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
மேலும், பக்தர்கள் வருகை அதிகரித்ததால், திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாட வீதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டது.
ஆனாலும், வட ஒத்தைவாடை தெரு, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், மாட வீதியில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாகாலயாசர் (வயது45). இவரது மனைவி ருக்மணி பிரியா(40). மகள் ஜலந்தரி (17) மகன் ஆகாஷ்குமார் (15) ஆகியோர் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணமாக வந்தனர்.
அவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சூரியலிங்கம் அருகே தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்தனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. பண்ணை வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் சென்று பார்த்த போது அறை கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டுக்குள் 4 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன.
- பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் மகா தீப தரிசனம் நாளை அதிகாலையுடன் நிறைவுபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடை பெற்றது.
பின்னர், மூலவர் சன்னிதி முன்பு தங்கக் கொடி மரத்தில் கடந்த 4-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.
13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டன. ஜோதிப்பிழம்பாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டது.
பின்னர் அண்ணாமலையாரைக் குளிர்விக்கும் வகையில், ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதற்கிடையில், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை 11 நாட்கள் பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். அதன்படி, மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன.
இதையடுத்து மகா தீப மலையிலிருந்து, தீபக் கொப்பரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளை கொண்டு வரப்பட உள்ளது. பின்னர், அதிலிருந்து சேகரிக்கப்படும் கரு மையுடன், வாசனைத் திரவியம் சேர்க்கப்பட்டு, ஆரூத்ரா தரிசனத்தின்போது, ஸ்ரீ நடராஜருக்கு சாத்தப்படும். பிறகு, பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.
- இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பு நவபாஷாண முருகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நவபாஷாண முருகர் சில 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயர கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- தொழில் வளர்ச்சி என்ற முறையில் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
- விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.
திருவண்ணாமலை:
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நேற்று உழவர் பேரியக்க மாநில மாநாடு நடந்தது. அதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தொழில் வளர்ச்சி என்ற முறையில் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க. அரசு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது தி.மு.க. அரசு.
விவசாயிகளைக் காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது.
விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.
தமிழகத்தில் ஏற்படும் வறட்சி என்பது மனிதர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படுவது.
தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தா விட்டால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஆறுகளில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும்.
சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகில் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். 2025ல் போராட்ட தேதியை அறிவிப்பேன் என தெரிவித்தார்.
- மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது.
- இரவு முழுவதும் மலையில் தவித்த பெண்ணை வனத்துறையினர் மீட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த 13-ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கடந்த 1-ந் தேதி ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக அண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டது.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு அண்ணாமலையில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப தரிசன நாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது.
கடந்த காலங்களில் தீப தரிசன நாளில் டோக்கன் முறையில் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு அண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீப தரிசன நாளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி இன்றி பக்தர்கள் மலை மீது ஏறாதவாறு காவல்துறை, வனத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலை உச்சிக்கு ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் ஏறினர்.
இதில் ஒரு ஆண் மலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். வழி தெரியாமல் இரவு முழுவதும் மலையில் தவித்த ஒரு பெண்ணை வனத்துறையினர் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மலையில் இருந்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்தால் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
- இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.
2,688 அடி உயரமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் தீப தரிசனம் செய்தனர்.
தலைக்கு மேல் கைகளை தூக்கி மலையை பார்த்து வணங்கினர். வீடுகள் முன்பும், கடைகள் முன்பும் பலர் அகல் விளக்குகளை ஏற்றினர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நகரமே ஜொலித்தது.
மேலும் தீபத் தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். குறிப்பாக சின்ன கடைவீதி, தேரடி வீதி, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மிகுந்த நெரிசலுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மாலை தொடங்கி நாளை மாலை நிறைவடைகிறது.
எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர்.
பகலில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளேயும், வெளியேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது. பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் தொடர்ச்சியாக இன்று இரவு அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.
- மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
- ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.






